இனி வரும் தேர்தலில் தி.மு.க. எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும்-கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆவேசம்

மதுரை,
2011ல் மக்களால் விரட்டி அடிக்கப்பட்டது போல் இனி வரும் தேர்தலில் தி.மு.க. எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும் என்று கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா ஆவேசமாக பேசினார்.
மின்கட்டணத்தை உயர்த்தி விடியா தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. மாவட்ட இளைஞர் அணி வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார்.
திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும்,, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா, கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் செல்வி விந்தியா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ பேசியதாவது:-
தி.மு.க ஆட்சிக்கு எப்போ வருகிறதோ. அப்போது எல்லாம் மின்வெட்டு கடுமையாக இருக்கும். கடந்த 2006 முதல் 2011 வரை நடைபெற்ற திமுக ஆட்சியில் கடும் மின்வெட்டு ஏற்பட்டது. அப்போது மின்சார துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி, இந்த ஆட்சி வீட்டுக்கு போவது என்றால் அது மின்சார பிரச்சினை மட்டுமே என்று கூறினார்.
அதுபோல தற்போதும் கடும் மின்வெட்டு ஒருபுறம் இருந்தாலும், ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் வகையில் மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளனர். இந்த மின் கட்டண உயர்வால் தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.
எப்போது தேர்தல் வந்தாலும் 2011 தேர்தலில் நடந்ததை போல் தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது. அது எந்த தேர்தல் என்றாலும் தி.மு.க.வுக்கு உருவாகும். மின் கட்டணத்தை உயர்த்தி விட்டு அதை நியாயப்படுத்தும் வகையில் மின்சாரத்துறை அமைச்சர் மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பேசுகிறார். ஏன் எடப்பாடியார் ஆட்சி காலத்தில் மின்கட்டணம் எப்படி இருந்தது ஒப்பிட்டு சொல்ல முடியுமா?
பண்ருட்டி ராமச்சந்திரன் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துள்ளார். புரட்சித்தலைவர் காலத்தில் மூத்த தலைவர் வரிசையில் அவர் இல்லை. அவர் சில கருத்துக்கள் சொன்னாலும், அந்த கருத்துக்கள் வெற்றி அடைந்ததில்லை. அதற்கு என்னால் பல உதாரணங்களை சொல்ல முடியும்.
புரட்சித்தலைவருக்கு பின் அம்மா காலத்தில் இயக்கத்தை வலுபெறும் வகையில் காலத்திற்கு ஏற்றார் போல் சில மாற்றங்களை அம்மா உருவாக்கினார். அந்த மாற்றங்கள் மூலம் இந்த இயக்கத்தை இந்தியாவிலேயே மூன்றாம் பெரிய இயக்கமாக உருவாக்கி காட்டினார்.
திமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காமல் செய்தார். அதன் பின் உள்ளாட்சி தேர்தலில் கழகத்தை 99 சதவீதம் வெற்றியடைய செய்தார். மேலும் தொடர்ந்து இரண்டாம் முறையாக இந்த இயக்கத்தை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தினார்.
அந்த மாற்றத்தில் ஏற்பட்ட பயணத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் இயக்கத்தில் பயணிக்கவில்லை. சில காலம் கூட தே.மு.தி.க.வில் இருந்தார். ஆனால் எடப்பாடியார் அம்மாவின் விசுவாசியாக இருந்து, அம்மாவின் மாணவனாக பயணித்து அம்மாவிற்கு பின் நான்கரை ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி செய்து, அப்போது நடைபெற்ற பல்வேறு இடைத்தேர்தலில் கழகத்திற்கு வெற்றியை தந்தார்.
புரட்சித்தலைவர் மறைவிற்குப்பின் இந்த இயக்கத்தை அழிக்க தி.மு.க.வுடன் சில துரோகிகள் கைகோர்த்து கொண்டு சதி செயலில் ஈடுபட்டனர். அதையெல்லாம் அம்மா தவிடுபொடியாக்கினார்.
அதேபோல் இன்றைக்கு தி.மு.க.வுடன் சில துரோகிகள் கழகத்தை அழிக்க சதி செய்கிறார்கள். அம்மாவின் வழியில் அதை தகர்த்து ஒன்றரை கோடி தொண்டர்களை காப்பாறி வருபவர் எடப்பாடியார் என்பதை அவருக்கு நான் கூறிக்கொள்கிறேன்.
இவ்வாறு கழக அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ பேசினார்.