தற்போதைய செய்திகள்

ஒற்றை தலைமை என்ற ஒற்றை குடையின் கீழ் கழகத்தினர் அனைவரும் வந்து விட்டார்கள்-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திட்டவட்டம்

சென்னை

வன்முறைக்கு தீர்வு ஆகாது. ஜனநாயகம் மலர்ந்த கட்சி கழகம் என்றும், ஒற்றை தலைமை என்ற ஒற்றை குடையின் கீழ் கழகத்தினர் அனைவரும் வந்து விட்டார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார்.

சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா நினைவிடத்தில் நேற்று கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய பின்னர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி: ஓ.பன்னீர்செல்வத்தின் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்ட நிகழ்வால் அவர் மிகப்பெரிய மன உளைச்சலில் இருக்கிறார் என்று ஜே.சி.டி.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

பதில்: விரும்பத்தகாத சம்பவம் எது நடைபெற்றாலும் அது கண்டனத்திற்குரியது. இதில் மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால் நீங்கள் மன உளைச்சலில் அவர் (ஓ.பன்னீர்செல்வம்) இருக்கிறார் என்று தெரிவித்தீர்கள்.

எதற்கு இந்த மன உளைச்சல். ஊரோடு ஒத்து வாழ வேண்டும் என்று எதற்கு தெரிவித்தார்கள். ஒட்டுமொத்தமாக எல்லோரும் விரும்பும்போது, அந்த ஒற்றை தலைமை, ஒற்றை குடையின் கீழ் அனைவரும் வந்து விட்டார்கள்.

அப்படி இருக்கும் போது நாமும் தானே ஆதரவு தர வேண்டும். ஆதரவு தராமல் நீதிமன்றத்தை அணுகுவது, தேர்தல் ஆணையத்தை அணுகுவது, பிரச்சினைகளை உருவாக்குவது, இவை அனைத்தும் அவருக்கு மன உளைச்சல் இல்லை. கட்சியினருக்குத்தான் மன உளைச்சல். தொண்டர்களுக்குத்தான் மன உளைச்சல். தொண்டர்கள் தான்.

தொண்டர்கள் இது புரட்சித்தலைவர் ஆரம்பித்த இயக்கம், அம்மா கட்டிக்காத்த இயக்கம், நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் கலகம் செய்கின்ற அளவுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தி விட்டரே என்ற ஆதங்கப்பட்டு வருகிறார்கள். என்னை பொறுத்தவரை வன்முறைக்கு தீர்வு ஆகாது. ஜனநாயகம் மலர்ந்த கட்சி இது.

கேள்வி: இந்த சம்பவம் நடைபெறும்போது எடப்பாடியார் அமைதியாக இருந்தார் என்று சொல்லப்படுகிறதே.

பதில்: யாரும் அதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று எடப்பாடியார் அமைதிப்படுத்தினார். மேடையில் நடந்தவைகளை நீங்கள் இருட்டடிப்பு செய்யாதீர்கள்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.