ஏர்வாடியில் மதநல்லிணக்க சந்தனக்கூடு விழா-பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர்

ராமநாதபுரம்
உலக புகழ் பெற்ற ஏர்வாடி தர்ஹா மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மகான் குத்புதீன் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹா 848-ம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நேற்று அதிகாலை நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக நடைபெறும் சந்தனக்கூடு விழாவில் தமிழகம் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டு சந்தனக்கூடு விழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான உரூஸ் என்னும் சந்தனக்கூடு நேற்று முன்தினம்மாலை தொடங்கியது. நாட்டியக்குதிரைகள் நடனத்துடன், அலங்கரிக்கப்பட்ட யானை ஊர்வலத்துடன், வானில் வர்ண ஜாலம் காட்டிய வாண வேடிக்கை சத்தத்துடன் மத நல்லிணக்க சந்தனக்கூடு நேற்று அதிகாலை தர்ஹா வந்தடைந்தது.
மக்பராவில் புனித சந்தனம் தாஹா ஹக்தார் பொது மகா சபை நிர்வாகிகளால் பூசப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஏர்வாடி தர்ஹா ஹக்தார்கள் பொது மகா சபையினர் செய்திருந்தனர். மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு நேற்று ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.