தொழிலாளர் விரோத போக்கை தி.மு.க. அரசு கடைபிடிக்கிறது

கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்
சென்னை,
பொது விநியோக திட்டத்தின் வரம்பிற்குள் வராத, தரமற்ற, விற்பனையாகாத மளிகைப் பொருட்களை நியாய விலைக் கடை ஊழியர்கள் மீது திணிப்பதோடு அவர்களுக்கு தரவேண்டிய அகவிலைப்படி உயர்வை தராமல் தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வஞ்சிக்கும் தி.மு.க. அரசுக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. அரசு பொறுப்பேற்று ஓராண்டு முடிந்துள்ள நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள், நியாயவிலை கடை ஊழியர்கள், சென்னை குடிநீர் வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் என அனைவரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதையும், விலைவாசி உயர்வு,
சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, அகவிலைப்படி உயர்வு வழங்காமை, சட்டம்-ஒழுங்கு சீரழிவு, அரசாங்கத்தில் தி.மு.க.வினரின் தலையீடு, நில அபகரிப்பு, கொலை, கொள்ளை, என பல பிரச்சினைகளால் அனைத்து மக்களுமே கடும் அதிருப்தியில் இருப்பதையும் பார்க்கும்போது, மக்களை அரவணைத்து போகும் ஆட்சி நடைபெறவில்லை என்பதும், மக்கள் விரோத, தொழிலாளர் விரோத ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதும் தெளிவாகிறது.
பொது விநியோக திட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை ஆகியவை இலவசமாகவும், சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு போன்ற பொருட்கள் மானிய விலையிலும் நியாயவிலை கடைகள் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதை தவிர, மஞ்சள், மிளகு, சீரகம், புளி, எண்ணெய், சோப்பு போன்ற பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் கீழ் செயல்படும் பல்பொருள் அங்காடிகளில், அரிசி, கோதுமை சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு ஆகியவை தவிர மஞ்சள், புளி, மிளகு, சீரகம், எண்ணெய் ஆகியவையும் விற்பனை செய்யப்படுவதாகவும்,
அந்த பொருட்கள் தரமற்று இருப்பதால் அதனை குடும்ப அட்டைதாரர்கள் வாங்குவதில்லை என்றும், விற்பனையாகாத இந்த பொருட்களை ஊழியர்கள் மீது திணிப்பதாகவும், ஊழியர்களை கேட்காமலேயே அவர்களது சம்பளத்திலிருந்து மாதா மாதம் 1,500 ரூபாய் பிடித்தம் செய்யப்படுவதாகவும், அந்த பணத்திற்கு தரமற்ற, விற்பனையாகாத மளிகை பொருட்களை வாங்கிச்செல்ல ஊழியர்கள் நிர்ப்பந்தப்படுத்தப்படுவதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
இதுபோன்ற செயல்பாடுகள் கடந்த ஆறு மாதங்களாகவே நிலவி வருகிறது. இதனை கண்டித்து நான்கூட இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் அறிக்கை விடுத்ததோடு, மளிகை பொருட்களை ஊழியர்கள் மீது திணிப்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தேன்.
ஆனால், “செவிடன் காதில் ஊதிய சங்கு” என்ற பழமொழிக்கேற்ப, இதனை தடுத்து நிறுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும், இது இன்னமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதும் பத்திரிகை செய்தியிலிருந்து தெரிய வருகிறது.
இதன்மூலம், தொழிலாளர் விரோத போக்கினை இந்த அரசு கடைபிடித்து வருவது தெளிவாகிறது. ஏற்கனவே நியாயவிலை கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தர வேண்டிய அகவிலைப்படி உயர்வை அளிக்காமல் அவர்களை அலைக்கழித்து கொண்டிருக்கின்ற அரசு, அவர்கள் மீது தரமற்ற, விற்பனையாகாத பொருட்களை திணிப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்.
இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.