அண்ணா பிறந்த நாளை கொண்டாடும் தகுதி கழகத்திற்கு மட்டுமே உண்டு

தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி பேச்சு
சென்னை,
அண்ணா பிறந்த நாள் விழாவை கொண்டாடுவதற்குரிய தகுதி கழகத்திற்கு மட்டுமே உண்டு என்றும் தி.மு.க.வுக்கு எந்த உரிமையும் கிடையாது என்றும் தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான விருகை வி.என்.ரவி பேசினார்.
தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்டம் விரும்பாக்கம் வடக்கு பகுதி கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் தசரதபுரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தென் சென்னை தெற்கு, மேற்கு மாவட்ட கழக செயலாளரும், விரும்பாக்கம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான விருகை வி.என்.ரவி தலைமை பேசியதாவது:-
தமிழகத்தில் எத்தனையோ தலைவர்கள் உருவாகியிருப்பார்கள். அழகு இல்லை. உயரம் இல்லை. ஒரு சாதாரண மனிதர் தமிழகத்தை ஆட்சி செய்தார் என்றால் அது அவருக்குத்தான் பொருந்தும். இந்த விரும்பாக்கத்தில் தான் கூட்டம் போடுகிறார் அண்ணா. வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். புரட்சித்தலைவர் அண்ணாவிடம் நிதி அளிக்கிறார். அப்போது அண்ணா புரட்சித்தலைவரிடம் தம்பி உன் முகத்தை தமிழகம் முழுவதும் காட்டினால் போதும் எனக்கு வாக்குகள் கிடைக்கும் என்றார்.
தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார் புரட்சித்தலைவர். தன்னுடைய மனைவி மரணத்திற்கு வராமல் கூட தேர்தல் பிரச்சாரத்தை முடித்து வந்த ஒரே தலைவர் புரட்சித்தலைவர். 1967ம் ஆண்டு திமுக வெற்றி பெற்றது. அண்ணா முதல்வராக வருகிறார். இரண்டு ஆண்டுகள் மட்டுமே முதல்வராக இருந்தார். அவர் முதல்வராக இருந்த இரண்டு ஆண்டுகள் தமிழகத்திற்கு யாரும் செய்ய முடியாத சாதனையை படைத்தார்.
மதராஸ் மாகாணத்தை இன்றைக்கு தமிழகம் என்று பெயர் மாற்றியவர் அண்ணா. ஒரு படி அரிசி திட்டத்தை கோவையில் தொடங்கி வைத்தார். அவர் மறைந்தால் கூட புரட்சித்தலைவர் அவர் பெயரில் கட்சியை தொடங்கினார். இதைவிட பெருமை யாருக்கும் கிடைக்காது. கொடியில் அண்ணா கை காண்பிப்பது போல வைத்துள்ளார். அண்ணாவின் விழாவை கொண்டாடுவதற்கு உரிய தகுதி கழகத்திற்கு மட்டுமே உண்டு. அது திமுகவுக்கு கிடையாது. ஒரு வீட்டைக்கட்டி அனைத்து பணிகளையும் செய்து தயார் நிலையிலிருந்த போது அந்த சாவி கருணாநிதியிடம் சென்று விட்டது. வீட்டை அவர் கட்டவில்லை.
புரட்சித்தலைவர் அப்படியில்லை. 1972ல் கட்சியைத் தொடங்கினார். அண்ணா மறைவுக்குப்பிறகு கருணாநிதி யாரை பிடித்தால் முதல்வராக ஆகலாம் என்று சரியாக கணித்து புரட்சித்தலைவரிடம் வந்து என்னை முதல்வராக்கினால் நான் நன்றி உடையவனாக இருப்பேன் என்றார்.
புரட்சித்தலைவரும் சரி ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர் கருணாநிதி என்று நினைத்து புரட்சித்தலைவர் அவரை முதல்வராக்கினார். ஆனால் இரண்டே ஆண்டுகளில் அவர் வேலையை காண்பித்து விட்டார். புரட்சித்தலைவர் கணக்கு கேட்டார். கணக்கு கேட்டவுடனே கருணாநிதி எம்ஜிஆர் இந்த கட்சியில் தொடர்ந்து இருந்தால் தனக்கு பெரிய பின்னடைவு ஏற்படும் என்று கட்சியை விட்டு நீக்கினார்.
