இனி எப்போது தேர்தல் வந்தாலும் எதிர்க்கட்சி தகுதியை தி.மு.க இழக்கும்-கழக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் பேச்சு

சென்னை
ஏமாற்றப்பட்டதை உணர்ந்து மக்கள் விழிப்படைந்து விட்டார்கள் என்றும் இனி எப்போது தேர்தல் வந்தாலும் எதிர்க்கட்சி தகுதியை தி.மு.க. இழக்கும் என்று கழக செய்தி தொடர்பாளரும், தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை மண்டல செயலாளருமான கோவை சத்யன் பேசினார்.
தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட, மயிலாப்பூர் தொகுதியில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம், ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மயிலாப்பூர் பகுதி கழக செயலாளர் பி.கணேஷ்பாபு தலைமையில் சித்திரைகுலம் காந்தி சாலை அருகில் உள்ள தெற்கு மாட வீதியில் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் வேளச்சேரி எம்.கே.அசோக் முன்னிலை வகித்தார்.
இந்த பொதுக்கூட்டத்தில் அம்மா பேரவை மாநில இணைச்செயலாளர் ஜெ.ஜெயவர்தன், கழக செய்தி தொடர்பாளரும், கழக தொழில்நுட்ப பிரிவு சென்னை மண்டல செயலாளருமான கோவை எம்.சத்யன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இந்த பொதுக்கூட்டத்தில் கழக செய்தி தொடர்பாளரும், தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை மண்டல செயலாளருமான கோவை சத்யன் பேசியதாவது:-
இந்தியாவில் வேறு எந்த கட்சிக்கும் இல்லாத ஒரு பெருமையை தேடித்தந்துள்ளார் கழகத்தின் நிறுவனர் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர். இந்த இயக்கம் ஆரம்பித்து 50 ஆண்டுகள் ஆகின்றன. பொன்விழா ஆண்டில் இருக்கும் நாள் வரலாற்றை சற்று திரும்பிப்பார்க்க வேண்டும். உங்கள் கட்சியின் கொள்கை என்ன என்று புரட்சித்தலைவரை கேட்ட பொழுது எனது கட்சியின் கொள்கை அண்ணாயிசம் என்றார்.
அண்ணாயிசம் என்றால் என்ன என்று கேட்ட பொழுது சமத்துவமும் சமூக நீதியும் தழைக்கும் பகுத்தறிவு கொண்ட சமுதாயத்தை படைத்திடுவோம் என்றார். அண்ணா மீது கொண்ட பற்றினால் தான் நிறுவிய கழகத்திற்கு அண்ணாவின் பெயரையும் சூட்டி துவங்கிய 50 ஆண்டுகால வரலாற்றில் முப்பத்தி இரண்டு ஆண்டுகள் தமிழகத்தை ஆளும் வரலாற்றை படைத்தவர் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவரும் புரட்சித்தலைவி அம்மா அவர்களும்.
ஆனால் இன்று அண்ணாவிற்கு திமுக உரிமை கொண்டாடுவது விந்தையாக உள்ளது. புரட்சித்தலைவி அம்மா சட்டமன்றத்தில் சூளுரைத்து இதுபோல் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் பணி இந்த இயக்கம் இருக்கும் என்கின்ற கனவை நினைவாக்க கழகத்தின் காவல் தெய்வமாய் எதிரிகளின் சூழ்ச்சியிலிருந்து கழகத்தை காத்து வெற்றிப்பாதையில் வழி நடத்தி சென்று கொண்டிருக்கும் கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் நமக்கெல்லாம் கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.
எடப்பாடியார் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த முதல் மாதத்திலேயே குடிமராமத்து இன்னும் எனும் உன்னத திட்டத்தை மக்கள் பாராட்ட நீர் மிகை மாநிலமாக தமிழகத்தை மாற்றி சாதனை படைப்போம் சாதனை படைக்கும் திட்டமாக அறிவித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து பதினெட்டு மாதம் கடந்தும் இதுவரை மக்களை ஏற்றம்பெற செய்யும் ஒரு திட்டத்தையும் அறிவிக்காமல் கழக ஆட்சியில் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களுக்கு பெயரை மாற்றி ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை மட்டும் செய்துகொண்டிருக்கிறது இந்த விடியா தி.மு.க. அரசு.
ஸ்டாலின் தான் வருகிறார், விடியல் தரப்போகிறார் என்று பாடலை கேட்டால் வீட்டில் இருக்கும் மகளிர் அங்கிருக்கும் தொலைக்காட்சி பெட்டி மற்றும் வானொலி பெட்டியை தூக்கி போட்டு உடைக்கும் காலமாக இன்று இருக்கிறது பொங்கல் தொகுப்பில் ஆரம்பித்த ஊழல் இன்று அனைத்து துறைகளிலும் கட்டிங் கொடுக்காமல் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடப்பதில்லை.
