சிறப்பு செய்திகள்

ஆட்சியை விட்டு தி.மு.க.வை அகற்றும் வரை ஓய மாட்டோம்-எதிர்க்கட்சி தலைவர் சபதம்

சென்னை

மக்கள் நலன் ஒன்றை மட்டுமே தனது வாழ்நாள் குறிக்கோளாக கொண்டு அல்லும் பகலும் அயராது பாடுபட்டு, தவ வாழ்வு வாழ்ந்த இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருப்பெயரை கொண்டு செயல்பட்டு வரும் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவையின் செயல்பாடுகளை ஊக்குவித்திடும் வகையில், ஆற்ற வேண்டிய கழக பணிகள் மற்றும் மக்கள் பணிகள் குறித்தும்,

கழக ஆட்சிக்காலங்களில் மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு நிகழ்த்தப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க சாதனைகளை பட்டிதொட்டியெங்கும் வாழும் மக்களுக்கு விளக்கிடும் வகையிலும், 30.5.2022, 31.5.2022 ஆகிய இரண்டு நாட்கள் தலைமை கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் “கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர்களுக்கு, செயல்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்’’ நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை,

கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ செய்திருந்தார்.

அதன்படி, தலைமை கழகத்தில் நேற்று கழக புரட்சித்தலைவி அம்மா பேரவையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த, கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர்,

தலைமை கழக கூட்ட அரங்கின் நுழைவு வாயிலில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது திருஉருவ படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அதன் பின் கழக அம்மா பேரவை சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது
இதனைத்தொடர்ந்து, நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு, கழக புரட்சித்தலைவி அம்மா பேரவையின் மாவட்ட செயலாளர்கள் ஆற்ற வேண்டிய கழகப்பணிகள், மக்கள் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை வழங்கினர்.

அதைத்தொடர்ந்து, தலைமைக்கழக நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர் பெருமக்களும் கருத்துரை வழங்கினர். அதே போல், மாவட்ட கழக செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இக்கூட்டத்தில் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவையின் மாநில, மாவட்ட செயலாளர்களும், மாவட்ட நிர்வாகிகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டனர்.

கழக புரட்சித்தலைவி அம்மா பேரவையின் சார்பில் தலைமை கழகத்தில் நேற்று நடைபெற்ற பயிற்சி முகாமை முன்னிட்டு, தலைமை கழக நுழைவு வாயிலில் அலங்கார முகப்பு அமைக்கப்பட்டு, டிரம்ஸ் இசை வாசிக்கப்பட்டது. மேலும், சாலையின் இரு மருங்கிலும் கழகக் கொடி தோரணங்களும், வரவேற்பு பதாகைகளும் அழகுற அமைக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.

முன்னதாக அம்மா அரசின் சாதனை திட்ட மலரை கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் வெளியிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புரட்சித்தலைவி அம்மா காலத்திலிருந்து இதுவரை சிறப்பாக, எழுச்சியாக இந்த பேரவை எப்படி நடைபெற வேண்டும் என்பதற்கு மற்ற இயக்கத்திற்கு ஒரு முன்னோடியாக திகழ்கிறார். எதிலும் முந்தி கொள்வார். பல்வேறு அணிகள் தலைமையிலிருந்தால் கூட, முதன்மை அணியான பேரவை இருக்க வேண்டும் என்று அக்கறை கொண்டவர்.

ஆளும் கட்சியாக நாம் இருந்து செயல்பட்டோம். இப்போது எதிர்க்கட்சியாக இருக்கிறோம். இன்று தமிழகத்தில் அதிக நாட்கள்
ஆட்சியிலிருந்த கட்சி கழகம் தான். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி மறைவுக்கு பிறகு இருபெரும் தலைவர்களின் வழியிலே அம்மாவின் அரசு சிறப்பாக செயல்பட்டு, இன்றைக்கு ஏழை,எளிய,ஒடுக்கப்பட்ட கடைக்கோடியில் வாழ்கின்ற மக்களுடைய பிரச்சினையை கூட தீர்த்து வைத்த அரசு என்றால் அது அம்மாவின் அரசு தான் என்று பெயர் சொல்லுகின்ற அளவிற்கு 30 ஆண்டுக்கால ஆட்சி இருந்தது. தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்து ஓராண்டு காலம் ஆகிறது.

இந்த ஓராண்டு காலத்தில் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. இந்த ஆட்சி எப்போது போகும் என்று மக்கள் பேசுகின்ற அளவுக்கு ஒரே வருடத்தில் மக்கள் இதனை புரிந்து கொண்டார்கள். ஆட்சி பொறுப்பேற்ற ஒரு வருட காலத்திலே எந்த ஒரு புதிய திட்டத்திற்கும் செயல்வடிவம் கொடுக்கப்படவில்லை. ஏற்கனவே அம்மாவின் அரசு போட்ட திட்டங்கள் முடிவுற்று, அந்த பணிகளை திறந்து வைத்து கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

ஏற்கனவே அம்மா அரசால் போடப்பட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிக் கொண்டிருக்கிறார். இது எல்லோருக்கும் தெரியும். நாட்டு மக்களுக்கும் தெரியும். இதனை முறையாக மக்களிடம் நாம் எடுத்து சொல்ல வேண்டும். இதுதான் பேரவை நிர்வாகிகளின் கடமை. இதற்காக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கழக ஆட்சியின் சாதனை பட்டியலை புத்தகமாக நம்மிடத்தில் அளித்துள்ளார்.