அன்றைக்கு ஒரு கட்சி நிர்வாகி கூட புரட்சித்தலைவருடன் வரவில்லை. தொண்டர்களும், ரசிகர்களும் தான் புரட்சித்தலைவருடன் வந்தார்கள். புரட்சித்தலைவர் தொடங்கிய இந்த இயக்கம் மக்களுக்கான இயக்கம். நாங்கள் அனைவரும் சாதாரணமான குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
எங்களை இந்த அளவுக்கு உயர்த்தி வைத்தவர் புரட்சித்தலைவி அம்மா. தாய் தந்தையை விட உயர்ந்தவர் யாரும் கிடையாது. ஆனால் அதற்கும் மேலே ஒரு படி மேலே தான் அம்மாவை நாங்கள் நேசிக்கிறோம். எளிமையான தலைவி. சாதாரண மனிதர்களை கோபுரத்தில் அமர வைத்து அழகு பார்த்த தலைவி.
அம்மாவுக்கு நான் என்ன சொந்தக்காரனா. அல்லது தெரிந்தவனா. சாதாரணமாக இருந்த என்னை சட்டமன்றத்திற்கு சென்று பணியாற்ற வாய்ப்பு அளித்தவர் அம்மா. அம்மா மறைவுக்கு பிறகு எடப்பாடியார் ஆட்சிக்கு வந்தார். அவர் ஆட்சியில் என்ன குறை இருந்தது சொல்லுங்கள்.
ஏன் தோற்றோம் என்று தெரியவில்லை. இந்தியாவில் உள்ள மற்ற மாநில முதல்வர்கள் அனைவரும் பாராட்டும்படி ஆட்சியை அளித்தவர் எடப்பாடியார். ஒரு ஏழை.விவசாய குடும்பத்தில் பிறந்தவர். எங்களைப்போன்று கிளை கழகத்திலிருந்து உயர்ந்த பதவிக்கு வந்தவர். தமிழகம் முழுவதும் ஏரி,குளம் குட்டைகள் அவர் ஆட்சியில் நிரம்பி வழிந்தது. தண்ணீர் பற்றாக்குறை இல்லாத ஆட்சி என்றால் அது எடப்பாடியார் ஆட்சி தான்.
ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி பெற்று தந்தார். இதனால் கூடுதலாக 6 ஆயிரம் இடங்கள் கிடைத்துள்ளது. ஏழை மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்த ஒரே முதல்வர் எடப்பாடியார். இதனால் ஏழை மாணவர்கள் அதிக பயன்களை பெற்று வருவதை நாம் கண்ணால் காண்கின்றோம்.
ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்தை சேர்ந்த மாணவி என்று ஏழைகளின் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து பயன்பெற்று வருவதற்கு காரணமாக இருந்தவர் எடப்பாடியார். கருணாநிதி உயிரோடு இருந்த காலத்தில் ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி அளிக்க வேண்டும் என்று நினைத்தாரா. நினைக்கவில்லை. கொடுத்தால் நாட்டை அழித்து விடுவார் என்று அவருக்கு தெரியும் அதனால் வழங்கவில்லை.
44 வயதில் கருணாநிதி முதலமைச்சர். ஸ்டாலின் 67 வயதில் முதலமைச்சர். வித்தியாசத்தை பாருங்கள். நாங்கள் அனைவரும் நீங்கள் பார்த்து வளர்ந்த பிள்ளைகள். ஸ்டாலின் குடும்பம் ஒட்டுமொத்தமாக அலிபாபா கும்பல். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், கனிமொழி போன்ற அலிபாபா குடும்பம், நாட்டை துண்டு துண்டாக்கி வருகிறார்கள்.
தமிழகத்தில் மிகப்பெரிய செல்வந்தர் குடும்பம் எது என்றால் அது ஸ்டாலின் குடும்பம் தான். இன்றைக்கு லஞ்சம் லாவண்யம் தலைவிரித்து ஆடுகிறது. எங்கு சென்றாலும் லஞ்சம், அம்மா அளித்த முதியோர் உதவித்தொகையை நிறுத்தியுள்ளார்கள். அவர்கள் என்ன தவறு செய்தார்கள். கல்வித்துறையில் 48 சதவீதற்கு மேல் வளர்ந்திருக்கிறோம் என்றால் அதற்கு யார் காரணம். அம்மா ஆட்சி தான் காரணம்.
இவ்வாறு தென்சென்னை தெற்கு, மேற்கு மாவட்ட கழக செயலாளரும், விரும்பாக்கம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான விருகை வி.என்.ரவி பேசினார்.