சிறப்பு செய்திகள்

தவறு நடந்தது எங்கே என்று சொல்லுங்கள் பார்க்கலாம்-வைத்திலிங்கத்துக்கு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சூடு

சென்னை

திருத்தப்பட்ட சட்டத்தின்படி ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகி விட்டது. 2190 பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று அடுத்த மாதம் 11-ந்தேதி பொதுக்குழு கூட்டப்படும் என்று அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார். இதில் தவறு நடந்தது எங்கே என்று சொல்லுங்கள் என்று வைத்திலிங்கத்திற்கு, சி.வி.சண்முகம் சூடான கேள்வி விடுத்துள்ளார்.

கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் நேற்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி இல்லம் முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இப்போது தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் ஒரு தவறான கருத்தை (வைத்திலிங்கம்) தெரிவிக்கிறார் என்றால், அப்படி என்றால் ஓ.பன்னீர்செல்வம் போட்டது கையெழுத்து இல்லை என்று சொல்கிறாரா, எந்த சட்ட விதி மீறலும் இல்லை.

நாங்கள் இங்கேயே இருக்கிறோம். அவர்கள் சொல்லட்டும். நாங்கள் ராஜினாமா செய்துவிட்டு போகிறோம் நான் நேரடியாக அவருக்கு (வைத்தியலிங்கத்திற்கு) சவால் விடுகிறேன். சும்மா வாயால் பேசுவது, கூவுறது வேண்டாம். முறைப்படி பேசுங்கள். ஜனநாயக முறையில் பேசுங்கள். நாகரீகமாக பேசுங்கள்.

எந்த விதி, எந்த பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை பொதுக்குழுவிலே வைத்து அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவிக்கிறார். அவரே மாட்டிக்கொண்டார். இப்போது நாங்கள் கேட்கிறோம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு நடந்தது. எதன் அடிப்படையில் அந்த தேர்வு நடந்தது. 1.12.2021 தலைமைக்கழகத்திலே நடைபெற்ற செயற்குழு கூட்டத்திலே ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அந்த தீர்மானத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது. கழக விதி திருத்தப்படுகிறது. விதி 20 ஒன்றில் ஒரு திருத்தம். ஒருங்கிணைப்பாளர்கள், இணை ஒருங்கிணைப்பாளர்கள் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். விதி 43ல் கழக பொதுக்குழுவிற்கு சட்ட திட்ட விதிகளை நீக்கவே, ஏற்கவே, மாற்றவே முழு அதிகாரம் உண்டு.

ஆனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளை அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதியை தவிர மற்ற அனைத்திற்கும் பரிகாரம் உண்டு. விதி 45ன் படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு அனைத்து அதிகாரங்களும் உண்டு. விதி விலக்கு அளிக்க அதிகாரம் உண்டு.

ஆனால் அடிப்படை விதியான கழக உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் என்ற விதியை மட்டும் மாற்றும் அதிகாரம் இல்லை. இந்த மூன்று சட்ட திருத்தம் கொண்டு வந்தார்கள்.

அந்த சட்ட திட்டத்தின் படி பொதுக்குழுவில் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் 1ம்தேதி இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வருகிறார்கள். 2ம்தேதியே ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் தேர்தல் அறிவிக்கப்படுகிறது.

24 மணி நேரத்தில் அறிவிக்கப்பட்டு போட்டியின்றி இருவரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். முதலில் சட்டங்களை இயற்றவும், திருத்தவும், மாற்றவும் அதிகாரம் படைத்த ஒரே அமைப்பு பொதுக்குழு மட்டும் தான். பொதுச்செயலாளருக்கோ, மற்ற யாருக்கும் எந்த அதிகாரம் இல்லை. விதி 43 தலைவர் காலத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தம்.

இந்த கட்சியைப் பிளவுபடுத்தி, சின்னத்தை முடக்கிய ஓ.பன்னீர்செல்வத்தை மன்னித்து, இந்த இயக்கத்திலே இணைத்து அவருக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு, இயக்கத்தில் ஏற்று அவருக்கு ஒரு பதவி வழங்க வேண்டும் என்பதற்காகப் பொதுக்குழுவிற்கு திருத்துவதற்கு அதிகாரம் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் கையெழுத்துப் போட்டு மாற்றியவர்கள். அதன்படி பொதுக்குழுவிற்கு அதிகாரம் உள்ளது.

1.12.2021 ன் படி திருத்தப்பட்ட சட்ட விதிகளின்படி தேர்வு செய்யப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டும் தான். மற்ற எதற்கும் எந்த மாற்றமும் செய்யவில்லை. நீங்கள் திருத்திய சட்ட திருத்தத்திற்கு முதலில் தற்போது நடந்த பொதுக்குழுவில் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அந்த திருத்தத்தை நீங்கள் பொதுக்குழுவில் வைக்கவில்லை. மறந்து விட்டார்கள்.

