தற்போதைய செய்திகள்

புகார் கொடுக்க வந்த பொதுமக்களை கையால் அடிக்க முயன்ற அமைச்சர்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே புகார் கொடுக்க வந்த பொதுமக்களை அமைச்சர் அடிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட பாப்பாங்குழி ஊராட்சியில் உள்ள வடந்தாங்கல் ஏரி புனரமைப்பு செய்யும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு புனரமைப்பு பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

பின்னர் ராமானுஜபுரம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் குளம் சீரமைப்பு தொடர்பாக புகார் மனு அளிக்க வந்தனர்.

அப்போது பொதுப்பணித்துறை சார்பாக விடப்படும் ஏலம் வேண்டாமென்றும், கிராம மக்கள் சார்பாக விடப்படும் ஏலத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தபோது அமைச்சர் தா.மோ.அன்பரசன் கையை ஓங்கி பொதுமக்களை அடிக்க முற்பட்டார்.

புகார் மனு அளிக்க வரும் பொதுமக்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டிய அமைச்சரே அடிக்க முற்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் ரைவலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.