தற்போதைய செய்திகள்

நீட் என்கிற ஏழரைக்கு 7.5 என்னும் ஏழரையால் வைத்தியம் பார்த்த மருத்துவர் எடப்பாடியார்

ராணிப்பேட்டை

நீட் என்கிற ஏழரைக்கு 7.5 என்னும் ஏழரையால் வைத்தியம் பார்த்த மருத்துவர் எடப்பாடியார் என்று ஆற்காடு பொதுக்கூட்டத்தில் பேசிய கழக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் கூறினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரில் தொகுதி கழகம் சார்பில் தி.மு.க. அரசின் ஓராண்டு வேதனை விளக்க பொதுக்கூட்டம் நகர செயலாளர் ஜிம் எம்.சங்கர் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய கழக செயலாளர்கள் சொரையூர் எம்.குமார் வரவேற்றார்.

ஒன்றிய கழக செயலாளர்கள் வளவனூர் எஸ்.அன்பழகன், நா.வ.கிருஷ்ணன், என்.சாரதி, பேரூராட்சி கழக செயலாளர்கள் கே.ஆர்.சதீஷ், ராமசேகர், கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழக செய்தி தொடர்பாளரும், நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் ஆசிரியருமான மருது அழகுராஜ், மாவட்ட கழக செயலாளரும், எதிர்க்கட்சி துணை கொறடாவுமான சு.ரவி எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் கழக செய்தி தொடர்பாளரும், நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் ஆசிரியருமான மருது அழகுராஜ் பேசியதாவது:-

திராவிட முன்னேற்ற கழக ஆட்சியின் ஓராண்டு காலம் இதுவரை தமிழகத்தில் நடைபெற்றிராத இருண்ட காலமாகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இயலாமல் தேதி போட்டா கொடுத்தோம் என்று திமிர்வாதம் பேசுவதிலும், தேர்தல் அறிக்கை தயாரித்த டி.ஆர்.பாலுவை கேளுங்கள் என்று திசை திருப்புவதிலும் காலத்தை கழிக்கிறார்கள்.

ஒரு டஜனுக்கும் மேற்பட்ட முதலமைச்சர்கள் தமிழ்நாட்டில் உலா வருகிறார்கள். மகன், மருமகன், மனைவி என்னும் இந்த வரிசையில் பலவீனமான முதலமைச்சராக இருப்பவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான். கடைமடைக்கு தண்ணீர் வந்து விட்டதா? என்று கேட்பது தான் எப்போதும் வழக்கம். ஆனால் இப்போது மேட்டூரில் வீசியெறிந்த தட்டு வந்து விட்டதா? என்று கேட்கிறார்கள்.

கரும்பு வயலுக்குள் கான்கிரீட் ரோடு போட்டவர்கள், இன்றைக்கு வரப்பின் மீது சிவப்பு கம்பளம் விரித்து செருப்பை கழற்றாமல் விதை நெல்லை அள்ளி வீசுகிறார்கள். தமிழ்தாய் வாழ்த்து பாடும்போது முதலமைச்சர் தன் கைகளை பின்பக்கம் கட்டிக் கொண்டு நிற்கிறார். தேரோடும் திருவாரூர் வீதிக்கு கருணாநிதி பெயரை வைக்கப்போக ஊரோடு திரண்டு வந்த எதிர்ப்பால் அடுத்த வாரமே பெயரை மாற்றுகிறார்கள். நாகர்கோவிலில் கலைவாணர் அரங்கத்தின் பெயரை கலைஞர் அரங்கம் என்று பெயர் மாற்ற முயற்சித்தபோது வெகுண்டெழுந்த எதிர்ப்பால் தங்கள் முயற்சியை கைவிட்டு முக்காடு போட்டுக் கொள்கிறார்கள்.

தருமபுர ஆதீனத்தின் பல்லக்கு தூக்கும் விவகாரத்திலும் தலையிட்டு அவமானப்பட்டார்கள். அதுபோலவே ஆம்பூர் பிரியாணி திருவிழாவை பெய்யாத மழையின் பெயரிலே கணக்கு எழுதி அந்த பிரியாணி திருவிழாவையே ரத்து செய்தார்கள். இப்படியாக ஒரு தெளிவு இல்லாத மனநோயாளி அரசாக விடியா தி.மு.க. அரசு காலத்தை கடத்துகிறது. இதில் திராவிட மாடல் என்று இன்னொரு புதுப்பெயர் வேறு. மு.க.ஸ்டாலின் நடத்துவது திராவிட மாடல் ஆட்சி என்றால் அவரது தகப்பனார் முத்துவேல் கருணாநிதி நடத்தியது என்ன ஆட்சி? பேரறிஞர் அண்ணா நடத்தியது என்ன ஆட்சி? இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்.

