திருச்சி

விஷம் கொடுத்து கல்லூரி மாணவி கொலை-திருச்சியில் உறவினர்கள் போராட்டம்

திருச்சி,

திருச்சி அருகே கல்லூரி மாணவியை விஷம் கொடுத்து கொலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சிவயல் புத்தூரை சேர்ந்தவர் வித்யாலட்சுமி (வயது 19). தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 12-ந் தேதி மாணவி வித்யாலட்சுமி தனது தாத்தா வீட்டிற்கு செல்வதற்காக திருவெறும்பூர் பிளக் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறித்த 3 பேர் விஷம் கலந்த குளிர்பானத்தை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து மாணவி வித்யாலட்சுமியின் தாய் சாந்தி திருவெறும்பூர் பெல் காவல் நிலையத்தில் கடந்த 18-ந்தேதி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் பெல் போலீசார் வழக்குப்பதிந்து மாணவிக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவி வித்யாலட்சுமி மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து மாணவியின் இறப்புக்கு காரணமான 3 நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டும் திருவெறும்பூர் பெல் போலீசாரை கண்டித்து திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலை மலைக்கோவில் பகுதியில் மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பலமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டக்காரர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

கல்லூரி மாணவி ஒருவர் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.