தமிழகம்

மத்திய அரசு அறிவிப்புகள் பண வீக்கத்தை குறைக்கும்-பிரதமருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி

சென்னை,

மத்திய அரசின் அறிவிப்புகள் பணவீக்கத்தை குறைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள நன்றி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு, கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

பெட்ரோல் லிட்டருக்கு ரூ.8, டீசல் லிட்டருக்கு ரூ.6 குறைத்திருப்பதும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழை பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள எரிவாயு இணைப்புகளுக்கு, ஆண்டுக்கு 12 உருளைகளுக்கு தலா ரூ.200 மானியம், பிளாஸ்டிக், நிலக்கரி, இரும்பு மற்றும் உருக்கு மீதான வரி குறைப்பு, கூடுதல் உர மானியம், சிமெண்ட் விலையை குறைக்க நடவடிக்கை என்ற பல்வேறு அறிவிப்புக்காக எனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களின் நாடி துடிப்பை உணர்ந்து சரியான நேரத்தில் அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களை அறிந்து சரியான நேரத்தில் இந்த அறிவிப்புகள் வெளியாகி இருக்கிறது. இது உண்மையில் மத்திய அரசின் சிறந்த வெளிபாடாக நான் கருதுகிறேன்.

இந்த நடவடிக்கை சாமானியர்களின், குறிப்பாக ஏழைகள் மற்றும் அடிதட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் மேம்படைய செய்யும் என்பதில் மாற்று கருத்தில்லை.

இதுபோன்ற நேரத்தில் மத்திய அரசின் அறிவிப்புகள், ஏழை, நடுத்தர மக்கள் மட்டுமின்றி, விவசாயம் மற்றும் தொழில் துறையினரும், மிகப்பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு பயனளிக்கும். மத்திய அரசின் அறிவிப்புகள் சந்தேகத்திற்கு இடமின்றி பணவீக்கத்தை பெருமளவு குறைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இந்திய பொருளாதாரம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் இந்திய அரசியலின் பன்முகத்தன்மை கொண்ட தலைமை பண்பால் வளர்ச்சி அடைந்து இருக்கிறது. இது நீங்கள் தைரியமாக எடுக்கும் முடிவுகளால் தான் சாத்தியமாகி இருக்கிறது.

மத்திய அரசின் அறிவிப்புகளால் எழை, எளிய மக்கள் மட்டும் அல்ல, அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனடைவார்கள் என நம்புகிறேன். இந்த நடவடிக்கையானது நாட்டை அபிவிருத்தி பாதையில் முன்னெடுத்து செல்வதற்கான உறுதியான அடித்தளத்தையும் வழங்கும். எனவே தங்களுக்கு கழகத்தின் சார்பிலும், என் சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கயைில் தெரிவித்துள்ளார்.