இதனை நீங்கள் மக்களிடத்திலே முழுமையாக கொண்டு சேர்க்க வேண்டும். ஏன் என்றால் இன்றைக்கு பத்திரிகையும், ஊடகமும் அவர்கள் (தி.மு.க.) கையில் இருக்கிறது. நமது செய்திகளை வெளியிடுவதில்லை. படங்களும் சரியாக வருவதில்லை. எனவே நாம் மக்களை நேரடியாக சந்தித்து, நாட்டினுடைய நிலைமைகளை எடுத்து சொல்ல வேண்டியது கடமை.

இங்கே இருக்கின்ற பேரவை பொறுப்பாளர்கள் மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, ஒன்றிய பகுதிகளில் உள்ள பேரவை நிர்வாகிகளோடு தொடர்பு கொண்டு, அம்மாவின் அரசு நாட்டு மக்களுக்கு செய்த சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு
சேர்க்க வேண்டும். தேர்தல் நேரத்தில் செய்த சாதனைகளை பக்கம் பக்கமாக விளம்பரம் அளித்தோம்.

அம்மாவின் அரசு செய்த சாதனை செய்த பட்டியலை பத்திரிகை மூலம் நாம் வழங்கினோம். அதனை எல்லாம் நாங்கள் உங்களுக்கு அளிக்கிறோம். எண்ணிடலங்கா சாதனைகளை நாம் செய்துள்ளோம். மக்கள் மனதில் நீங்க முடியாத அளவுக்கு சாதனைகளை நாம் செய்துள்ளோம். அந்த சாதனைகள் எல்லாம் சிந்தாமல், சிதறாமல் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

இன்றைய ஆட்சியாளர்கள் பத்திரிகையையும், ஊடகத்தையும் கையில் வைத்துக்கொண்டு, அவதூறு பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். கழக நிர்வாகிகள் மீதும், தொண்டர்கள் மீதும், முன்னாள் அமைச்சர்கள் மீதும், பொய் வழக்குகளை போட்டு, நம்முடைய பணியை முடக்கப் பார்க்கின்றார்கள். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். காலத்திலே முடக்க பார்த்தார்கள். அது முறியடிக்கப்பட்டது.

அதற்கு பிறகு புரட்சித்தலைவி அம்மா மீது எவ்வளவோ வழக்குகளை போட்டார்கள். அம்மாவுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையில்கூட அதனை எல்லாம் தகர்த்தெறிந்தார். அவர்கள் வழியை பின்பற்றி நாம் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இன்றைக்கு இருக்கின்ற நிலைமையில் யார் படம் வருகிறதோ இல்லையோ,முதலமைச்சரின் படம் கண்டிப்பாக பத்திரிகையில் வரும்.

மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். நாம் விழிப்போடு இருக்க வேண்டும். மக்களிடம் அவதூறான செய்திகளை பரப்பி, தி.மு.க. ஆட்சியை தக்க வைத்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணமே ஊடகமும், பத்திரிக்கையும் தான். இரண்டும் இல்லை என்றால் ஆட்சி காணாமல் போயிருக்கும். காற்றோடு,காற்றாக கரைந்து போயிருக்கும். இந்த அரசை ஊடகமும், பத்திரிக்கையும் தான் காப்பற்றி கொண்டிருக்கிறது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியில் உள்ள நிர்வாகிகளுக்கு துண்டு பிரசுரங்கள் மூலம் தமிழகத்தில் நடக்கும் அவலங்களை நீங்கள் எடுத்து சொல்லுங்கள். கழக ஆட்சியில் பாலியல் வன்கொடுமை நடந்தபோது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்தோம். ஆனால் வேண்டுமென்றே திட்டமிட்டு ஊடகங்களையும், பத்திரிகைகளையும் கையில் வைத்துகொண்டு அவதூறு செய்தியை பரப்பினார்கள்.

ஆனால் இன்றைக்கு நிலைமை என்ன? எங்கு பார்த்தாலும் கூட்டு பாலியல் பலாத்காரங்கள். சிறுமிகள் பாலியல் பலாத்காரம். அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு எல்லாம் முடிவு கட்ட வேண்டும்.

இந்த அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். இதனை மக்களிடத்தில் முழுமையாக கொண்டுபோய் சேர்க்க வேண்டும். இது ஒவ்வொருடைய கடமை. நாம் பொய் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. உண்மையை சொன்னால் போதும். நாட்டில்
நடக்கின்ற உண்மையை எடுத்து சொன்னாலே இந்த ஆட்சியை தூக்கி எறிந்து விடுவார்கள்.

