சிறப்பு செய்திகள்

அவைத்தலைவர் தேர்வில் எந்த சட்டவிதி மீறலும் நடக்கவில்லை-வைத்திலிங்கத்திற்கு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலடி

சென்னை,

பொதுக்குழுவில் முறையாக அவைத்தலைவர் பெயர் முன்மொழியப்பட்டு தமிழ்மகன் உசேன் கழகத்தின் அவைத்தலைவராக இந்த பொதுக்குழுவிலே அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் எந்தவிதமான சட்டவிதி மீறல்களும் இல்லை என்று வைத்திலிங்கத்திற்கு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார்.

கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் நேற்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி இல்லம் முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கழகத்தின் பொதுக்குழுக்கூட்டம் நேற்று முன்தினம் 23-ந்தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுக்கூட்டம் பற்றி நேற்று கழகத்தின் முன்னாள் துணை ஒருங்கிணைப்பாளரும், இன்றைய தஞ்சை மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் சில கருத்துக்களை சொல்லியிருக்கிறார். எழுப்பியிருக்கிறார்.

இந்த பொதுக்குழுக்கூட்டம் முறையாகக் கூட்டப்படவில்லை. இதற்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்த பொதுக்குழுவில் பொதுக்குழு உறுப்பினர்களை வைத்து நடத்தப்படவில்லை.

கூலி ஆட்களை வைத்தும், அடியாட்களை வைத்தும் நடத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார். கழகத்தின் அவைத்தலைவராக டாக்டர் அ.தமிழ்மகன் உசேன் முறைப்படி தேர்வு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த பொதுக்குழுவிலே நடந்து முடிந்த கழக தேர்தலை அங்கீகாரம் செய்யாத காரணத்தினால் தேர்வு செய்யப்பட்டவர்களின் பதிவு செல்லாது. இதன் காரணமாக இந்த பொதுக்குழுவினுடைய பதிவு செல்லாது என்று தெரிவித்துள்ளார். மீண்டும் பொதுக்குழுவை கூட்டுவதற்கு பொதுக்குழுவிற்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இப்படி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். இதற்கு சில தேவையற்ற வார்த்தைகளை, கருத்துக்களை எப்போதும் போல தலைமை கழகத்தில் நடைபெறும் கூட்டத்திலே ரவுடித்தனமாக பேசுவது போல பேசியுள்ளார். நாங்கள் இப்போது அதைப்பற்றி பேசவில்லை. அவர் எழுப்பியுள்ள 5 கேள்விகளுக்கு நாங்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். முதலில் இந்த பொதுக்குழு முறையாக கூட்டப்படவில்லை. இது சட்ட ரீதியாக கூட்டப்படவில்லை. இதற்கு அங்கீகாரம் இல்லை என்று சொல்லியிருக்கிறார். இது முக்கியமான ஒரு கேள்வி.

இந்த பொதுக்குழுவை கூட்டுகின்ற அதிகாரம் கழக விதி 19-ல் யாருக்கு இருக்கின்றது என்று சொல்லப்பட்டுள்ளது. பொதுக்குழுவை ஒன்று பொதுச்செயலாளர் இப்போது அது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் அந்த பொதுக்குழுவை கூட்டலாம்.

ஆண்டுக்கு ஒரு முறை கண்டிப்பாக கழகத்தின் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். பிறகு தேவைக்கு ஏற்ப எப்போது வேண்டுமானாலும் கூட்டுகின்ற அதிகாரம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு உண்டு.

இல்லை என்றால் மொத்த பொதுக்குழு உறுப்பினர்களே ஐந்தில் ஒன்று, 218 இதனை 5 ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கொடுத்தால், கையெழுத்திட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரிடம் தான் கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை.

நீங்கள் தலைமை கழகத்தில் அளித்துவிட்டு போகலாம். ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அளித்தால், அப்படி அளிக்கப்பட்ட அந்த வேண்டுகோளை (பொதுக்குழுவை) கொடுக்கப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள்ளாக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் அவசியம் பொதுக்குழுவை கூட்ட வேண்டும்.

அவர்களின் அனுமதி இல்லை. கொடுக்கப்பட்ட 30 நாட்களுக்குள்ளாக பொதுக்குழு கூட்டப்பட வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அனுமதி பெற்று கூட்ட வேண்டும் என்று சட்டத்தில் சொல்லவில்லை.

அந்த விதியை நான் படிக்கிறேன். விதி 19 தலைமை கழக பொதுக்குழு. இதில் பிரிவு 7. கழக பொதுக்குழு கூட்டம் ஆண்டுக்கு ஒருமுறை அல்லது கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அவசியம் கருதும் பொழுது கூட்டப்படலாம்.

