சிறப்பு செய்திகள்

தண்ணீரை பாசனத்திற்கு முழுமையாக பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்-அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தில்

சென்னை,

மேட்டூர் அணையை முன்கூட்டியே திறப்பதால் தண்ணீரை பாசனத்திற்கு முழுமையாக பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் காவேரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக காவேரி ஆற்றில் நீர் அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பும் சூழ்நிலையில் உள்ளததையடுத்து, காவேரி டெல்டா பாசனத்திற்கான நீரை முன்கூட்டியே, அதாவது ஜூன் 12-ந் தேதிக்குப் பதிலாக மே 24-ந்தேதியன்று, அதாவது 20 நாட்கள் முன்பாக, முதலமைச்சர் திறந்துவிட இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீரை முன்கூட்டியே திறந்து விடுவதன் மூலம், விவசாயிகள் அதிக பரப்பளவில் பயிரிடுவதற்கும், சம்பா சாகுபடிக்கு தயாராவதற்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றாலும், திறந்துவிடும் தண்ணீர் அனைத்தும் வீணாகாமல் பாசனத்திற்கு பயன்படுத்தப்படுவதும் உறுதி செய்யப்பட வேண்டும்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்பதை கருத்தில் கொண்டு, அதற்கேற்ப டெல்டா மாவட்டங்களில் காவேரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய்களில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் தூர்வாரும் பணிகள், தடுப்பணை கட்டும் பணிகள், கரைகளை பலப்படுத்தும் பணிகள் ஆகியவை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக புகைப்படத்துடன் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

கல்லணையில் இருந்து பிரியும் கல்லணை கால்வாய் ஆற்றின் தரைத்தளம் மற்றும் கரையின் பக்கவாட்டுகளில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், மதகுகளை சீரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருவதாகவும், தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை சாலையில் கல்லணை கால்வாய் கிளை ஆறுகளில் பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், வெண்ணாறு,

காவேரி, குடமுருட்டி ஆறுகளில் தடுப்பணை கட்டும் பணிகள் இன்னும் முடியவில்லை என்றும், அடப்பன் பள்ளம் கீழ்ப்பாலத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த தருணத்தில் கல்லணை கால்வாயிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகும் அபாயம் உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடும் தண்ணீர் இந்த மாதம் 26 அல்லது 27 -ந்தேதியன்று கல்லணையை வந்தடையும் வாய்ப்பு உள்ளது என்றும், அங்கிருந்து அன்றே பாசனத்திற்காக நீரை திறந்துவிடும் பட்சத்தில், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணிகளும் பாதிக்கப்பட்டு தண்ணீர் வீணாகும் அபாயம் உள்ளது என்றும்,

ஒப்பந்ததாரர்கள் தூர்வாரும் பணிகளை அவசர கதியில் முடித்துவிடக்கூடிய நிலை ஏற்பட்டு அரசுக்கு பண விரயம் ஏற்படும் என்றும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே, மேட்டூரிலிருந்து திறந்து விடப்படும் நீரை முழுவதுமாக பயன்படுத்தும் வகையில், நீரை தேக்கி வைப்பதற்கான நீர் மேலாண்மை யுக்திகளை அரசு கடைபிடிக்க வேண்டுமென்று டெல்டா விவசாய சங்கங்கள் எதிர்பார்க்கின்றன.

“மக்களுக்கு உணவு பொருள்களை உண்டாக்கி தருவதும், தானே உணவாக அமைவதும் மழையே” என்ற வள்ளுவரின் வாக்கினை மனதில் நிலை நிறுத்தி, மேட்டூர் அணை முன்கூட்டியே திறப்பதால் காவேரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய்கள் மற்றும் கிளை கால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகள் பாதிக்கும் என்பதையும்,

இதன் காரணமாக நீர் வீணாகக்கூடும் என்பதையும் கருத்தில் கொண்டு, அனைத்து தரப்பினரிடமும் கலந்தாலோசித்து, மேட்டூரிலிருந்து திறந்துவிடப்படும் நீர் அனைத்தும் பாசனத்திற்கு முழுமையாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.