சிறப்பு செய்திகள்

நதிநீர் இணைப்புக்கு முட்டுக்கட்டை போடும் கர்நாடக அரசுக்கு, கழகம் கடும் கண்டனம் -ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை

கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவோம்” என்று கர்நாடக அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் கூறுவது காவேரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு முற்றிலும் முரணானது என்பதால், கர்நாடக அரசின் தன்னிச்சையான முடிவை கண்டித்து இந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, இந்த திட்டத்திற்கு எந்தவிதமான தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு அளிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.

மேகதாது அணை குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்தும், மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும் கர்நாடக சட்டமன்ற பேரவை மற்றும் மேலவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது மட்டுமல்லாமல், காவேரி படுகை மாநிலங்களின் உரிய பங்கு குறித்து ஒரு முடிவு ஏற்படும் வரையில், தமிழ்நாட்டின் கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணாறு – காவேரி -வைகை-குண்டாறு நதிநீர் இணைப்பு திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் கர்நாடக சட்டமன்ற பேரவை மற்றும் மேலவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு கர்நாடக அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இது மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. கர்நாடக அரசின் இந்த செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

காவேரி படுகை மாநிலங்களின் உரிய பங்கு குறித்து காவேரி நடுவர் மன்றம் 2007ம் ஆண்டே தனது இறுதி தீர்ப்பினை வழங்கி விட்டது. இதன்படி, 192 டி.எம்.சி. நீரை தமிழ்நாட்டிற்கு கர்நாடகா திறந்து விட வேண்டும். இந்த தீர்ப்பின்படி கேரள மாநிலத்திற்கு 30 டி.எம்.சி. நீரும், புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. நீரும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பினை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நீர்ப்பங்கீட்டின் அளவை 192 டி.எம்.சி. அடியிலிருந்து 177.25 டி.எம்.சி.யாக குறைத்தது. அதாவது 14.75 டி.எம்.சி. குறைக்கப்பட்டது.

அதே சமயத்தில் கர்நாடகாவின் நீர்பங்கீடு அளவு 270 டி.எம்.சி.யிலிருந்து 284.75 டி.எம்.சி.யாக உயர்த்தப்பட்டது. கேரளா மற்றும் புதுச்சேரிக்கான ஒதுக்கீட்டில் எவ்வித மாற்றமும் இல்லை.இதன்மூலம் காவேரி படுகை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகியவற்றின் உரிய நீர்ப்பங்கீடு உச்சநீதிமன்றத்தால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது.

இந்தச் சூழ்நிலையில், மறுபடியும் காவேரி நதிப்படுகை மாநிலங்களின் உரிய பங்கு குறித்து ஒரு முடிவு ஏற்படும் வரையில், தமிழ்நாட்டின் கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணாறு –காவேரி–-வைகை-குண்டாறு நதிநீர் இணைப்பு திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்ற கர்நாடக சட்டமன்ற பேரவை மற்றும் மேலவை தீர்மானத்திற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முற்றிலும் முரணான செயல் ஆகும். இது நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு எதிரான செயல்.

தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே உரிய நீருக்கு பதிலாக உபரி நீர் தான் கிடைத்து வருகிறது. வரும் உபரி நீரையும் தடுக்கும் நோக்கில் 67 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட மேகதாது அணை கட்டப்பட வேண்டும் என்று கர்நாடகா சொல்வதும், நதிநீர் இணைப்பு திட்டத்தை முடக்கும் நோக்கத்துடன் செயல்படுவதும் முற்றிலும் நியாயமற்ற செயல்.

இந்த நியாயமற்ற செயலை அனுமதித்தால், கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டிற்கு தற்போது வந்து கொண்டிருக்கும் உபரி நீரும் கிடைக்காமல் போகக்கூடிய சூழ்நிலை உருவாகும். இதன் விளைவாக காவேரி நீரை நம்பி விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படுவதோடு, வேளாண் தொழிலே முடங்கக்கூடிய அபாயம் ஏற்படும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், மேகதாது அணை கட்டப்படும் என்ற கர்நாடக அரசின் நிலைப்பாடு காவேரி நதிநீர் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமையை பறிக்கும் செயலாகும்.

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, காவேரி படுகை மாநிலங்களின் உரிய பங்கு என்பது ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டின் கோதாவரி-கிருஷ்ணா-பெண்ணாறு –காவேரி-வைகை-குண்டாறு நதிநீர் இணைப்பு திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி பெறவும், மேகதாது அணை திட்டத்தை தடுத்து நிறுத்தவும் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.