மேற்படி கூட்டத்திற்கு 15 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு அளிக்க வேண்டும். பொதுக்குழுக் கூட்டம் நடைபெற குறைந்த அளவு, மொத்த அளவில் 5 ல் ஒரு பங்கு வருகை தந்திதிருக்க வேண்டும். பொதுக்குழு உறுப்பினர்களில் 5 ல் ஒரு பகுதி எண்ணிக்கையில் கையெழுத்திட்டு அளித்தால் பொதுக்குழுவின் தனி கூட்டத்தை அறிவிப்பு கிடைத்த 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கூட்ட வேண்டும்.

இங்கு எங்கேயும் எந்த இடத்திலும் அறிவிப்பு கொடுக்கப்பட்ட 30 நாட்களுக்குள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுடைய அனுமதியை பெற்று கூட்டப்பட வேண்டும் என்று சொல்லவில்லை. அறிவிப்பு கிடைத்த 30 நாட்களுக்குள்ளாக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று இருக்கின்றது.

கட்டாயம் என்று உள்ளது. எனவே அவர் கூறியிருக்கின்ற கருத்து முழுக்க, முழுக்க தவறு. இந்த கூட்டத்தை ஒருங்கிணைப்பாளராக இருந்த இந்த கழகத்தில் 23ம்தேதி முன்பு வரை இந்த கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்த, தற்போது இந்த கழகத்தின் பொருளாளராக இருக்கின்ற ஓ.பன்னீர்செல்வமும்,

இந்த கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த தற்போது கழகத்தின் தலைமை நிலைமை செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் ஆகியோர் முறைப்படி கையெழுத்திட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் 2655 பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் 2.6.2022 தேதியிட்ட கடிதத்தை அனைவருக்கும் முறையாக 15 நாட்கள் கால அவகாசம் அளித்து, 23.6.2022 சென்னை வானகரத்தில் பொதுக்குழு கூட்டம் கூடும் என்று கையெழுத்திட்டு அளித்தது யார்.

இந்த குற்றச்சாட்டை சொல்லியிருக்கின்ற கழக முன்னாள் துணை ஒருங்கிணைப்பாளர், மாவட்ட கழக செயலாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளாரே. அவர் இன்றைக்கு தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கின்ற ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்டு கூட்டப்பட்ட கூட்டம் தான் அது. அப்படி என்றால் ஓ.பன்னீர்செல்வம் போட்ட கையெழுத்தை இல்லை என்கிறாரா. போலி என்கிறாரா.

அல்லது அவருக்கு அறியாமல் கையெழுத்து போட்டேன் என்று சொல்கிறாரா. அப்படி இது முறையற்ற கூட்டம் என்று சொன்னால் நாட்டில் பல்வேறு பிரச்சினை இருக்கும் காலகட்டத்திலே, பல்வேறு தீர்க்கப்படாத பிரச்சனை இருக்கும் நிலையில் மக்களுடைய ஜீவாதார பிரச்சனைகள் நீதிமன்றத்தில் இருக்கும் காலகட்டத்தில் இன்றைக்கு அதிகாலை 3 மணி அளவுக்கு மிக அதிகம் முக்கியதும் வாய்ந்த,

இந்த நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகின்ற இந்த வழக்கை விவாதித்து முடிவு எடுக்க வேண்டும் என்றால் நாடு மிகப்பெரிய கேள்விக்குறியாகிவிடும் என்ற நிலையைக் கருதி விசாரிக்கப்பட்ட அந்த வழக்கிலே இவர்கள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் என்ன சொன்னார்கள்.

எங்களுக்கு பொதுக்குழுவை கூட்டுவதற்கு எந்த ஆட்சபேனையும் இல்லை என்று சொன்னார்களா இல்லையா, இதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும். ஒன்று ஓ.பன்னீர்செல்வம் போட்ட கையெழுத்து உண்மையா இல்லையா? நீதிமன்றத்திலே வாதாடுகின்ற பொழுது பொதுக்குழுவை கூட்டுவதற்கு எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று சொன்னார்களா இல்லையா, இந்த இரண்டு நீதிபதிக்கு முன்பாக அதே தேதியில் விசாரிக்கப்பட்ட தனி நீதிபதியுடைய வழக்கு விசாரணையின் போது என்ன சொன்னார். இதுதான் உண்மையான உரிமையியல் வழக்கு.

முழுமையாக விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கு ஏன், எதற்காக எந்த நோக்கத்திற்காக போடப்பட்டது. சட்ட திட்டங்களில் என்ன சொல்லப்பட்டுள்ளது. இது இந்த சட்டப்படி செயல்பட்டுள்ளதா, முறையாக அழைக்கப்பட்டுள்ளார்களா. என்று முழுமையாக விசாரித்து அனைத்து சட்ட விதிகளும் சொல்லப்பட்டது.

