கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து உயர்வு-விடியா தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை

சென்னை
கட்டுமான பொருட்களின் விலை உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதால் வீடு கட்டும் கனவு, கானல் நீராகும் சூழல் உருவாகியுள்ளது. விலை உயர்வை கட்டப்படுத்த விடியா தி.மு.க. எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வேதனையுடன் தெரிவித்து உள்ளனர்.
கட்டுமான பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அவர்களுடைய வீடு கட்டும் கனவு வெறும் கனவாகவே போய் விடுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கொரோனா காரணமாக முடங்கிக்கிடந்த கட்டுமான பணி, கடந்த ஓராண்டாக மெல்ல வேகம் எடுத்து வருகிறது. ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, வட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் அதிகளவு அழைத்து வரப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், கட்டுமான பொருட்களான செங்கல், கம்பி, சிமெண்ட், மணல், ஜல்லி, எம்.சாண்ட், மின்சாதன பொருட்கள், டைல்ஸ், பிளம்பிங் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டு, 35 ஆயிரம் ரூபாய் முதல், 40 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்ட ஒரு டன் கம்பி தற்போது, 75 ஆயிரம் முதல், 82 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. ஒரு ஆண்டில் கம்பியின் விலை, 90 முதல் 100 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதே போன்று மின் சாதன பொருட்கள், பிளம்பிங் பொருட்களின் விலையும், 30 முதல், 35 சதவீதமும் பெயின்ட், சானிடரி பொருட்கள், செங்கல், சிமென்ட் உள்ளிட்ட பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து உள்ளன.
குறிப்பாக, சின்ன தடாகத்தில் செங்கல் சூளைகள் மூடப்பட்டதால், வெளியூர்களில் இருந்து செங்கற்களை கொள்முதல் வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தேவை அதிகமாக இருப்பதால், ஒரு செங்கல்லின் விலை, 12 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
கட்டுமான செலவு ஒரு சதுர அடிக்கு, 1,200 ரூபாய் இருந்தது, தற்போது, 2,400 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர குடும்பத்தினர் தங்களது வீடு கட்டும் கனவை நனவாக்க முடியாமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். வீடு கட்டி விற்பனை செய்த பலர், கட்டுமான பொருட்களின் கடுமையான உயர்வால், தங்களுடைய தொழிலை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
கட்டுமான பொருட்களின் விலை உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவு, கானல் நீராகும் சூழல் உருவாகியுள்ளது. சென்னை, கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் வீடுகளின் வாடகை தாறுமாறாக உயர்ந்து வருவதால், நடுத்தர மக்கள், தங்களுடைய வீடு கட்டும் கனவை செயல்படுத்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்டுமான பணியை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர்கள், டெண்டர் எடுத்தவர்கள் பணிகளில் நஷ்டம் இல்லாமல் முடிப்பது எப்படி என, தெரியாமல் தவித்து வருகின்றனர்.
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த விடியா தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஏழை, எளிய, நடுத்தர மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.