ஒரு குடும்பம் மட்டும் தண்ணீர் பாட்டில் விற்கும் தொழிலில் இருந்து அனைத்து துறைகளிலும் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. மக்கள் நலம் என்பதை மறந்து குடும்ப நலம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
பள்ளிகளில் காலை சிற்றுண்டி என்பதே தி.மு.க கண்டுபிடித்து கொண்டு வந்தது அல்ல. காலம் காலமாக பேசப்பட்டு வந்து 2019ம் ஆண்டு எடப்பாடியார் அறிவிப்பு தரப்பட்டு நடைமுறைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட திட்டங்களில் ஒன்று. ஆனால் பள்ளி குழந்தைகளுடன் காலை சிற்றுண்டி உணவு உண்டு அதே தட்டில் தண்ணீர் பாட்டில் கொண்டு கைகழுவிய வரலாறும் பார்த்து மக்கள் நொந்துபோய் இருக்கின்ற காலமும் இதுதான்.
தமிழகத்தின் முன்னணி நடிகர் ஸ்டாலின் தினம் தினம் ஒரு ஒரு ஷூட்டிங் நடத்தி அதை வெளியிடுவதில் மட்டும் கண்ணும் கருத்துமாக உள்ளார். காலையில் சைக்கிள் ஓட்டுவது அதுவும் மிதிவண்டி கிடையாது மோட்டார் பொருத்திய சைக்கிள் அதில் மிதிப்பது போல் நாடகம் மட்டுமே நடிப்பு மட்டுமே டீக்கடையில் டீ குடிப்பது திடீர் திடீர் என்று ஆய்வுகள் பெயரில் சூட்டிங் நடத்துவது
காங்கிரசுடன் கூட்டணியில் இருந்த பொழுது மத்திய அரசை இன்று ஒன்றிய அரசு என்று பெயர் மாற்றம் செய்து ஸ்டிக்கர் ஒட்டியது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உரிமையும் வாழ்வாதாரத்தையும் மீட்டெடுப்போம் என்று வீரவசனம் பேசிவிட்டு இன்று தினம் தினம் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்களின் படகுகள் சிறைபிடிக்கப்பட்டு ஏலம் விடப்படும் வரையில் வேடிக்கை பார்த்துவிட்டு ஏலம் விடும் நாளில் பிரதமருக்கு கடிதம் எழுதும் கையாலாகாத ஒரு அரசை ஸ்டாலின் நடத்தி வருகிறார்.
சீர்கெட்டு கிடக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஆட்சிக்கு வந்த 7 மாதத்தில் 660 கொலைகள் அதாவது சராசரியாக 100 கொலைகள் ஒரு மாதத்திற்கு ஒரு நாளுக்கு மூன்று கொலைகள் என்று இந்த விடியா ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.போதை பொருள்கள் கட்டுக்கடங்காமல் சந்து பொந்து இண்டு இடுக்குகளில் எல்லாம் கிடைக்கிறது. போதை பொருட்களுக்கு அடிமையாக தங்களுடைய எதிர்காலத்தை வாழ்க்கையை தொலைத்து கொண்டிருக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்.
இதை கண்டிக்க வேண்டிய அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. ஏனென்றால் அந்த போதை வஸ்துக்களை விற்பனை செய்வதே திமுக காரர்கள் என்பதால் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் திமுக ஆட்சியில் ஏவல் துறையான காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு 2000 ரூபாய் கொடுத்துவிட்டு உங்கள் ஒவ்வொருவரிடமும் இருந்து பத்தாயிரம் ரூபாய் பிடுங்குவது இந்த திமுக ஆட்சியின் சாதனை. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் வயிற்றில் அடித்தார்கள், பின்னர் குடியிருக்கும் வீட்டின் சொத்து வரியை உயர்த்தி வீட்டில் இருப்பதா வேண்டாமா என்கின்ற நிலையை ஏற்படுத்தினார்கள் பின்னர் வீட்டிற்கு வரும் மின்சார கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள் இப்படி அனைத்து வகையிலும் வரியை உயர்த்தி உங்களிடமிருந்து பணத்தை பிடுங்கி ஒரு குடும்பமே செல்வ செழிப்புடன் வாழ்வதற்கு வழிவகை செய்து கொண்டிருக்கும் அரசு தான் இந்த விடிய தி.மு.க அரசு.
மக்கள் மிக விவரமாக உள்ளார்கள். விழிப்படைந்து விட்டார்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை திமுகவின் பொய் வாக்குறுதிகள் மூலம் ஏமாற்றப்பட்டதை மக்கள் இன்று உணர்ந்து இருக்கிறார்கள் அந்த உணர்வின் வெளிப்பாடு தேர்தலை நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது எப்படி 2011ம் ஆண்டு எதிர்க்கட்சி என்னும் தகுதியை இழந்த திமுக இனி எப்பொழுது தேர்தல் வந்தாலும் எதிர்க்கட்சி தகுதியை இழக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
இவ்வாறு கழக செய்தி தொடர்பாளரும், தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை மண்டல செயலாளருமான கோவை சத்யன் பேசினார்.