தற்போதைய செய்திகள்

இன்றைக்கு தேர்தல் வந்தாலும் கழகம் ஆட்சிக்கு வரும்-முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திட்டவட்டம்

புதுக்கோட்டை

இன்றைக்கு தேர்தல் வந்தாலும் கழகம் ஆட்சிக்கு வரும் என்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மின் கட்டணத்தை உயர்த்திய விடியா தி.மு.க. அரசை கண்டித்து புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

மின்சார கட்டணமானது ஷாக் அடிக்கின்ற அளவிற்கு உயர்த்தி உள்ளது. திமுக கழக அரசு. கடந்த நமது ஆட்சி காலத்தில் ஸ்டாலின் மின் கட்டணத்தை உயர்த்தாதே என்று கருப்பு சட்டையை போட்டுக்கொண்டு இதே கண்டன பதாகையை உயர்த்தி பிடித்து கண்டன கோஷங்களை எழுப்பினாரா? இல்லையா? அப்படி போராட்டம் செய்துவிட்டு இப்பொழுது மின் கட்டணத்தை உயர்த்தலாமா?.

டாஸ்மாக்கை மூடக்கோரி இதேபோன்று போராட்டம் நடத்தினாரா?. இல்லையா? பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாக கூறிவிட்டு தற்பொழுது வழங்குகிறாரா? இல்லையா?. பொய் வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளார்கள்.

திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கவுன்சிலர்கள் மாவட்ட கவுன்சிலர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்குமே இந்த ஆட்சியில் திருப்தி இல்லை. பத்தாண்டு காலம் பெருந்தன்மையாக ஆட்சி செய்தது கழகம். யாரையும் எந்த ஒரு தொந்தரவும் செய்யவில்லை.

திமுக ஆட்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த ஒரு வளர்ச்சிப் பணிகளும் இல்லை. தாலிக்கு தங்கத்தை நிறுத்தி விட்டார்கள். ஸ்கூட்டி திட்டத்தை நிறுத்தி விட்டார்கள். லேப்டாப் திட்டத்தை நிறுத்தி விட்டார்கள். அரசு மருத்துவமனைகளில் மருத்துவ கல்லூரிகளில் மருந்து பற்றாக்குறைகள், மருத்துவர்கள் செவிலியர்கள் பற்றாக்குறைகள் இருக்கிறது.

இவை எதுவுமே கவனிக்க வழி இல்லாத திமுக ஆட்சி இன்றைக்கு கழகத்தினர், நிர்வாகிகள் மீது பொய் புகார்களை சுமத்தி பழிவாங்கும் நடவடிக்கைகள் மட்டுமே ஈடுபட்டு வருகின்றது.

கழக ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்ட காவிரி குண்டார் வைகை திட்டம் இன்றைக்கு ஆமை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நெல் கொள்முதல் நிலையங்களில் மிகப்பெரிய அரசியல் தலையிட நடைபெற்று கொண்டிருக்கின்றது. 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் ஏழைகள் வேலை இல்லை என்று திரும்பி அனுப்பப்படும் நிலை நடந்து கொண்டிருக்கின்றது.

இன்றைக்கு மின்சாரம் ஷாக் அடிக்கவில்லை மின்சார கட்டணம் ஷாக் அடிக்கின்றது. மின்சார கட்டணத்தை பொறுத்தவரையில் 100 யூனிட் அம்மா இலவசமாக வழங்கினார். தேர்தல் வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றப்படாமல் மக்கள் யாரும் அம்மா ஆட்சியில் இருந்தது போல் மகிழ்ச்சியாக இல்லை.

கஷ்டங்களை தொந்தரவுகளை துன்பங்களை மக்கள் அடைந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு தேர்தல் வந்தாலும் கழகம் ஆட்சிக்கு வரும்.இவ்வாறு பேசினார்.