பின்னர் பொதுக்குழுவை கூட்டுவதற்கு அதிகாரம் உண்டு. ஒரு கட்சியின் உட்கட்சி விவகாரத்திலே நீதிமன்றங்கள் தலையிடுவதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை. கட்சிக்குள் ஒரு குழுவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளில் தலையிடுவது எங்களுடைய வேலை இல்லை. இது தேர்தல் ஆணையத்தின் பணி. எங்களுடைய பணி அவர்கள் பாதுகாப்பு கேட்டுள்ளார்கள்.

யாருக்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் முழுமையாக பாதுகாப்பு வழங்க வேண்டும். வருபவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கான அழைப்பாணை எடுத்து வர வேண்டும். எந்த ஒரு ஆயுதங்களும் எடுத்து வரக்கூடாது. காவல்துறை முறையாக பரிசோதனை செய்து உள்ளே அனுமதிக்க வேண்டும். காரில் வருபவர்களுக்கு கார் பாஸ் அளிக்க வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகளுடன் தெளிவாக உத்தரவு போடப்பட்டது.

பிறகு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு பொதுக்குழுவை கூட்டுங்கள். நீதிமன்றம் சொன்ன விதிகளின் படி 2665 பேருக்கும் முறையாக புகைப்படம் உள்ள அடையாள அட்டை வழங்கப்பட்டது. கார் பாஸ் யாருக்கும் வழங்கவில்லை. கழக ஒருங்கிணைப்பாளர்,

கழக இணை ஒருங்கிணைப்பாளர், அவை தலைவர் ஆகியோருக்கு மட்டும் தான் பாஸ் வழங்கப்பட்டது. நாங்கள் யாராக இருந்தாலும் கார்களை பார்க்கிங் பகுதியில் விட்டு விட்டு நடந்து சென்று எங்களுடைய அடையாள அட்டையை காட்டி, முறையாக பதிவு செய்து, நாங்கள் உள்ளே சென்று கலந்து கொண்டோம்.

கையெழுத்து பெறவில்லை என்று தெரிவித்துள்ளார். 205 வழக்கறிஞர்கள் அந்த பணியில் ஈடுபட்டிருந்தார்கள். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இரண்டு அல்லது மூன்று வழக்கறிஞர்கள் இருந்து பதிவைக் கவனித்தார்கள். அந்த பதிவேடு வருகை பதிவேடு கிடையாது.

அந்த பதிவேடு என்பது இந்த பொதுக்குழுவிலே இயற்றப்படுகின்ற தீர்மானங்களை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அல்லது நிராகரிக்கிறோம் என்று சொல்லப்பட்டு பதிவு செய்யப்படுகின்ற தீர்மான புத்தகம். நீதிமன்ற உத்தரவை மீறி வந்தது யார் என்றால் வைத்தியலிங்கம் தான். அவர் முறையாக இறங்கி தன்னுடைய அனுமதி சீட்டையும், அடையாள அட்டையை காட்டி தான் வந்திருக்க வேண்டும்.

அவர் ஓ.பன்னீர்செல்வம் காரில் சொகுசாக வந்து இறங்கி விட்டார். ஆகவே இந்த கேள்விக்கு இடமில்லை. இந்த பொதுக்குழு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட்டு, அழைப்பாணை அனுப்பி, முறையாக 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டு, இந்த பொதுக்குழுவிற்கு உயர்நீதிமன்றம் என்னென்ன விதிகளை விதித்ததோ அந்த விதிகளின்படி முறையாக கடைப்பிடித்து இந்த பொதுக்குழு நடத்தப்பட்டுள்ளது.

இதில் எந்தவிதமான சட்ட விதிமீறல்களும் இல்லை.முறைப்படி நாங்கள் நடத்தியுள்ளோம். இரண்டாவது அவைத்தலைவரை முறையாக தேர்வு செய்யவில்லை. அது செல்லாது என்று தெரிவித்துள்ளார். அவைத்தலைவரை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா தான் நியமனம் செய்து அறிவிப்பார் என்றார். ஆனால் சட்டம் அப்படி இல்லை. அம்மா என்ன சொன்னாலும் நாங்கள் ஏற்றுக்கொண்டோம். அம்மா என்ன சொன்னாலும் எங்களுக்கு சட்டம்.

அதனை நாங்கள் கேள்வி கேட்க மாட்டோம். அம்மாவும் முறையாக சட்டப்படியாக தான் செயல்படுவார்கள். அவைத்தலைவர் பதவி காலியாக இருந்த போது பொது செயலாளர் அதிகாரத்தை பயன்படுத்தி இன்னார் அவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அறிவிப்பார்கள். பிறகு அடுத்து வரும் பொதுக்குழுவிலே அதற்கான அங்கீகாரத்தை முன்மொழிந்து அங்கீகாரம் பெறுவார்கள். இதுதான் முறை.

