தற்போதைய செய்திகள் திருப்பூர்

ஜவுளி உற்பத்தியாளர்கள் 2-வது நாளாக ஸ்டிரைக்-திருப்பூர்- கோவையில் 3 லட்சம் தொலாளர்கள் பாதிப்பு

திருப்பூர்

கோவை, திருப்பூரில் ஜவுளி உற்பத்தியாளர்கள் 2-வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இரண்டு மாவட்டங்களிலும் சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மற்றும் கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் 1500-க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்கள் பாவு நூலை கொள்முதல் செய்து கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களிடம் அதனை வழங்கி காடா துணி உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களை நம்பி பல்லடம், மங்கலம், வேலம்பாளையம் சோமனூர், அவிநாசி, தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர் உள்ளிட்ட திருப்பூர், கோவை மாவட்டங்களில் இரண்டு லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. நேரடியாகவும் மறைமுகமாகவும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர், கோவை மாவட்டங்களில் நாளொன்றுக்கு 100 கோடி ரூபாய் மதிப்பிலான காடா துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிலையில் நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் 15 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர். இப்போராட்டம் நேற்று இரண்டாவது நாளாக நீடித்தது.

நூல் விலை ஏற்றத்தை கண்டித்து ஏற்கனவே ஜவுளி உற்பத்தியாளர்கள் சார்பில் 50 சதவீத உற்பத்தி வேலை நிறுத்தம், நூல் கொள்முதல் நிறுத்தம், கடந்த 16, 17 தேதிகளில் முழுமையான வேலை நிறுத்தம் ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டனர். நூல் விலைக்கு ஏற்றபடி ஜவுளி விலை உயராத காரணத்தால் இந்த 15 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இப்போராட்டம் காரணமாக நாள் ஒன்றுக்கு கோவை, திருப்பூர் ஆகிய 2 மாவட்டங்களிலும் சேர்த்து 100 கோடி ருபாய் அளவிலான ஜவுளி உற்பத்தி வர்த்தகம் பாதிக்கப்படும்.

ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் விசைத்தறிகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான கூலி தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்படுவர்.