கழகத்தின் கொள்கை, கழக அரசின் சாதனைகளை பட்டி தொட்டி எல்லாம் எடுத்து செல்ல வேண்டும்-முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி வேண்டுகோள்

சென்னை
பேச்சற்றாலை வளர்த்து கொண்டு கழகத்தின் கொள்கைகள், கழக அரசின் சாதனைகளை பட்டி தொட்டி எல்லாம் எடுத்து செல்ல வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேசினார்.
தலைமை கழக அலுவலகமான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற்ற கழக புரட்சித்தலைவி அம்மா பேரவையின் மாவட்ட செயலாளர்களுக்கான செயல்திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமில் முன்னாள் அமைச்சரும், கழக மகளிர் அணி செயலாளருமான பா.வளர்மதி பேசியதாவது:-
எந்த ஒரு அரசியல் கட்சியானாலும் அந்த கட்சியின் வளர்ச்சிக்கு பேச்சாளர்கள் மிக முக்கியம். பேச்சாற்றல் கொண்டவர்களால் தான் எந்த ஒரு இயக்கமும் வளர்ச்சி அடைய முடியும். இன்றைக்கு கழகம் 50 ஆண்டுகளை கடந்தும் வலிமையான அரசியல் இயக்கமாக செயல்படுவதற்கு கழகத்தில் உள்ள பேச்சாளர்களின் பங்களிப்பு தான் முக்கிய காரணம்.
கழகம் தொடங்கிய 1972-ம் ஆண்டிலேயே எனது தந்தை கழகத்தில் இணைந்து விட்டார். கழகத்தின் முதல் மாநில மாநாடு 1973-ம் ஆண்டு திருவான்மியூரில் நடந்தது. அப்போது எனக்கு 13 வயது தான்.
அப்போதே நான் நல்ல முறையில் பேசுவேன். மதுரையிலிருந்து என்னை சென்னைக்கு அழைத்து வந்து கழகத்தின் முதல் மாநில மாநாட்டிலேயே என்னை மேடை ஏற்றி பேச வைக்க. அப்போதைய சென்னை மாவட்ட செயலாளராக இருந்த ஜேப்பியாரிடம் கெஞ்சி கூத்தாடி எனது தந்தை ஏற்பாடு செய்தார். ஜேப்பியாரும் 5 நிமிடம் மட்டுமே பேச வேண்டும் என்று தெரிவித்து விட்டார்.
தந்தையும் நல்லபடியாக பேசு என்று தெரிவித்தார். நான் அந்த மேடையில் தந்தை சொல்லியபடி பேசினேன். தலைவர் மேடையில் இருந்து என் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தார். சுமார் 15 நிமிடம் நான் தொடர்ந்து பேசினேன்.
எனது பேச்சை கேட்டு வியந்து போன புரட்சி தலைவர், தனது அருகே என்னை அழைத்து, என்னை பற்றி குறித்து விசாரித்து பாராட்டி மகிழ்ந்ததுடன் அந்த மாநாட்டில் அவர் பேசும்போது, இந்த மேடையில் பேசிய சிறுமி வளர்மதியை வைத்து எல்லா மாவட்டங்களிலும் கூட்டம் போட்டு கழகத்தை வளர்க்க ஏற்பாடு செய்யும்படி மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு போட்டார்.
எனக்கு அப்போது சிறிய வயது என்பதால் வேறு எதுவும் எனக்கு தெரியவில்லை. என் தந்தை சொல்லி கொடுத்த படி பேசி விட்டேன். மிகப்பெரிய பாராட்டையும் பெற்றுவிட்டேன். 1973ல் கழகத்தின் திருவான்மியூர் மாநாட்டில் தொடங்கிய எனது மேடை பேச்சு 50 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
நமக்கு நாக்கு தான் ஆயுதம். பேச்சாற்றல் இருந்த காரணத்தினால் தான் இந்த நிலைக்கு உயர முடிந்தது. நீங்களும் பேச்சற்றாலை வளர்த்து கொள்ள வேண்டும். அதன் மூலம் கழகத்தின் கொள்கைகள், கழக அரசின் சாதனைகளை பட்டி தொட்டி எல்லாம் எடுத்து செல்ல வேண்டும்.
இதையெல்லாம் இங்கு ஏன் சொல்கிறேன் என்றால் புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மாவும் கழகத்தில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவமும் மரியாதையும் அளித்தனர். கழக பதவிகளிலும், அணிகளிலும் பதவிகளிலும், தேர்தலில் போட்டியிடவும் பெண்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கினார்கள்.
அதுபோன்ற நிலை இப்போதும் தொடர வேண்டும். கழகத்தின் முக்கிய பதவி வாய்ப்புகள் வழங்கும்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சரும், மகளிர் அணி செயலாளருமான பா.வளர்மதி பேசினார்.