சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்-முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தல்

கன்னியாகுமரி,
அழகியபாண்டியபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் பயன்பெறும், பூதப்பாண்டி, தாழக்குடி, ஆரல்வாய்மொழி பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் சீராக கிடைப்பதற்கு குடிநீர் வடிகால் வாரியம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமப்புற மக்களின் நலன் கருதி அழகிய பாண்டியபுரம் கூட்டுகுடிநீர் திட்டம் கழக ஆட்சியில் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் கிராம மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் இக்கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வந்த பூதப்பாண்டி, தாழக்குடி, ஆரல்வாய்மொழி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 10 நாட்களுக்கு மேலாக குடி தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். குறைந்த மின் அழுத்தம் காரணமாக குடி தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் அருமநல்லூர் பகுதியில் மின் குறைபாடு காரணமாக அங்குள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு மிகுந்த மன வருத்தத்தையும், துன்பத்தையும் அளித்து வருகிறது.
புரட்சித்தலைவி அம்மா மற்றும் எடப்பாடியார் ஆட்சியில் மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகம், இன்று அந்த பொலிவை இழந்து காணப்படுகிறது. மின் அழுத்த குறைபாடு காரணமாக இப்பகுதிகளில் தண்ணீர் விநியோகம் நடைபெறாத நிலை தொடர்ந்து இருந்து வருகிறது.
இப்பிரச்சினையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உடனடியாக தலையிட்டு குடிதண்ணீர் விநியோகம் நடைபெறாத அனைத்து பகுதிகளிலும், குடிதண்ணீர் விநியோகம் சீராக நடைபெற தேவையான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு மக்களுக்கு தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
இதற்கு காரணமாக இருக்கும் மின் அழுத்த குறைபாட்டை சரிசெய்ய சம்பந்தப்பட்ட மின்துறை அலுவலர்களிடம் பேசி இதனை சரி செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மாவட்டத்தின் எந்த ஒரு பகுதியிலும் குடி தண்ணீர் விநியோகம் சீராக நடைபெறவில்லை என்ற புகார் பொதுமக்களிடமிருந்து வராத வகையில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் கூறியுள்ளார்.