தமிழகம்

விடியா தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை-எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை

ஒரு நம்பர் லாட்டரி என்ற அரக்கனிடம், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் சிக்கிசீரழிந்து வருகின்றனர். விற்பனையை தடுத்து நிறுத்த விடியா தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அம்மாவின் ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக பணிபுரிய அனுமதித்ததன் விளைவாக, பொதுமக்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை போன்றவைகள் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தன.

முக்கியமாக, பகல் முழுவதும் வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்களின் உழைப்பில் வந்த பணம், லாட்டரி என்ற அரக்கனிடம் சிக்கிச் சீரழிவதை தடுக்க அம்மா அவர்கள் லாட்டரிச்சீட்டு தடை சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தினார்.

ஆனாலும், கள்ளத்தனமாக லாட்டரி விற்பனை ஆங்காங்கே நடைபெற்று வருவதை அறிந்த அம்மாவின் அரசு, ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவோரை, அவர்கள் யாராக இருந்தாலும், இரும்புக்கரம் கொண்டு அடக்கவும், குண்டர் சட்டத்தில் கைது செய்யவும், காவல் துறையினருக்கு முழு சுதந்திரம் வழங்கி இருந்தது. இதன் காரணமாக, அம்மாவின் அரசில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை இல்லாமல் இருந்தது.

ஆனால், 2021-ல் மீண்டும் இந்த விடியா அரசு ஆட்சிக்கு வந்தவுடன், ஒரு நம்பர் லாட்டரி என்ற அரக்கனிடம் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் சிக்கிச்சீரழிந்து வருகின்றனர். இதைத்தடுக்க, இந்த விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி, பேட்டி மற்றும் அறிக்கை வாயிலாக அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தும், இதுவரை இந்த விடியா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழகத்தில் பல்வேறு நகரங்களிலும், குறிப்பாக, தலைநகர் சென்னையின் அனைத்துப்பகுதிகளிலும் ஒரு நம்பர் லாட்டரி விற்பனையாகிறது என்று நாளிதழ்கள் மற்றும் தனியார் ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ஒருசில காவல் துறையினர் மற்றும் ஆளும் கட்சி நிர்வாகிகள் உதவி இல்லாமல் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை சாத்தியமில்லை என்பதை அனைவரும் அறிவார்கள்.

எப்போதும் தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடிப்பது போல செயல்படும் இந்த விடியா அரசின், முதலமைச்சரின் கீழ் உள்ள காவல்துறை, கண் துடைப்புக்காக ஆப்பரேஷன் கஞ்சா 2.0, ஆப்பரேஷன் கட்டப்பஞ்சாயத்து ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டது போல், எப்போது ஆப்பரேஷன் ஒரு நம்பர் லாட்டரி 2.0 என்று நடவடிக்கையினை எடுக்கும் என்று தெரியவில்லை.

`ஆப்பரேஷன் வெற்றி-நோயாளி மரணம்’ என்பது போல் தான் தற்போதைய காவல் துறையினரின் நடவடிக்கைகள் இருக்கிறது. ஒரு பக்கம் ஆப்பரேஷன், மறுபக்கம் குற்றங்கள் பெருகி வருகின்ற நிலை, இந்த விடியா அரசின் நிர்வாகத்திறமை இன்மையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

எனவே, மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து, ஒரு நம்பர் லாட்டரிச்சீட்டு மற்றும் எந்தவிதமான இதர லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் பிடியில் உடனடியாக கொண்டு வர வேண்டும் என்றும், இச்செயல்களில் ஈடுபடுவோர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.