ரூ.82 கோடியில் பேனா வைக்க மட்டும் நிதி எங்கிருந்து வந்தது?முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி கேள்வி

திருச்சி
அரசு கஜானாவில் பணமே இல்லை என்று சொல்லும் தி.மு.க.வுக்கு, ரூ.82 கோடியில் பேனா வைக்க மட்டும் நிதி எங்கிருந்து வந்தது என்று முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் திருப்பைஞ்சீலியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய கழக செயலாளர்கள் வி.ஆதாளி, பொறியாளர் டி.ஜெயக்குமார், ஆமூர் எஸ்.ஜெயராமன், பேரூராட்சி கழக செயலாளர்கள் துரை.சக்திவேல், எஸ்.சம்பத்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர் பி.தியாகராஜன், எம்.ஜி.ஆர் மன்ற ஒன்றிய செயலாளர் டி.எம்.சோமசுந்தரம், ஒன்றிய துணைச்செயலாளர் மீனாரவி, அண்ணா தொழிற்சங்கம் மாரியப்பன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். ஒன்றிய கழக நிர்வாகிகள் டி.கந்தசாமி, கோமதிசண்முகராஜா, எஸ்.ஆர்.பாலாஜி, எம்.முருகன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.வளர்மதி பேசியதாவது:-
17 லட்சம் தொண்டர்களை கொண்டு உருவாக்கப்பட்ட கழகம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு புரட்சித்தலைவி அம்மாவால் கழகம் வளர்க்கப்பட்டு இன்றைக்கு ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட இயக்கமாக, இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய இயக்கமாக கழகத்தை உருவாக்கித் தந்தார் புரட்சித்தலைவி அம்மா. புரட்சித்தலைவியின் திட்டங்களை, சாதனைகளை சொல்வதற்கு இந்த ஒரு நாள் போதாது.
தொடர்ந்து சொல்லிக் கொண்டே போகலாம். தமிழ்நாட்டிலேயே அதிக திட்டங்களையும், நிதிகளையும் அதிகம் பெற்ற மாவட்டம் எதுவென்று சொன்னால் அது நம்முடைய திருச்சி மாவட்டம் தான் என்று பெருமையுடன் சொல்லலாம்.
புரட்சித்தலைவி அம்மா 2011-ல் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சரானபோது அதிகமான நிதியை திருச்சி மாவட்டம் பெற்றிருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி மட்டும் 4 ஆயிரம் கோடி நிதியை பெற்றிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
புரட்சித்தலைவி அம்மா, கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆகியோர் கொண்டு வந்த திட்டங்களை முடக்குவதிலேயே இன்றைய தி.மு.க அரசு அதிகம் கவனம் செலுத்துகிறது. தி.மு.க தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று சொன்னார்கள். ஆனால், இன்றுவரை அதை தி.மு.க அரசு செய்யவில்லை.
தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் ஆகிறது. இதுவரையும் எந்த திட்டங்களையும் தமிழகத்திற்கு கொண்டு வரவில்லை. ஆனால், புரட்சித்தலைவி அம்மா, கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆகியோர் கொண்டு வந்த திட்டங்களுக்கு தொடர்ந்து ஸ்டிக்கர் ஒட்டும் வேலையைத்தான் தி.மு.க அரசு செய்து கொண்டிருக்கின்றது.
அடுத்து, புரட்சித்தலைவி அம்மா, கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆகியோர் கொண்டு வந்த முக்கிய திட்டங்களுக்கு மூடுவிழா நடத்துவதைதான் தொடர்ந்து தி.மு.க அரசு செய்து கொண்டிருக்கின்றது. தமிழ்நாட்டின் கஜானாவில் பணமே இல்லை என்று தி.மு.க அரசு சொல்லுகிறது. ஆனால், 82 கோடி ரூபாயில் கடற்கரையில் பேனா வைக்கமட்டும் நிதி எங்கிருந்து வந்தது?
புரட்சித்தலைவி அம்மா கொண்டு வந்த ஏழை பெண்களுக்கான திருமண உதவித் திட்டமான தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்தி விட்டார்கள். மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தையும் நிறுத்தி விட்டர்கள்.தி.மு.க தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாந்தோறும் 1000; ரூபாய் உரிமைத்தொகை தரப்படும்.
சிலிண்டருக்கு மானியம் 100 ரூபாய் தரப்படும். அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு பணியாளர்களின் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று சொன்னார்கள். அரசு போக்குவரத்து ஊழியர்கள் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவோம் என்று சொன்னார்கள். இப்படி தேர்தல் நேரத்தில் சொன்ன எண்ணற்ற வாக்குறுதிகளை தி.மு.க இதுவரை நிறைவேற்றவில்லை.
தி.மு.கவை நம்பி, தேர்தல் நேரத்தில் தி.மு.க அளித்த வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த அரசு ஊழியர்கள் இப்பொழுதுதான் உணருகின்றார்கள். கழக ஆட்சியில் நாம் நன்றாக இருந்தோம். ஆனால், தி.மு.கவிற்கு வாக்களித்த காரணத்தினால் நாம் இன்று கடும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம் என்று இப்பொழுது அரசு ஊழியர்களே உணருகின்றார்கள்.
கொரோனா தொற்று பாதிப்பு மிகக்கடுமையாக இருந்தது காலகட்டத்தில் வேலை இழந்து, வருவாய் இழந்து இருந்த மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக பொங்கல் பரிசோடு 2500 ரூபாய் கொடுத்த அரசு எடப்பாடியார் அரசு.
ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு பொங்கல் பரிசு எப்படி கொடுத்தார்கள் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட ஆறு மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறுகின்ற வகையில் காவேரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை எடப்பாடியார் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் துவக்கி வைத்தார்.
ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் அந்தத் திட்டத்தையும் முடக்கி விட்டது. தந்தை பெரியாரின் வாரிசு பேரறிஞர் அண்ணா. பேரறிஞர் அண்ணாவின் வாரிசு புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வாரிசு புரட்சித்தலைவி அம்மா. புரட்சித்தலைவி அம்மாவின் வாரிசு எடப்பாடியார்.
எனவே, நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தொடர்ந்து எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்துவோம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற நாம் பாடுபடுவோம். அடுத்து வர இருக்கின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று அண்ணன் எடப்பாடியாரை மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக சபதம் ஏற்போம்.
இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.வளர்மதி பேசினார்.