மக்கள் நலனில் ஸ்டாலினுக்கு சிறிதும் கூட அக்கறை இல்லை-முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் சாடல்

கடலூர்,
மக்கள் நலனில் ஸ்டாலினுக்கு சிறிதும் கூட அக்கறை இல்லை. இதனால் தமிழ்நாட்டில் ஏழைகள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.
கடலூர் வடக்கு மாவட்டம் கடலூர் தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் உட்கட்சி தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு தீர்மான பதிவேடுகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் தெற்கு ஒன்றிய கழக செயல்வீரர்கள் கூட்டம் பாதிரிகுப்பத்தில் உள்ள மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார். கடலூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.காசிநாதன் வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் சேவல் ஜி.ஜே.குமார், மாவட்ட துணை செயலாளர்கள் தெய்வ.பக்கிரி, மணிமேகலை தஷ்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு தீர்மான பதிவேடுகளை வழங்கி கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கட்டுமான பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வால் தமிழ்நாட்டில் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து இருக்கிறது. தமிழ்நாட்டில் ஏழைகள் வாழ முடியாத ஆட்சியை ஸ்டாலின் நடத்தி கொண்டிருக்கிறார்.
கழக ஆட்சியில் அனைத்து திட்டங்களையும் அனைவருக்கும் கொடுத்தோம். ஆனால் இப்போது தி.மு.க. அரசு பல கட்டுப்பாடுகளை போட்டு ஒரு சில குறிப்பிட்ட நபருக்கு மட்டுமே நலத்திட்டங்கள் கொடுக்கப்படும் என்று கூறுகிறார்கள். எனவே யார் சிறந்த ஆட்சியை கொடுத்தது என்று மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். மக்கள் நலனில் சிறிதும் கூட அக்கறை இல்லாத ஆட்சியை ஸ்டாலின் நடத்தி கொண்டிருக்கிறார்.
கழக ஆட்சியில் கொடுத்த தாலிக்கு தங்கம் திட்டம், மானிய விலையில் உழைக்கும் மகளிருக்கு இருசக்கர சக்கர வாகனம் வழங்கும் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் என பல திட்டங்களை இந்த மக்கள் விரோத அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் கொடுப்போம், மகளிருக்கு மாதந்தோறும் உரிமைத்தொகை 1,000 ரூபாய் கொடுப்போம் என்று பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
இப்போது மக்கள் மனதில் தி.மு.க.வுக்கு எதிரான மனநிலை வந்து இருக்கிறது. எப்போது தேர்தல் வந்தாலும் நாம் வெற்றி பெறக்கூடிய சூழ்நிலையில் இருக்கிறோம். எனவே புதிதாக தேர்வு செய்யப்பட்ட கிளை கழக செயலாளர்கள் கழகத்தை மேலும் வலுப்படுத்தி கழக ஆட்சி மலர பாடுபட வேண்டும்.
இவ்வாறு கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் பேசினார்.