புரட்சித்தலைவி அம்மா ஒப்படைத்து சென்ற கழகத்தின் ஆட்சியை நான்காண்டு காலம் நடத்தி உலகத்தையே வியக்க வைத்தவர் ஒரு உழவன் வீட்டில் உதித்த முதல்வராம் எடப்பாடியார். குடிமராமத்து பணிகளை காலத்தே மேற்கொண்டதும், ஏரி, கண்மாய்களை தூர் வாரியதும், 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றதும், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை மருத்துவர்களாக மாற்றியதும் என எடப்பாடியாரின் ஆட்சி தமிழ்நாட்டிற்கு வளர்ச்சியையும், தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியையும் தந்தது.

நீட் என்கிற ஏழரைக்கு 7.5 சதவீதம் என்கிற ஏழரையை கொண்டே வைத்தியம் பார்த்த மருத்துவர் எடப்பாடியார். காவேரி, முல்லை பெரியாறு உரிமைகளை எல்லாம் சளைக்காத சட்டப் போராட்டங்களால் தமிழ்நாட்டு மக்களுக்கு தங்கள் உழைப்பால் மீட்டு கொடுத்த இயக்கம் அண்ணா தி.மு.க.. இப்படி குறையேதும் இல்லாமல் நடந்த கழகத்தின் ஆட்சியை வாக்குறுதிகள் என்னும் பெயரில் மக்களை நம்ப வைத்து நயவஞ்சகத்தால் வீழ்த்திய தி.மு.க. இன்று மக்களிடம் மாட்டிக் கொண்டு முழிக்கிறது. தி.மு.க.வுக்கு ஓட்டு போட்ட மக்கள் தங்கள் விரல்களை கடித்து துப்புகிற கடுப்பில் இருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் விடியல் ஆட்சி என்று பெயர் வேறு.

இரவெல்லாம் மின்சாரம் இல்லாமல் எப்படா விடியும் என்று காத்திருந்தால் அதற்கு விடியல் ஆட்சி என்று பெயராக்கும். இப்போது தி.மு.க. அமைச்சர்கள் மீதான ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவர தொடங்கி விட்டன. அந்த காரியத்தில் பா.ஜ.க.வின் அண்ணாமலை வேகம் காட்டுகிறார். திருடர்களை பிடிப்பது போலீஸ்காரர்களின் கடமை தானே? அந்த வகையில் அண்ணாமலை என்கிற முன்னாள் போலீஸ்காரர் திருடர்களை பிடிக்க தொடங்கியிருக்கிறார். அப்படி அவர் பிடித்தாலும் அந்த திருடர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கிற கடமையை 2026-ல் அமைய போகும் அனைத்திந்திய அண்ணா தி.மு.க. ஆட்சி தான் செய்து முடிக்கும். அந்த 2026 வெற்றிக்கான முன்னோட்டமாக 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நிச்சயமாக அமையும். மக்கள் தாங்கள் செய்த தவறுக்காக பிராயச்சித்தம் செய்வதற்கு ஆயத்தமாகி விட்டனர். இரட்டை இலைக்கு வாக்களிப்பது ஒன்று தான் இதற்கு தீர்வு என்பதை மக்கள் உணர்ந்து கொண்டு விட்டனர்.

இவ்வாறு கழக செய்தி தொடர்பாளரும், நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ் ஆசிரியருமான மருது அழகுராஜ் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சீனிவாசன், மாவட்ட கழக நிர்வாகிகள் கீதா சுந்தர், சம்பந்தம், ஷாபுதின், ரமாபிரபா, நகர கழக செயலாளர்கள் டபுள்யு ஜி.மோகன், கே.பி.சந்தோஷம், இப்ராஹிம் கலிலுல்லா, எம்.எஸ்.விஜி, ஒன்றிய கழக செயலாளர்கள் இ.பிரகாஷ், சாலை ஜி.பழனி, வி.கே.ராதாகிருஷ்ணன், தேவேந்திரன், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் என்.முனுசாமி, பூண்டி பிரகாசம், கே.அப்துல்லா, எம்.சி.பூங்காவனம், எம்.ராதிகா, அ.கோ.அண்ணாமலை, கே.அன்பரசன்,
பொதுக்குழு உறுப்பினர் தா.கு.கணேசன், சாத்தூர் பாபு, பேரூராட்சி மன்ற தலைவர் கலா சதீஷ், தலைமை கழக பேச்சாளர்கள் அதிரடி அரங்கநாதன், இடிமுரசு ரவி, முன்னாள் சேர்மன் ஆர்.புருஷோத்தமன், ஏ.கே.சர்தார், ஜெயந்திலால், குணபூஷணம் வேதா,
ஏ.ஜி.பிச்சைமுத்து, உதயகுமார், ஜலிஸ்மேரி பீட்டர் ராஜ், புதுப்பாடி ராஜா, சக்கரமல்லூர் பாலாஜி, எல். கீர்த்தி, சங்கர், வழக்கறிஞர் ஜெய்சங்கர், ருத்திரன், அக்ரி பாலாஜி, அம்பேத் ராஜன், ஹரிதாஸ், அஜித், மஸ்தான் அலி, சபீக் அஹமத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை கழக செயலாளர் வி.முருகன் நன்றி கூறினார்.