சிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்

தி.மு.க.வில் சாதாரண தொண்டன் தலைமை பதவிக்கு வர முடியுமா?

எதிர்க்கட்சி கொறடா எஸ்பி. வேலுமணி ஆவேசம்

கோவை

ஒன்றரை ஆண்டுகளில் ரூ.50 ஆயிரம் கோடியை ஸ்டாலின் குடும்பம் கொள்ளையடித்துள்ளது என்றும், தொண்டர்கள் மீது பொய் வழக்கு பதிந்தால் திருப்பி தரும் காலம் வரும் என்றும் கூறியுள்ள எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, தி.மு.க.வில் சாதாரண தொண்டன் தலைமை பதவிக்கு வர முடியுமா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

கோவை புறநகர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட தொண்டாமுத்தூர் தொகுதி கழகம் சார்பில் கோவை குனியமுத்தூர் பகுதி பி.கே.புதூரில் பகுதி கழக செயலாளர் த.மதனகோபால் தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சுண்டக்காமுத்தூர் பகுதி கழக செயலாளர் வி.குலசேகரன், பகுதி தலைவர் எஸ்.எம்.உசேன், வார்டு செயலாளர் ஏ.செல்லப்பன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஆர்.சந்திரசேகர், பகுதி கழக செயலாளர்கள் பிகே. சீனிவாசன், லாலி ரோடு விஜய், ஒன்றிய கழக செயலாளர்கள் டி.பி.வேலுசாமி, டி.சக்திவேல், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி.வேலுமணி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஏழை எளியோருக்காக பேரறிஞர் அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி தான் திமுக. அதற்கு முன்பு மிட்டா மிராசுதாரர்கள் மட்டுமே உயர் பதவிக்கு வர முடியும்.

சாதாரண பாமரனும் பதவிக்கு வர முடியும் என்றால் அதற்கு காரணம் அறிஞர் அண்ணா. உங்களை போன்று இருந்தவர் தான் எடப்பாடியார். சிலுவம்பாளையத்தில் சாதாரண கிளை செயலாளராக இருந்து மாவட்ட செயலாளர், எம்எல்ஏ என படிப்படியாக உயர்ந்து முதல்வரானவர்.
முதல்வராக வருவதற்கும், கட்சித் தலைமை பதவிக்கு வருவதற்கும் தகுதி தொண்டர்களுக்கு உண்டு என்றால் அது அதிமுகவில் மட்டுமே முடியும். திமுகவில் இது நடக்குமா?

திமுகவில் கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், உதயநிதி, அதற்குப்பிறகு அவர்கள் வாரிசு தான் உயர் பதவிகளுக்கு வர முடியும். 1967-ல் திமுக ஆட்சியில அமர புரட்சித் தலைவர் முக்கிய காரணமாக இருந்தார். தேர்தல் காலத்தில் புரட்சித்தலைவரை துப்பாக்கியால் சுடப்பட்ட போஸ்டர் தமிழக முழுவதும் பரபரப்பை உண்டு பண்ணி திமுக ஆட்சியில் அமர பேருதவியாக இருந்தது.

இன்னொன்று இந்தி எதிர்ப்பு போராட்டம். அண்ணாவின் மறைவிற்குப் பிறகு புரட்சித்தலைவரின் உதவியால் கருணாநிதி தமிழக முதல்வர் ஆனார். எம்ஜிஆரின் செல்வாக்கை கண்டு பயந்த கருணாநிதி கட்சியை விட்டு நீக்கினார்.

பிறகு புரட்சித்தலைவர் அதிமுகவை தொடங்கி மூன்று முறை தொடர்ந்து முதல்வராக இருந்து ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார். அவரது வழியில் புரட்சித்தலைவியும், எடப்பாடியாரும் பல்வேறு திட்டங்களை தந்தனர்.

கோவை மாவட்டத்தில் பத்துக்கு பத்து ஜெயித்தோம். இதுதான் ஸ்டாலினுக்கு கோபம். எனது வீட்டில் மூன்று முறை சோதனை நடத்திவிட்டனர். ஒவ்வொரு முறையும் அங்கிருக்கும் சேர்களையும், சோபாக்களையும் அதிகாரிகள் பார்த்து செல்கின்றனர். மேலும் ஒன்றும் இல்லை என்றும் எழுதிச் செல்கின்றனர். சோதனையின் போது எவ்வளவோ தொந்தரவு செய்தார்கள்.

