தற்போதைய செய்திகள்

நாளைக்கே தேர்தல் வந்தால் கூட கழகம் நிச்சயமாக வெற்றி பெறும் =விந்தியா பேச்சு

கோவை

திமுகவின் திருட்டுத்தனம் மக்களுக்கு நன்றாக புரிந்து விட்டது. நாளைக்கே தேர்தல் வந்தால் கூட கழகம் நிச்சயம் வெற்றிபெறும் என்று கழக கொள்கை பரப்பு துணை பொதுச்செயலாளர் செல்வி விந்தியா பேசினார்.

கோவை புறநகர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட தொண்டாமுத்தூர் தொகுதி குனியமுத்தூர் பகுதி பி.கே.புதூரில் பகுதி கழக செயலாளர் த.மதனகோபால் தலைமையில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி. வேலுமணி சிறப்புரை ஆற்றினார்.

அவரை தொடர்ந்து கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் செல்வி விந்தியா பேசியதாவது:-

கருணாநிதி தேவை இல்லாமல் புரட்சித்தலைவரை தொட்டதற்கு பத்து வருடம் வாஷ் அவுட். அதே தவறை மீண்டும் திமுகவினர் செய்தார்கள். நான்கு தேர்தலில் வாஷ் அவுட். இப்போது தேவை இல்லாமல் நம் அண்ணனை தொடுகிறார்கள். இதற்கு ஆயுள் முழுவதும் அனுபவிப்பார்கள். கோவை அதிமுகவின் கோட்டை.

இந்த கோட்டையில் எந்த துரோகிகளாலும் போட முடியாது ஓட்டை. இந்த கோட்டையை கட்டி பாதுகாக்கிற கொடிவீரன் சாதாரண ஆள் இல்லை. அதிகாரத்திற்கு ஆசைப்படாதவர். நம்பி வந்த தொண்டர்களை அரவணைத்து செல்பவர். ஒழிக்க நினைப்பவர்களை ஏறி மிதித்துச்செல்பவர். வழக்கமாகவும் எதிரிகளுக்கு தோல்வியை பரிசாக வழங்குபவர் எஸ்.பி. வேலுமணி.

பொய் வழக்கு பதிவு செய்து அவரது வீட்டில் சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் திமுகவினர் பேச்சை கேட்டு ஆட்டம் போடுகிறார்கள். வாழ்க்கை என்பது வட்டம். நாங்கள் மேலே வரும்போது நீங்கள் கீழே ஒருத்தரும் இருக்க முடியாது.

தேர்தல் நேரத்தில் திமுகவினர் அதிமுகவுக்கு ஓட்டு போட்டால் பிஜேபி உள்ள வந்து விடும் என்றார்கள். ஆனால் இன்று உங்கள் வீட்டில் கடன்காரர்கள், கந்துவட்டிக்காரர்கள், கொலைகாரர்கள் என அனைவரும் வந்து விட்டனர்.

இவர்கள் வந்தால் பரவாயில்லை. திமுகவினர் வந்தால் ஒட்டுமொத்தமாக அத்தனையும் சுருட்டிச்சென்று விடுவார்கள்.
உங்கள் வீட்டிற்கு வரும் திருடனை கூட நம்புங்கள். திமுகவினரை நம்பி விடாதே என்று சொன்னேன்.தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு ஸ்டாலின் மாதிரியே உள்ளது. வெளியில் பார்க்க பந்தாவாக இருக்கிறது. உள்ளே சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து டேமேஜ் ஆக இருக்கிறது.

கடந்த 36 நாட்களில் தமிழகத்தில் 133 கொலைகள் நடந்துள்ளன. இது அரசாங்கம் கொடுக்கும் கணக்கு தான். உண்மையிலேயே எவ்வளவு என்று யாருக்கும் தெரியாது. திமுக கணக்கு காட்டுவதில் எவ்வளவு கில்லாடி என்பது உங்களுக்கு தெரியும்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் எங்கே சாவு விழுந்தாலும் அங்கு பாடி வருவதற்கு முன்னே ஸ்டாலின் வந்து விடுவார்.
சும்மா வர மாட்டார். பத்திரிகையாளர்களை அழைத்து வந்து போட்டோ ஷூட் எடுப்பார். ஆனால் இன்றைய திமுக ஆட்சி காலத்தில் தான் ஸ்டாலின் வருவதே இல்லை. நீட்டில் செத்தாலும், பேனர் விழுந்து செத்தாலும், போராட்டத்தில் இறந்தாலும், குழந்தைகள் விழுந்து இறந்தாலும் ஸ்டாலினோ, உதய நிதியோ சாவு வீட்டிற்கு வராமல் சைலண்டாக இருப்பார்கள்.

ஏன் என்றால் சாவு வீட்டிற்கு போக ஸ்டாலின் முடிவு பண்ணி விட்டால் அதற்குப்பிறகு அவர் சட்டசபைக்கு போக முடியாது. ஏன்னா அத்தனை சாவுகள் தினந்தோறும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. எது விடியல் அரசு. விடிஞ்சா கூட வீடு இருட்டில் தான் இருக்கிறது. மாணவர்கள் சுடுகாட்டில் இருக்கிறார்கள். மீனவர்கள் வெளிநாட்டில் சிறையில் இருக்கிறார்கள். இதுதான் விடியல் அரசா?

