அரைகுறையாக, அவசரமாக கட்டி முடிக்கப்பட்டதால் விபரீதம் – கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதால் விடியா தி.மு.க. அரசு அலட்சியம்

தென்காசி
தென்காசி அருகே ஹரிஹரநதி ஆற்றுப்பாலம் அரைகுறையாக, அவசர, அவசரமாக கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளதால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கிறது. கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதால் விடியா தி.மு.க. அரசு அலட்சியமாக செயல்பட்டுள்ளது என்று என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
தென்காசி மாவட்டம் தென்காசியில் இருந்து இலஞ்சி வழியாக செங்கோட்டை மற்றும் அண்டை மாநிலமான கேரளாவுக்கு செல்லும் சாலையில் அமைந்துள்ளது ஹரிஹர நதி ஆற்றுப்பாலம்.
இந்த பாலம் மிகவும் குறுகிய பாலம் என்பதால் பழைய பாலத்தை அகற்றி விட்டு புது பாலம் அமைப்பதற்காக கடந்த கழக ஆட்சியில் 3.26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த பாலம் கட்டுவதற்காக டெண்டர் விடப்பட்டு கடந்த 2021 ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை பணிகள் நடைபெற்றது.
அதன் பிறகு பல மாதங்களாக இந்த பணிகள் எதுவும் நடைபெறாமலே இருந்து வந்தது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு தொடர் மழையால் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பாலத்தில் நிறுவப்பட்டுள்ள கம்பி தூண்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதனால் ஒப்பந்ததாரர் பல மாதங்களாக இந்த பாலத்தை கட்டும் பணியை கிடப்பில் போட்டு உள்ளார். பின்பு தொடர்ந்து செய்திதாள்களில் செய்தி வெளியானதை தொடர்ந்து மீண்டும் அந்த பாலம் கட்டும் பணி தொடர்ந்தது.
இருந்தாலும் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்றது. தற்போது இந்த பாலம் பணி முழுமையாக முடிந்து மக்கள் பயன்பாட்டுக்காக அவசர அவசரமாக திறக்கப்பட்டுள்ளது.
பாலத்தில் சாலை இணையும் பகுதியில் தார் கூட போடாமல் மண் ஜல்லி கொட்டி சமப்படுத்தி உள்ளனர். இதனால் இருசக்கர வாகனங்கள் சறுக்கி விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பாலத்தின் இருபுறமும் முறையான விபத்து தடுப்பு சுவர்கள் அமைக்கப்படாததால் பெரும் விபத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த பாலம் அமைந்துள்ளது.
தற்போது குற்றால சீசன் தொடங்கிய உள்ளதாலும், கேரளாவுக்கு அதிகப்படியான கனரக வாகனங்கள் அரசு பேருந்துகள், சுற்றுலா வாகனங்கள் செல்வோர் இந்தப்பாலம் வழியாக சென்று வருகின்றனர்.
எனவே பெரும் விபத்து நடப்பதற்கு முன்பு இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி உடனடியாக விபத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இரண்டு மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையில் உள்ள பாலத்தில் சற்று கூட அக்கறை இல்லாமல் ஏனோ தானோ என்று பெயரளவுக்கு பணி செய்யும் அதிகாரிகளும், ஆளுங்கட்சி எம்பி, எம்.எல்.ஏ.க்களும் இந்த விஷயத்தில் அலட்சியமாக இருக்கின்றனர்.
விபத்து ஏற்படாத வரை பரவாயில்லை, விபத்து ஏற்பட்ட உடன் அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்கிறோம் என்று பேட்டி கொடுக்க மட்டும் முதலில் வருவார்கள்.
தென்காசி மாவட்டத்தில் அமைச்சர் இல்லாத காரணத்தால் எதற்கெடுத்தாலும் நான் தான் என்று எந்த அரசு பதவியிலும் இல்லாத தி.மு.க.வினர் சிலர் நான் தான் என்று அரசு நிகழ்ச்சி என்றால் முதலில் நிற்கிறார்.
ஆனால் இந்த பாலம் பணி கழக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதால் என்னவோ இவ்வளவு மெத்தன போக்குடன் தி.மு.க. அரசு செயல்பட்டு இருக்கிறதோ என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.