அதைக் கூட தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் காவல்துறை செய்த அக்கிரமங்களை பொறுத்துக் கொள்ள முடியாது. காவல்துறையினர் திமுகவின் அடிமையாக உள்ளது. ஏன் என் மீது ஸ்டாலினுக்கு இவ்வளவு கோபம். இங்குள்ளோருடன் படித்து உங்களைப்போன்ற ஒவ்வொருவருடன் பழகி விளையாடியுள்ளேன். இன்று இந்த பதவியில் உள்ளேன்.

கருணாநிதியின் மகன் என்னை எதிரியாக நினைக்கிறார் என்றால் அது எனக்கு பெருமை தான். மோதுவது அந்த மாதிரி இடத்தில் மோதனும். ஏனென்றால் புரட்சித்தலைவி அம்மாவின் மறைவிற்கு பிறகு எடப்பாடியார் தலைமையிலான ஆட்சி அமைய நானும் சில தலைவர்களும் முக்கியமாக காரணமாக இருந்தோம்.

ஸ்டாலின் குறுக்கு வழியில் முதல்வராக முட்டுக்கட்டையாக இருந்தோம். இதனால் ஸ்டாலின் யாரை விட்டாலும் என்னை விட மாட்டேன் என கோவையிலேயே பிரச்சாரத்தில் கூறினார். இதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் எனது வார்டில் ஜெயித்த திமுகவை சேர்ந்த ஒரு கவுன்சிலருக்கு இங்கு துணை மேயராக வாய்ப்பு கொடுத்துள்ளார். அது சந்தோஷம் தான். ஸ்டாலின் தூங்கினாலும் சரி. விழித்தாலும் சரி என்னைப்பற்றி தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

உள்ளாட்சித் தேர்தலில் கொலுசை காட்டி மக்களை ஏமாற்றி விட்டீர்கள். மிசினில் முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளீர்கள். 250 ரூபாய் கொலுசை தந்து அதற்குப் பிறகு வெற்றி பெற்றவர்களை காணவில்லை. அதற்கு பரிசாக சொத்து வரி உயர்வு மின் கட்டண உயர்வு என மக்களுக்கு சுமையை தந்துள்ளீர்கள்.

இனி எம்பி தேர்தலில் ஏதாவது கொடுத்து மக்களை ஏமாற்ற மீண்டும் வருவார்கள். மக்களின் நிலை என்ன என்று கவலைப்படாத கட்சியாக திமுக இருக்கிறது. இந்த திமுக ஆட்சியில் யாராவது வீடு கட்ட முடியுமா? லஞ்சம் தந்தால் தான் பணியே நடக்கும் என்ற சூழ்நிலை உள்ளது.

ஊழலைப்பற்றி பேச திமுகவிற்கு என்ன தகுதி இருக்கிறது. எங்களது ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து, கடைகளில் கட்டாய வசூல் என ஏதாவது இருந்ததா? திமுக ஆட்சியில் அத்தனை அவலங்களும் நடந்து வருகிறது. கழக ஆட்சியில் 50 ஆண்டு கால வளர்ச்சியை தந்தோம். ஆனால் 500 சாலை பணிகளை திமுக ரத்து செய்துள்ளது. இந்த சாலை பணிகளை செய்ய உங்களுக்கு வக்கிருக்கிறதா?

மேயர், துணை மேயர் கவுன்சிலர்கள் எங்கே. பதில் சொல்ல வேண்டி சூழ்நிலை வரும். பணம் மட்டும் தான் திமுகவின் குறிக்கோள். அமைச்சர்கள் கொள்ளை அடிக்கும் பணம் ஸ்டாலின் குடும்பத்திற்கு செல்கிறது. ஒன்றை ஆண்டுகளில் சுமார் 50 ஆயிரம் கோடி கொள்ளை அடித்துள்ளனர். இது நிலைக்காது. இது ஒரு நாடக ஆட்சி. ஸ்டாலின் நடித்துக் கொண்டிருக்கிறார் எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக வெல்லும். எங்களது கட்சிக்காரர்களுக்கு தொந்தரவு தருகிறீர்களா? சூழ்நிலை மாறும்.

அதிகாரிகளை நியாயமாக நடந்து கொள்ளுங்கள். எங்களது கட்சிக்காரர்கள் மீது கை வைத்தாலோ வழக்கு போட்டாலோ திருப்பி பதில் தருவோம். பூச்சாண்டிக்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்.எப்போது தேர்தல் நடந்தாலும் எடப்பாடியார் தலைமையிலான கழகம் ஆட்சி அமைக்கும். அது நிச்சயம்.
இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக கழகக் கொள்கை பரப்பு துணைச்செயலாளர் செல்வி விந்தியா, தலைமை கழக பேச்சாளர்கள் தேவாலா ரவி, முஜிபுர் ரகுமான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.