சிறப்பு செய்திகள்

எடப்பாடியாரின் ஒற்றை தலைமைக்கு பச்சைக்கொடி காட்டாதவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

மதுரை,

மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள கழக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அவர் ( ஓ.பன்னீர்செல்வம்) முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தான் பஞ்சாயத்தைக் கூட்டுகிறார். அம்மா இருக்கும் போது இரண்டு முறை பதவியை ஒப்படைத்தார் என்றால் அந்த பதவியை ஒப்படைக்காமல் இருந்து விட முடியுமா.

அது விசுவாசத்தின் அடையாளமாக இருந்ததை நாங்கள் இன்றைக்கும் ஏற்றுக்கொள்கிறோம். இதில் மாற்றுக்கருத்தே இல்லை. அதேபோல இங்கேயும் ஒப்படைத்து கழக பணியை செய்திருந்தால் நீங்கள் கழகத்தின் தொண்டர்களின் இதயத்தில் மிக உயரத்தில் இருந்திருப்பீர்கள். தீதும் நன்றும் பிற தர வாரா. இதுதான் இன்றைய நிலை.

விதை விதைத்தவன் வினை அறுப்பான். இயக்கத்தை வலுவாக்க அன்றைக்கு அவர் வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டது. அது நடைமுறையிலே செயல்பாட்டிலே பல பின்னடைவுகளை ஏற்படுத்தியது. எம்பி விவகாரத்தில் முடிவே எடுக்க முடியவில்லை.

காங்கிரஸ் கட்சியினர் ஆலோசனை செய்து முடிவு எடுக்கிறோம் என்பார்கள். அவர்கள் கூட தயார் ஆகி விட்ட நிலையில் கழகத்தில் என்ன நடந்தது. கழக வரலாற்றில் முதல் முதலில் மாயதேவர் வெற்றி பெற்றார்.

சட்டமன்றத்தில் அரங்கநாயகம் தான் வெற்றி பெற்றார். கழகத்தின் வாக்கு வங்கி என்பது கொங்கு மண்டலத்தோடு, வன்னிய சமுதாய பகுதிகளோடு, தென் பகுதியில் இருக்கின்ற தேவர் சமூகத்தின் வாக்குகள் முழுமையாக இருந்தது. அதோடு சிறுபான்மையினர், ஆதிதிராவிட மக்கள், குறிப்பாக அருந்ததியர் சமூகத்தின் வாக்கு வங்கியும் இருந்தது. இவை அனைத்தும் கழகத்தின் வாக்கு வங்கிகள். இதில் சாதி, சமய வேறுபாடு கிடையாது.

ஜூலை 11 அன்று பொதுக்குழு நடைபெற வேண்டும் என்பதே தொண்டர்களின் எண்ணம். எஸ்டிஎஸ் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை எதிர்த்தார். திருநாவுக்கரசு அம்மாவை எதிர்த்தார். கழகத்தை எதிர்த்தவர்கள் வாழ்ந்ததில்லை. அந்த இடத்தை அவர் பிடித்து விடுவாரோ என்ற கவலை எனக்கு உள்ளது.

எடப்பாடியாரின் ஒற்றை தலைமைக்கு பச்சைக்கொடி காட்டாதவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். கழக பொதுக்குழு உறுப்பினர்களும் ஒன்றரை கோடி தொண்டர்களும் எடப்பாடியாரின் ஒற்றை தலைமையைத் தான் விரும்புகிறார்கள். எடப்பாடியாருக்கு மக்கள் ஆதரவு உள்ளது.

இந்த இயக்கத்தில் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர். இதில் எந்த பதவி சுகத்தை அனுபவிக்க தொண்டர்கள் தற்போது சீர்திருத்தம் வேண்டும். ஒற்றை தலைமை வேண்டும் என்று கூறுகிறார்கள். டெல்லி சென்று விட்டு தற்போது மதுரைக்கு வரும்பொழுது தொலைபேசியில் கட்சிக்காரர்களிடம் விலை பேசுகிறார்.

தற்போது இதுதான் முதல்முறை ஒரு தலைவரை எல்லோரும் வரவேற்பார்கள். ஆனால் தலைவரே வாவா அழைப்பது எதற்காக. கழகத்தை எதிர்த்த எஸ்டிஎஸ், திருநாவுக்கரசர் போன்று ஓ.பன்னீர்செல்வம் உருவாகுவார்.

தென்மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் இடத்தை பிடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. தலைமை பார்த்துக் கொடுப்பது தான் எல்லாம். இந்த இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் வாழ்க்கை நன்றாக இருந்ததில்லை.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.