முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை,
தொடர் கொலைகளால் தமிழகத்தில் சட்டம்,ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழக அலுவலகத்தில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:-
கேள்வி:- தன்னை அமைச்சராக அறிவிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டதற்கு கட்சி தலைமைக்கு இதுபோன்ற தர்ம சங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது என்று உதயநிதி தெரிவித்துள்ளாரே?
பதில்:- ஸ்டாலின் அவருடைய அப்பா தானே? பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுகிறார்கள் என்பதுபோலத்தான் இதனை நாம் பார்க்க முடியும். ஒரு திரைப்படத்தில் பாடல் வருவது போல நாடகம் விடும் நேரம் தான். உச்சக் காட்சி நடக்குதம்மா? என்ன மாதிரியாக நாடகம் போடுகிறார்கள் இவர்கள்.
ஏன் உதயநிதியை அமைச்சராக போட வேண்டியது தானே? அங்கு வாரிசு அரசியல் தானே நடக்கிறது. இதற்கு ஏன் இதுபோல ஒரு நாடகத்தை நடத்த வேண்டும். இதுதான் மக்களின் கேள்வி. நாட்டில் எத்தனையோ பிரச்சினை உள்ளது. விலைவாசி ஏறிக்கொண்டே செல்கிறது.
பேருந்தில் சென்றால் நடத்துனருக்கு அடி. காவல்துறையினருக்கு அடி. காவல்துறையை வசைபாடுகிறார்கள். எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்கு. பத்திரிகைகள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். அவற்றை ஒடுக்க வேண்டும்.
500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்து விட்டு மக்கள் எதிர்பார்க்கும் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. சட்டம்- ஒழுங்கு பிரச்சினை. திருவள்ளூரில் தொழிலதிபரை கடத்தி பணம் பறிக்கும் செயலை ஒரு கும்பல் செய்துள்ளது.
ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, சட்டம்- ஒழுங்கு கெட்டு குட்டிச்சுவராகி மக்கள் வாழ முடியாத ஒரு சூழ்நிலை உள்ளது. இப்படி ஒரு நிலைமை இருக்கும்போது இப்படி ஒரு நாடகத்தை இவர்கள் அரங்கேற்றுகிறார்கள்.
அம்மா காலத்தில் காவல்துறையிடம் ஆளும் கட்சி தலையீடோ, அதிகார தலையீடோ இருக்காது. காவல்துறை சுதந்திரமாக அவர்களின் கடமையை செய்வார்கள். புரட்சித்தலைவர் எம்ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா காலத்தில் காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக இருந்தது.
ஆனால் இன்று அப்படியா உள்ளது. அதிகார தலையீடு, ஆட்சியாளர் தலையீடு, கட்சியினர் தலையீடு இருக்கும்போது காவல்துறை எப்படி செயல்பட முடியும். ரவுடியை பிடித்தால் விடு என்கிறார்கள். மீண்டும் அந்த ரவுடி பெரிய தவறு செய்யத்தான்
பார்ப்பான். இந்த ஆட்சியில் சமூக விரோதிகளுக்கு குளிர் விட்டு போய் விட்டது.
இந்த ஆட்சியில் எது வேண்டுமென்றாலும் செய்யலாம். நடவடிக்கை இருக்காது என்ற எண்ணம் மேலோங்கும் காரணத்தினால்தான் தினந்தோறும் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, சர்வ சாதாரணமாக நடக்கிறது. உள்ளங்கை நெல்லிக்கனி போல தினந்தோறும் இதனை நாம் பார்த்து வருகிறோம். இதனை யாரும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.
அமைச்சர் தங்கம் தென்னரசு முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து பேசி வருகிறார். ஒரு பொய்யை திரும்ப, திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற அடிப்படையில் சட்டம் ஒழுங்கு மோசமானதை இன்றைக்கு மறைக்க பார்க்கிறார்கள். நிச்சயமாக இதனை மறைக்க முடியாது.
முதலமைச்சரை பொறுத்தவரையில் காவல்துறை அவரின் கட்டுப்பாட்டில் இல்லை. காவல்துறையும் கடமையை செய்யவில்லை. அரசும் கடமையை செய்யவில்லை. தற்போது தமிழகத்தில் ரவுடிகள், சமூக விரோதிகள் ராஜ்ஜியம் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் கூறினார்.