தமிழகம்

ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்

சென்னை,

முதலமைச்சர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு, நியாயவிலை கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மீது மளிகைப்பொருட்கள் திணிக்கப்படுவதை தடுத்து நிறுத்தவும், அவர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கவும், இதர கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறிதூத கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அளித்தது போல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 14 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாள் போராட்டத்தில் நியாய விலைக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களை அழைத்துப்பேசி அவர்களுக்கு தரவேண்டிய அகவிலைப்படி உயர்வு, மளிகைப் பொருட்களை அவர்கள் மீது திணிக்கும் முடிவை கைவிடுவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல், அவர்கள் வேலைக்கு வராத நாட்களுக்கு சம்பளம் இல்லை என்று அறிவிப்பது, புதிய பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பது போன்ற தொழிலாளர் விரோத செயல்களில் அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

நியாய விலை கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் வெற்றிபெற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவளிக்கும் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

நியாயவிலை கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருமே கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் போது, பொதுமக்கள் எல்லாம் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வராத சூழ்நிலையில், தங்கள் உயிரை பணயம் வைத்து பொதுமக்களுக்கு சேவையாற்றியவர்கள் என்பதையும், முன்கள பணியாளர்களாக செயல்பட்டார்கள் என்பதையும், அவர்களுடைய கோரிக்கைகளில் நியாயம் உள்ளது என்பதையும் கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்களுக்கு வழங்கியது போல்,

அவர்களுக்கும் 01.01.2022 முதல் 14 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை வழங்குவதும், மளிகை பொருட்களை வலுக்கட்டாயமாக அவர்கள் மீது திணிப்பதை கைவிடுவதும், இதர கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதும் தான் ஒரு சிறந்த அரசுக்கு, திறமையான நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டு.

அதை விடுத்து, அவர்கள் மீது அடக்குமுறையை அரசு ஏவி விடுமேயானால் அது நிர்வாகத் திறமையின்மைக்கு எடுத்துக்காட்டாக அமைந்து விடும். இது ஏற்புடையதல்ல. மாறாக கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, முதலமைச்சர், இனிமேலாவது ஆழ்ந்த உறக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு, நியாயவிலை கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மீது மளிகைப்பொருட்கள் திணிக்கப்படுவதை தடுத்து நிறுத்தவும், அவர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கவும்,

இதர கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.