பொதுக்குழுவில் திருத்தப்பட்ட விதியை நீங்கள் வைக்காத காரணத்தினால் அது தானாகவே காலாவதியாகி விட்டது. காலாவதி ஆகிவிட்டால் அதன் மூலம் தேர்வு செய்யப்பட்ட அந்த பொறுப்பும் நேற்றோடு (23ம்தேதியோடு) முடிந்து விட்டது. நேற்றோடு ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகி விட்டது. அவர் தேர்வு இல்லை என்கின்ற போது அந்த விதியும் காலாவதி ஆகி விட்டது. இதுதான் இன்றைய நிலை.

சட்டப்படி திருத்தப்பட்ட விதி பொதுக்குழுவில் வைக்காத காரணத்தினால் அந்த சட்டதிருத்தம் காலாவதி ஆகி விட்டதால் ஒருங்கிணைப்பாளர் பதவியும் அதுவாகவே காலாவதி ஆகி விட்டது. 2017ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வத்திற்காக கழக விதியில் திருத்தம் செய்யப்பட்டது.

தலைவர் காலத்து விதியை உங்களின் சுய நலத்திற்காக ஓ.பன்னீர்செல்வம் என்ற நபருக்கு பதவி வழங்க வேண்டும் என்பதற்காக, இந்த இயக்கம் என்றும் தொண்டர்களால் வழி நடத்தப்பட வேண்டும் என்ற அந்த சட்ட திருத்தத்தையே, திருத்த முடியாது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் என்ற நபர் சுயலாபத்திற்காக திருத்தப்பட்டது.

அம்மாவின் மறைவுக்கு பிறகு இடைப்பட்ட காலத்திற்காகத் தான் அவர் தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவி தற்போது காலாவதி ஆகிவிட்டது. விதி 20ல் பிரிவு 7 ல் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளரால் நியமிக்கப்படும் செயற்குழு உறுப்பினர்களும், தலைமை கழக செயலாளர்களும், அந்த கழக ஒருங்கிணைப்பாளர்களும், அந்த இணை ஒருங்கிணைப்பாளர்களின் பதவிக்காலம் வரையில் நீடிப்பார்.

இதற்கிடையில் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் விடுவிக்கப்பட்டாலே இடைப்பட்ட காலத்தில் அதாவது புதிய கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் வகையில் முந்தைய கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர்களால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் பதவியில் நீடித்து கழக பணியினை தொடர்து செயல்படுத்தப்பட வேண்டும். உங்கள் பதவி போய்விட்டது. நீங்களா மண்ணை வாரி போட்டுக்கொண்டீர்கள்.

தேர்தலை பொதுக்குழு அங்கீகாரம் செய்ய வேண்டும் என்று எங்கும் இல்லை. நேற்று கொண்டு வரப்பட்டு, நிராகரிக்கப்பட்ட இந்த 23 தீர்மானங்களில் முதல் தீர்மானம் டிசம்பர் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை நடைபெற்ற கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கிளையிலிருந்து நியமிக்கப்பட்ட தலைமை கழக நிர்வாகிகள் இந்த பொதுக்குழு பதிவு செய்கிறது. எங்கேயும் அங்கீகாரம் செய்ய வேண்டும் என்று இல்லை. அது சட்டத்திலும் இல்லை. தேர்தல் ஆணையத்திற்கு மட்டும் தெரியப்படுத்த வேண்டும் இதனை முறையாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் தேர்தல் முடிந்த மறுநாளே தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு விட்டது.

தற்போது அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை நாங்கள் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிப்போம். தமிழ் மகன் உசேனுக்கு பொதுக்குழுவை கூட்டுவதற்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளார். (வைத்தியலிங்கம்). பொதுக்குழுவை கூட்டுவதற்கு யாருக்கு அதிகாரம். ஒன்று ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கூட்ட வேண்டும். இல்லை என்றால் பொதுக்குழு உறுப்பினர்களில் 5ல் ஒரு பகுதியினர் கையெழுத்திட்டு கொடுத்து கேட்டுக்கொண்டால் பொதுக்குழுவின் தனிக்கூட்டத்தை கூட்ட வேண்டும்.

இதற்கு ஒருங்கிணைப்பாளர்களின் அனுமதி தேவையில்லை. ஆனால் திருத்தப்பட்ட சட்டத்தின்படி ஒருங்கிணைப்பாளர் பதவி நேற்றோடு (23ம்தேதி) தீர்மானம் நிராகரிப்பட்ட நேரத்தோடு காலாவதி ஆகி விட்டது. தற்போது கழகத்தின் உச்சபட்ச தலைவர் யார் என்றால் அவர் அவைத்தலைவர். அவரிடம் நாங்கள் 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு மனு அளிக்கிறோம். அவரும் கோரிக்கையை ஏற்று அடுத்த மாதம் 11ம்தேதி பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டுவதாக அவதை்தலைவர் அறிவித்துள்ளார். இதில் எங்கும் தவறு இல்லை.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.