சிறப்பு செய்திகள்

தி.மு.க.வின் கைக்கூலி ஓபிஎஸ் – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் திண்டிவனம் அடுத்த நல்லாளம் கூட்ரோட்டில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் பி.அர்ஜுனன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், நகர செயலாளர் தீனதயாளன், மரக்காணம் ஒன்றிய செயலாளர்கள் நடராஜன், ரவி வர்மன், ஒலக்கூர் ஒன்றிய செயலாளர் பன்னீர்,

மரக்காணம் பேரூர் செயலாளர் கனகராஜ், பொதுக்குழு உறுப்பினர் தேவநாதன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜெயகிருஷ்ணன், மாவட்ட பாசறை செயலாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் இதில் கழக நிர்வாகிகள் மணிமாறன், ஏழுமலை, ரூபன்ராஜ், பிரகாஷ், செல்வராஜ், ராமலிங்கம், மாணிக்கம், சக்கரவர்த்தி, ஆதிபகவான், கனகவள்ளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், தலைமை கழக பேச்சாளர்கள் செல்வராஜ், வேதை சிவசண்முகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி.சண்முகம் பேசியதாவது:-

பேரறிஞர் அண்ணா வகுத்துக்கொடுத்த வழிமுறையை பின்பற்றிய இயக்கம் கழகம். கழகமே அண்ணா பெயரில் தான் உள்ளது. அண்ணா பிறந்தநாளை கொண்டாட தகுதியான இயக்கம் கழகம் தான். மேலும் 234 தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ஆனால் ஆளுங்கட்சி தி.மு.க.வோ ஒரு பொதுக்கூட்டம் கூட நடத்தவில்லை. ஆட்சி பொறுப்பேற்ற 16 மாதத்தில் விடியா அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. யார் இந்த அரசை நடத்துகிறார்கள் என்று ஸ்டாலினுக்கே தெரியாது. அவர் பொம்மை போல் உள்ளார்.

தி.மு.க. வின் தேர்தல் நேரத்தில் கொடுத்த 525 வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டுள்ளதா? 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பொய் கூறி வருகிறார்கள். விடியா அரசு மக்களுக்கு செய்தது என்ன. சொத்து வரியை 150 மடங்கு உயர்த்தியது. பால் விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வு ஆகியவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திமுகவினர் சொன்னதையும் செய்யவில்லை. கழக ஆட்சியில் இருந்த மக்கள் நல திட்டங்களான தாலிக்கு தங்கம், மடிக்கணினி ஆடு, மாடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை முடக்கி விட்டனர். இப்போது இயங்கி வரும் குவாரிகளில் அமைச்சர்களின் குவாரிகளே பயனடைந்து வருகின்றது. இதனால் ஜல்லி, மணல், சிமெண்ட் கட்டுமான கம்பி உள்ளிட்டவைகளின் விலைகள் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

13 திமுக அமைச்சர்களின் பெயரில் உள்ள வழக்குகளை அரசு நிலுவையில் வைத்துள்ளது. இந்த தி.மு.க. அரசு பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கியதில் ரூபாய் 1000 கோடிக்கும் மேல் ஊழல் செய்துள்ளது. விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் திமுகவினரே வல்லவர்கள் என்று சர்க்காரியா கமிஷன் அன்றே கூறியிருந்தது. கழகத்தில் இருந்த எட்டப்பனை வைத்து விடியா அரசு கழகத்தை சாய்த்து விடலாம் என்று தப்பு கணக்கு போட்டு விட்டது.

எட்டப்பர்களை கழகம் என்றும் மன்னிக்காது. கழகம் உருவானதிலிருந்து எத்தனையோ பேர் துரோகம் செய்து அதனால் அழிந்து போய் இருக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் தற்பொழுது அதன் வழியில் செயல்பட்டு வருகிறார். அவர் கழகத்தை உரிமை கொண்டாட தகுதி இல்லாதவர்.

திமுகவின் கைக்கூலியாக செயல்பட்டு வரும் ஓ.பி.எஸ்சை தொண்டர்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள். 1000 ஓ.பி.எஸ் வந்தாலும் இந்த கழகத்தை அசைத்துக்கூட பார்க்க முடியாது. ஓ.பி.எஸ் இன்று கழகம் என்பார், நாளை பாஜக என்பார், நாளை மறுநாள் திமுக என்பார். அவருக்கு கழகத்தில் இடமில்லை. கழகம் என்றும் தொண்டர்களை நம்பியே உள்ளது. தொண்டர்களே இதற்கு தலைமையானவர்கள்.

வயதானவர்களின் ஓய்வூதிய திட்டத்தையும் விட்டு வைக்காத திமுக அரசு மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. மேலும் தற்போது சிலிண்டர் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. ஆனால் கழக ஆட்சியில் சிலிண்டர் விலை குறைவாகவே இருந்தது. மேலும் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்ததை மக்கள் மறக்க மாட்டார்கள். 6 இலவச சிலிண்டர்களை அறிவித்த ஒரே கட்சி கழகம் மட்டுமே.

இப்போது திமுகவிற்கு ஏன் ஓட்டு போட்டோம் என்று மக்கள் தினந்தோறும் புலம்பி வருகின்றனர். திண்டிவனம்-மரக்காணம் இருவழி சாலையை நான்கு வழி சாலையாக மாற்றுவதாக கூறி அதில் 28 சதவீதம் கமிஷனுக்காக அமைச்சர் செய்யும் முறைகேடுகளை அதிகாரிகளும் மறைத்து வருகின்றனர்.

ஆனால் பொதுமக்களே அதை கண்டு குமுறி வருகின்றனர். சாலை விரிவாக்க பணியில் மரங்களுக்கு நடுவே சாலை அமைப்பது, மின் வழித்தடங்களை மாற்றியமைக்காமல் அதிலேயே சாலை அமைப்பதும் தி.மு.க.வின் மிகப்பெரிய சாதனை. இதுவே திராவிட மாடல் என்பது மக்களுக்கு தற்பொழுது புரிந்து வருகின்றது.

திராவிட மாடல் என்று கூறுவதற்கு கூட தகுதி இல்லாதவர்கள் தி.மு.க.வினர். இவர்கள் திராவிட மாடல் என்று கூறி பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர். இவற்றையெல்லாம் கண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவினருக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். மீண்டும் கழக ஆட்சி அமைந்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவோம்.

அநியாயம் செய்யும் தி.மு.கவினரை கழகம் ஒருபோதும் மன்னிக்காது. 1993ல் வைகோ நடத்திய மிகப்பெரிய பேரணியை அறிவாலயத்தை சென்றடையாமல் தடுத்து நிறுத்தி அறிவாலத்தையே காப்பாற்றியவர் புரட்சித்தலைவி அம்மா. மேலும் புரட்சித்தலைவி அம்மா மன்னித்ததை போல் மீண்டும் ஒரு தவறு நடக்காது. நன்றி கெட்டவர்கள் திமுகவினர்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.