ஒரே வருடத்தில் இந்த ஆட்சி எப்போது போகும் என்று மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஏற்றவாறு நீங்கள் செயல்பட வேண்டும். பேரவையில் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். 20 வயதிருந்து 40 வயதுக்குள் இருப்பவராக சேருங்கள். படித்தவர்களை சேருங்கள். உண்மையான உறுப்பினர்களை சேருங்கள். அப்போதுதான் இந்த பேரவை வலிமை பெறும்.

ஆட்சியாளர்களின் தவறுகளை ஆங்காங்கே எடுத்து சொல்லுங்கள். மாவட்டங்களில் பல தவறுகள் நடக்கிறது. அதற்கு ஏற்றவாறு பணிகளை செய்ய வேண்டும். திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. லஞ்சம் இல்லாத துறையே கிடையாது. இந்தியாவிலே முதன்மை முதலமைச்சர் என்று எப்போது பார்த்தாலும் ஸ்டாலின் பேசிக்கொண்டே இருக்கிறார். ஊழல் செய்வதிலே முதன்மை முதலமைச்சர் ஸ்டாலின்.

சட்டம்- ஒழுங்கு சீர்குலைவில் முதல் மாநிலம் தமிழ்நாடு. இன்றைக்கு போதை பொருட்கள் அதிகமாக நடமாடுவதாக அவர்கள்தான் சொல்கிறார்கள். இதைதான் நாமும் சொல்லி வருகிறோம். இன்றைக்கு அரசு ஊழியர்கள் தவறு செய்து விட்டோம் என்று பேசி கொண்டிருக்கிறார்கள். கழக ஆட்சி சிறந்த ஆட்சி என்று நற்சான்றிதழ் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். அரசு ஊழியர்கள் யாரையும் பாராட்ட மாட்டார்கள்.

தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபொழுது பல்வேறு அறிவிப்புகளை அளித்தார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று சொன்னார்கள். இன்னும் பல திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று சொன்னார்கள். நிறைவேற்றவில்லை என்றாலும் பரவாயில்லை. இருப்பதையும் பிடுங்கி விட்டார்கள். அரசு ஊழியர்களின் நன்மைகளையும் பிடுங்கி விட்டார்கள். அரசு ஊழியர்கள் இந்த அரசு மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

நமக்கு நல்ல சாதகமான சூழ்நிலை உள்ளது. இன்றைக்கு மக்களும் நம் பக்கம் இருக்கிறார்கள். அரசு அதிகாரிகளும் இருகின்றார்கள். நாட்டு மக்கள் ஒட்டுமொத்தமாக நம் பக்கம் இருக்கிறார்கள். இதனை நாம் முழுமையான பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றைக்கு ஒவ்வொரு தொண்டரும் ஆட்சிக்கு வரவேண்டும் என்று உழைத்து வருகிறீர்கள்.

தேனீக்கள்போல எறும்பு போல சுறுசுறுப்பாக செயல்பட்டு, கழக ஆட்சியில் நடைபெற்ற நன்மைகளை நாட்டு மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். தி.மு.க. ஆட்சியின் ஊழல்களை நாட்டு மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். துறை வாரியாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை எடுத்து சொல்ல வேண்டும். இந்த ஆட்சி ஒரு அவல ஆட்சி என்பதை புள்ளி விவரத்தோடு நாம் எடுத்து சொல்ல வேண்டும். பல ஆதாரங்கள் நம்மிடத்தில் இருக்கின்றன. ஆட்சியை விட்டு தி.மு.க.வை அகற்றும் வரை ஓயக்கூடாது.

முன்னாள் அமைச்சர் உதயகுமார் குறிப்பிட்டதுபோல பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். இப்போது எந்த புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை. கல்வியில், மருத்துவதுறையில், உள்ளாட்சியில், உயர்கல்வியில், வேளாண்மையில் என அனைத்து துறைகளிலும் அம்மா அரசில் விருதுகளை பெற்றோம். இப்படி அனைத்து துறைகளிலும் விருதுகளை பெற்ற ஒரே அரசு அம்மாவின் அரசு.

கழக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை பேணி காப்பதிலும் முதன்மை மாநிலம் தமிழ்நாடு, எனவே உழைப்பு ஒன்றுதான் நமக்கு உயர்வு தரும். நமக்கு மக்களிடத்தில் எதிர்ப்பு கிடையாது. அந்த உழைப்பை நம்பினால் நிச்சயமாக வெற்றி பெறுவோம். இயக்கத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்.

நன்றாக கட்சி பணி செய்யுங்கள். உழைக்க வேண்டும். மீண்டும் கழக அரசு அமைய அனைவரும் ஒன்றுகூடி ஒருமித்த கருத்தோடு பாடுபடவேண்டும். பேரவை என்றாலே தனி சிறப்பு உண்டு. அந்த தனி சிறப்பை பேணி காத்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.