தி.மு.க.வுக்கு சம்மட்டி அடி கொடுப்போம்-2024-ல் கழகம் மீண்டும் அரியணை ஏறும்

தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செ.கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. திட்டவட்டம்
தென்காசி
இனி எழ முடியாத அளவுக்கு தி.மு.க.வுக்கு சம்மட்டி அடி கொடுப்போம். 2024-ல் கழகம் மீண்டும் அரியணை ஏறும் என்று தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் செ.கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ பேசினார்.
தமிழகத்தில் உள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து மண்டல அண்ணா தொழிற்சங்கம் சார்பில் புளியங்குடி பணிமனை முன்பு வாயிற் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட கழக செயலாளரும், கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செ.கிருஷ்ணமுரளி தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சரும், கழக மகளிரணி துணை செயலாளருமான வி.எம்.ராஜலட்சுமி, கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அ.மனோகரன், மண்டல அண்ணா தொழிற்சங்க தலைவர் சேர்மதுரை, செயலாளர் ராமையா, பொருளாளர் ஆத்மநாதன், அண்ணா தொழிற்சங்க முன்னாள் செயலாளர் கந்தசாமி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் வடக்கு மாவட்ட கழக செயலாளர் செ.கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ பேசியதாவது:-
உழைக்கும் வர்க்கம் ஊதிய உயர்வு கேட்பது அது சம்பந்தமான பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அதற்கான முடிவு எடுக்க கூட தைரியம் இல்லாத அரசு விடியாத அரசு.
கழக ஆட்சியில் இதற்கு முடிவுக்கு கொண்டு வர வேண்டி பேச்சுவார்த்தை நடைபெற்று முடிவு எடுக்க கூடிய நேரத்தில் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொண்டு அதை விரட்டிட பட்டபாடு உலகத்துக்கே தெரிந்தது.
ஆனால் அன்று பேசிய கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் தமிழகத்திற்கு ஒரு பேச்சு. கேரளாவிற்கு ஒரு பேச்சு என்று பேசி வருகிறது. அது தி.மு.க.வின் ஊதுகுழலாக செயல்படுகிறது.
பெண்களுக்கு இலவச பேருந்து விடுகிறோம் என்று பேசுவது பெரிதல்ல. ஊழியர்களுக்கு கலெக்சன் படி சரியாக கொடுக்க வேண்டும். இது அனைத்து ஊழியர்களுக்கானது.
அதே போல் நிர்வாக வசதிக்காக என்று சொல்லி தொழிற்சங்க ஊழியர்களை இடமாற்றம், வண்டி கொடுக்காமல் இருப்பது, ஓடாத வண்டியை கொடுத்து பழிவாங்குவது போன்ற வேலைகளை விடுத்து சரிசமமாக நடத்தாவிட்டால் அதற்கான பலன்களை அதிகாரிகள் சந்திக்க நேரிடும்.
ஆட்சியும் காட்சியும் மாறும் காலம் தொலைவில் இல்லை. அப்போது தெரியும். தொமுச, கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களிடம் கேட்கிறேன். பழைய ஓய்வூதியம் தருவதாக சொன்ன முதலமைச்சர் தரவில்லையே அதை கேட்டு வாங்குங்கள் முதலில்.
சுருட்டியே பழக்கப்பட்ட திமுக காலையில் பாயில் இருந்து பாடை வரை சுருட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் களமிறங்கியுள்ளது. அவர்களுக்கு உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட எடுக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியுள்ளது. நமது உள்ளூர் திமுக நிர்வாகிகள் சொல்வதை கேட்டு செயல்படும் அதிகாரிகளே சமீபத்தில் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில் காவல்துறையால் உங்கள் மாவட்ட செயலாளருக்கு என்ன நேர்ந்தது என்று எல்லோரும் தெரியும்.
ஆளுங்கட்சியிலே இப்படி என்றால் எதிர்க்கட்சி என்றால் என்ன ஆகும் என்பதை சற்று நினைத்து பார்த்து நேர்மையாக பணியாற்றுங்கள். எங்களை வஞ்சிக்க நினைப்பவர் வஞ்சிக்கப்படுவர். 10ல் 8 அரசு ஊழியர்கள் திமுகவுக்கு ஏன். வாக்களித்தோம் என்று புலம்ப ஆரம்பித்து விட்டனர். இந்த அரசுக்கு சாவுமணி அடிக்க போவதே அரசு ஊழியர்கள் தான், இது எங்களுடைய ஆரம்ப கட்ட போராட்டம் தான்,
எங்கள் தொழிலாளர்களுக்கான உரிமையை வாங்கி கொடுக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம், 2024ல் கொடுக்கும் சம்மட்டி அடி தி,மு.க. என்ற கட்சி இருந்ததா என்று யோசிக்கும் அளவுக்கு இருக்க வேண்டும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் அரியணை ஏறும்.
இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் செ.கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ பேசினார்.