சிறப்பு செய்திகள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் நடத்திய போராட்டங்கள் ஏராளம்-பட்டியலை வெளியிட்டு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை

மக்கள் நலனுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டுள்ளது என்பததை அறிக்கை வாயிலாக சுட்டிக்காட்டியதோடு தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயலை கண்டித்து நாங்கள் குரல் கொடுத்து இருக்கிறோம்,

பல அறிக்கைகளை நான் வெளியிட்டு இருக்கிறேன், விடியா தி.மு.க. தி.மு.க. அரசை கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறது என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வாயிலாக பட்டியலை வெளியிட்டு உள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சட்டமன்றத்திற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, மிக சிறந்த எதிர்க்கட்சியாக, பிரதான எதிர்க்கட்சியாக, மக்களின் குறைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்து சென்று அவற்றிற்கு தீர்வு காணும் மாபெரும் மக்கள் இயக்கமாக செயல்படுகிறது என்பதை அறிக்கை வாயிலாக கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தி.மு.க. அரசின் தவறான அணுகுமுறைகளை எடுத்துக்கூறியதோடு, குறைகளையும் சொல்லி அவற்றை திருத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தி இருக்கிறார். அதே நேரத்தில் தி.மு.க. அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்தும் இருக்கிறார்.

இதுகுறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

1. நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த களப் பணியாளர்களை மாற்றுமாறு சென்னை மாநகராட்சி அதிகாரிகளை தி.மு.க.வினர் மிரட்டியபோது, அதனை கண்டித்து 24-05-2021 அன்று நான் அறிக்கை வெளியிட்டேன். இதனை தொடர்ந்து களப்பணியாளர்களை மாற்றுவது தடுத்து நிறுத்தப்பட்டது.

2. ஆசிரியர் தேர்வு வாரியத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துடன் இணைக்க தி.மு.க. அரசு முடிவெடுத்தபோது, அதனை கண்டித்து 02-06-2021 அன்று நான் அறிக்கை விடுத்ததோடு, அதில் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால், அவற்றை போக்கி சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற வேண்டுகோளையும் விடுத்தேன். இதன் காரணமாக, ஆசிரியர் தேர்வு வாரியம் இன்றும் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

3. ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்பட இருப்பதாகவும், அந்த கட்டடம் மீண்டும் சட்டமன்றமாக மாற்றியமைக்கப்படும் என்ற செய்தி வெளிவந்தவுடன் அதனை கண்டித்து 11-06-2021 அன்று நான் அறிக்கை வெளியிட்டதோடு இந்த முடிவை கைவிட வேண்டுமென்று வலியுறுத்தினேன். இன்றளவிலும் ஓமந்தூரார் மருத்துவமனை மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

4. கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு குறைந்தபட்ச உதவி கிடைக்கும் வகையில் புதிய வழிமுறைகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வகுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போது, அனைத்து குடும்பங்களும் நிவாரணம் பெறும் வகையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களில் இருக்கும் தவறினை சரி செய்யுமாறு 02-07-2021 அன்று நான் அறிக்கை வெளியிட்டு இருந்தேன்.

இது மட்டுமல்லாமல் 30-05-2021 அன்றே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க ஒரே மாதிரியான முடிவை எடுக்குமாறு இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தேன். தமிழ்நாடு அரசு கூட இதுபோன்ற வேண்டுகோளை விடுக்கவில்லை என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இன்றைக்கு, கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 50,000 ரூபாய் நிதி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

5. ஏழாண்டுகள் மட்டுமே செல்லுபடியாகக்கூடிய ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்று மத்திய அரசு அறிவித்தோடு புதிய சான்றிதழ்களை வழங்குமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது. இதில் காலதாமதம் ஏற்பட்டபோது, அதனை வலியுறுத்தி நான் 14-07-2021 அன்று நான் அறிக்கை வெளியிட்டேன். இதனையடுத்து, புதிய சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

6. ஆவின் பால் அட்டைதாரர்களிடமிருந்து தனி நபர் விவரங்களை பெற அரசு ஆணையிட்டபோது அதற்கு கண்டனம் தெரிவித்து நான் 09-08.2021 அன்று அறிக்கை வெளியிட்டேன். இதனைத் தொடர்ந்து தனிநபர் விவரங்களை பெறுவது கைவிடப்பட்டது.

7. தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் கொலைகளை சுட்டிக்காட்டி 23-09-2021 அன்று நான் விரிவான அறிக்கை வெளியிட்டேன். இதனைத் தொடர்ந்து 2,500 ரவுடிகளை காவல்துறையினர் பிடித்தனர்.

8. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 14 விழுக்காடு உயர்த்தப்பட்ட போது, அதனை மாநில அரசு ஊழியர்களுக்கும் 01-07-2021 முதல் வழங்க வேண்டுமென்று நான் 22-10-2021 நாளிட்ட அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்தேன். ஆனால், 01-01-2022 முதல் தான் நடைமுறைப்படுத்தப்பட்டது.

9. காவேரி டெல்டா மண்டலத்திற்குட்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை உருவாக்குவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பொருட்டு 50 லட்சம் ரூபாய் செலவில் ஒப்பந்தப்புள்ளி அறிக்கை தமிழ்நாடு அரசினால் வெளியிடப்பட்டபோது அதனை கண்டித்து 01-11-2021 அன்று நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். இதனைத் தொடர்ந்து இது கைவிடப்பட்டது.

10. முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பினை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையினை எதிர்த்து மனுத்தாக்கல் செய்யுமாறு தி.மு.க. அரசை வலியுறுத்தி 31-01-2022 அன்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டேன். இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

11. கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று 16-02-2022 அன்று முதன் முதலில் குரல் கொடுத்தவன் நான்தான்.

12. மேகதாது அணை குறித்து தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று 08-03-2021 அறிக்கை வாயிலாக தமிழ்நாடு அரசிற்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன். இதன் அடிப்படையில் 21-03-2022 அன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

13.ஆன்லைன் விளையாட்டுகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று 30-03-2022 அன்றே நான் அறிக்கை விடுத்திருந்தேன். இதனைத் தொடர்ந்து, ஆன்லைன் விளையாட்டு, மறைமுக லாட்டரி சீட்டு விற்பனை போன்ற சூதாட்டங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு 03-06-2022 அன்று மீண்டும் அறிக்கை வெளியிட்டு இருந்தேன். தற்போது, அதற்கான குழுவினை தமிழ்நாடு அரசு அமைத்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

14. மத்திய பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட இருக்கும் பொது நுழைவுத்தேர்வு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று 04-04-2022 அன்று நான் அறிக்கை வெளியிட்டேன். இதன் அடிப்படையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

15. பாரதிதாசன் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள 147 இணைப்பு கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களும் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து நான் 08-05-2022 அன்று அறிக்கை வெளியிட்டு இருந்தேன். இதனைத் தொடர்ந்து, கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

16. புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கான மாநில வரைவு விதிகளை தமிழில் வெளியிடாத தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து 02-06-2022 அன்று அறிக்கை வெளியிட்டு இருந்தேன். தற்போது அதற்கான பணி துவங்கியுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

17. ஆவின் பால் குறைந்த அளவில் விநியோகிக்கப்படுவதையும், 100 கிராம், 200 கிராம் அளவிலான நெய் கிடைக்காததையும் சுட்டிக்காட்டி 05-06-2022 அன்று நான் அறிக்கை விடுத்திருந்தேன். தற்போது 100 கிராம், 200 கிராம் அளவிலான நெய் விநியோகிக்கப்படுகிறது.

18. எல்.கே.ஜி., யு.கே.ஜி வகுப்புகளுக்கு மூடு விழா நடத்திய தி.மு.க. அரசை கண்டித்து நான் 08-06-2002 அன்று அறிக்கை வெளியிட்டேன். இதனை தொடர்ந்து, இந்த வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.