பழைய பேருந்து நிலையத்துக்கு திருப்பூர் குமரன் பெயர் வைக்க வேண்டும்

மாநகராட்சி ஆணையரிடம், பொள்ளச்சி வி.ஜெயராமன் தலைமையில் கோரிக்கை மனு
திருப்பூர்,
எடப்பாடியார் ஆட்சியில் கட்டப்பட்ட பழைய பேருந்து நிலையத்துக்கு திருப்பூர் குமரன் பெயர் வைக்க வேண்டும் என்று திருப்பூர் மாநகராட்சி ஆணையரிடம் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளச்சி வி.ஜெயராமன் தலைமையில் கழகத்தினர் மனு அளித்தனர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமையில், திருப்பூர் ஒன்றிய கழக செயலாளரும், திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.என்.விஜயகுமார், திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரும்,
முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சு.குணசேகரன், மாநகராட்சி எதிர்க்கட்சிக்குழு தலைவரும், 42-வது வார்டு கவுன்சிலருமான அன்பகம் திருப்பதி ஆகியோர் முன்னிலையில் கழக நிர்வாகிகள், திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார்பாடியை நேரில் சந்தித்து இரண்டு மனுக்களை அளித்தனர்.
அந்த மனுக்களில் கூறப்பட்டிருப்பதாவது:-
30-05-2022 அன்று நடைபெற்ற திருப்பூர் மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டத்தில் சிறப்பு தீர்மானமாக புதுப்பிக்கப்பட்ட பழைய பேருந்து நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம் என பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேற்படி பேருந்து நிலையமானது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமியால் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்று தற்போது முடியும் தருவாயில் உள்ளது.
அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்காலத்திலேயே அந்த பேருந்து நிலையத்திற்கு தியாகி திருப்பூர் குமரன் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டது. மேற்படி பேருந்து நிலையத்திற்கு உயிர் பிரியும் வரை கையில் கொடியை ஏந்தி திருப்பூரின் பெருமையை இந்திய தேசம் எங்கும் கொண்டு சேர்த்த சுதந்திர போராட்ட தியாகி கொடிகாத்த குமரன் பெயரை வைப்பது தான் பொருத்தமாக இருக்கும். ஆகவே இந்த பேருந்து நிலையத்திற்கு சுதந்திர போராட்ட தியாகி கொடி காத்த குமரன் பேருந்து நிலையம் என்று பெயர் வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தற்போது அதிகமாக உறுப்பினர்களை (18 பேர்) கொண்ட அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர்களுக்கு உரிய முன்னுரிமையை கொடுத்து மாமன்றத்தில் இடமளிக்க வேண்டும். அதில் பாரபட்சம் காட்டக்கூடாது. மேலும், மாமன்றத்தில் எதிர்க் கட்சிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஏற்கனவே, எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான அறை ஒதுக்கீடு சம்பந்தமாக கோரிக்கை வைத்துள்ளோம், அதுவும் நிறைவேற்றப்படவில்லை.
மகளிர் மாமன்ற உறுப்பினர்கள் அதிகமாக கொண்ட எங்கள் அ.இ.அ.தி.மு.க. குழு மாமன்ற உறுப்பினர்களுக்கு அறை ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் செய்யாமல் உடனடியாக ஒதுக்கித்தருமாறும், மேலும் சொத்துவரி உயர்வுக்கு எந்தெந்த கட்சியில் எத்தனை பேர் ஆட்சேபனை தெரிவித்தனர் என்பதை பதிவு செய்த மாநகராட்சி நிர்வாகம், எந்தெந்த கட்சியை சேர்ந்த எத்தனை மாமன்ற உறுப்பினர்கள் சொத்துவரி உயர்வுக்கு ஆதரவு தெரிவித்தனர் என்பதையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்வின் போது, முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி, கவுன்சிலர்கள் கண்ணப்பன், ஆர்.ஏ.சேகர், தங்கராஜ், சின்னச்சாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கீதா சந்திரசேகர், ஐஸ்வர்யா மகராஜ், கழக நிர்வாகிகள் மார்க்கெட் சக்திவேல், வக்கீல் முருகேசன், பி.கே.எம்.முத்து, தம்பி மனோகரன், சந்திரசேகர், பட்டுலிங்கம், கே.பி.ஜி.மகேஷ்ராம், கருணாகரன், ரத்தினகுமார், கண்ணபிரான், தங்கவேல், கனகராஜ், ஆண்டவர் பழனிசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.