அவருக்கு ( வைத்தியலிங்கம்) நன்றாக இது தெரியும். தெரிந்திருந்தும் திட்டமிட்டு சொல்கிறார். அவர் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் சேர்ந்து தான் அவைத்தலைவரை தேர்வு செய்ய முடியும் என்கிறார். தலைமைக்கழக பொதுக்குழு விதி 5. விதி 19 ல் பிரிவு 5. தலைமைக்கழகத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் கூடி அவைத்தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

கழகத்தின் அவைத்தலைவரை பொதுக்குழு கூடி தான் தேர்வு செய்ய வேண்டும். எங்கும், எந்த இடத்திலும் பொதுச்செயலாளரே அல்லது ஒருங்கிணைப்பாளர்களே முன்மொழிந்து, வழிமொழிந்து தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று சொல்லப்படவில்லை. ஆக இது தவறு.

இன்றைக்கு இவர் தலைவராக தேர்ந்தெடுத்துள்ள முன்னாள் ஒருங்கிணைப்பாளர், இன்னாள் பொருளாளர் கையெழுத்திட்டு, இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட்டு முன்மொழிந்து தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் இருப்பார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டும்,

நேற்று முன்தினம் 23ம்தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் இன்று நடைபெறுகிற பொதுக்குழுவிற்கு தற்காலிக அவைத்தலைவரான தமிழ்மகன் உசேனை நான் வழிமொழிகிறேன் என்று சொன்னாரா இல்லையா. இதற்கு வைத்தியலிங்கம் பதில் சொல்ல வேண்டும்.

தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு தான் பதவி காலம். இது பொதுவிதி. அந்த விதியை நீக்கவே, தளர்தவோ பொதுக்குழுவிற்கு அதிகாரம் உண்டு. ஏற்கனவே அவைத்தலைவரின் பதவி காலியாக உள்ளது. அதனால் தான் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டார்.

அனைத்து மட்டத்திலும் கழகத்தின் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. முடிக்கப்பட்ட அந்த தகவலை தேர்தல் ஆணையத்திற்கும் தெரிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் அவைத்தலைவருக்கான தேர்தல் நடைபெறவில்லை.

ஏன் நடைபெறவில்லை என்றால், பொதுக்குழு எப்போது கூடுகிறதே, அந்த பொதுக்குழுவில் வைத்து தேர்வு செய்து கொள்ளலாம் என்று இருந்தோம். ஆகவே இன்றைக்கு முறையாக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் அழைப்பாணை அனுப்பி கூட்டப்பட்ட இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இங்கு இருக்கும் அனைவரும் பொதுக்குழு உறுப்பினர்கள் தான். யார் வேண்டுமானாலும் முன்மொழியலாம். இதற்கு என்று தனி அதிகாரம் யாருக்கும் இல்லை. எல்லோராலும் இதில் சமம் தான். கழகத்தின் அனைத்து தேர்தலும் நடந்து முடிந்த பின்னர் இந்த பதவிக்கு மட்டும் பொதுக்குழு கூடித்தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது விதி.

அந்த விதியின் படி கூட்டப்பட்ட இந்த பொதுக்குழுவில் அவர் பெயரை முன்மொழிந்து தேர்வு செய்கிறோம். இதில் எங்கே விதிமீறல் உள்ளது. இதில் எங்கே நீதிமன்ற அவமதிப்பு உள்ளது. நீதிமன்றம் பொதுக்குழுவை கூட்டுங்கள். 23 தீர்மானங்களை நீங்கள் நிறைவேற்றினாலும் சரி, நிறைவேற்றவிட்டாலும் சரி.

அதைப்பற்றி ஒன்றும் இல்லை. 23 தீர்மானங்களை நிராகரித்தது நீதிமன்ற அவமதிப்பு என்று (வைத்திலியங்கம்) சொல்லியிருக்கிறார். அந்த 23 தீர்மானங்களை தவிர்த்து வேறு தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது என்று தான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் பொதுக்குழுவின் உரிமை.

இதில் நீதிமன்றம் தலையிடவில்லை. வேறு விவாதங்கள் எல்லாம் விவாதித்துக் கொள்ளலாம் என்று ஆனால் முடிவு எடுக்காதீர்கள் என்று தான் நீதிமன்றம் கூறியுள்ளது. தேர்தலைப்பற்றி எதுவும் சொல்லவில்லை.

நேற்றுமுன்தினம் கூடிய பொதுக்குழுவில் முறையாக அவைத்தலைவர் பெயர் முன்மொழியப்பட்டு தமிழ்மகன் உசேன் கழகத்தின் அவைத்தலைவராக இந்த பொதுக்குழுவிலே அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் எந்தவிதமான சட்டவிதி மீறல்களும் இல்லை.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

—————–