தினம் தினம் போக்சோவில் ஏராளமானோர் கைதாகிறார்கள். இந்த ஆட்சியில் பெண்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை. இதுதான் விடியல் அரசா? சின்ன வியாபாரத்திலிருந்து சினிமா வியாபாரம் வரை யாராலும் தொழில் செய்ய முடியாத நிலை திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ளது.

இது விடியல் அரசு அல்ல. விளம்பர அரசு. கழக ஆட்சி காலத்தில் நீட்டை வைத்து என்னென்ன டிராமா போட்டார்கள் திமுகவினர். நீட்டையும் கொண்டு வந்து விட்டு நீட்டை கொண்டு வந்தவர்களோடு கூட்டணியும் வைத்துக்கொண்டு நீட்டை ஒழிப்போம் என கலர் கலராக ரீல் விடுகிறார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றறை ஆண்டுகள் ஆகிவிட்டது. இருமுறை நீட் தேர்வு வந்து விட்டது. நீட் விலக்கு எப்போது தான் கொண்டு வருவீங்கன்னு கேட்ட போது திமுகவின் பதில் என்ன. எங்கள் அமைச்சர் டெல்லிக்கு போய் நீட்டிற்கு விலக்கு கொண்டு வருவார் என்கிறார்கள். நீட்டிற்கு விலக்கு என்று கூறும் ஸ்டாலினை கூட மன்னித்து விடலாம். ஆனால் நீட்டு விலக்கிற்கு ரகசியம் எங்களுக்கு மட்டும் தான் தெரியும் என்ற உதயநிதியை மன்னிக்கவே முடியாது.

புரட்சித்தலைவரால் அன்று கருணாநிதி முதல்வராகி விட்டார். இன்று ஸ்டாலின் அக்கட்சியை கம்பெனியாக நடத்திக் கொண்டிருக்கிறார். புரட்சித்தலைவர் மீது பேரன்பு வைத்திருந்தவர் அண்ணா. அண்ணாவின் கட்சி மட்டுமே போதும் என்று நினைத்த கருணாநிதி தோற்றுக்கொண்டே இருந்தார். அண்ணாவின் கொள்கைகள் போதும் என்று நினைத்த புரட்சித் தலைவர் ஜெயித்துக் கொண்டே இருந்தார்.

தேர்தல் நேரத்தில் மதுவிலக்கு கொண்டு வருகிறோம் என்று ஆட்சியை பிடித்தார்கள். இன்று தெருவிளக்கு கூட எரிவதில்லை. மற்ற ஆட்சியில் மின்சாரத்தை தொட்டால் ஷாக் அடிக்கும். ஆனால் திமுக ஆட்சியில் மின்சார கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கும். இதுகுறித்து அணில் அமைச்சர் கனத்த இதயத்தோடு கட்டணத்தை உயர்த்துகிறோம் என கூறுகிறார்.

அப்படி என்ன செய்கிறார்கள் என கேட்டால் கருணாநிதிக்கு பேனா சிலை வைக்கிறார்கள் ரூபாய் 80 கோடி செலவில்.
10 திமுக எம்எல்ஏக்கள் எங்களுடன் பேசுகிறார் என்று எடப்பாடியார் கூறினார்.

அதுவரை வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் வரும் சப்ஜெக்ட் மாதிரி சைலன்ட் மோடாக இருந்த ஸ்டாலின் எடப்பாடியாரை தற்காலிக தலைவர் என்கிறார். இந்த தற்காலிக தலைவர் வீட்டில் தான் கருணாநிதிக்கு ஆறடி நீளம் கேட்டு மொத்த குடும்பமாக நின்றீர்கள். மறந்து விட்டதா.

எடப்பாடியார், அம்மாவின் ஆசியால் கடின உழைப்பால் எம்.எல்.ஏ, எம்பி, முதல்வராகவும் ஆனார். இன்று அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராகவும், நாளை பொதுச்செயலாளராக ஆவார். ஆனால் கருணாநிதிக்கு பிள்ளையாக ஸ்டாலின் பிறக்காவிட்டால் ஒரு ஒன்றிய செயலாளராக கூட ஆகியிருக்க முடியாது.

குடும்பத்தில் ஒருவர் நாட்டிற்காக உழைத்தால் அது திராவிடம். ஒரு நாடே ஒரு குடும்பத்திற்காக உழைத்தால் அது எப்படி திராவிடம் ஆகும்.நாளைக்கே தேர்தல் வந்தால் கூட கழகம் நிச்சயம் வெல்லும். திமுகவின் திருட்டுத்தனம் மக்களுக்கு நன்றாக புரிந்து விட்டது. தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற எடப்பாடியார் தலைமையிலான மீண்டும் ஆட்சி அமையும்.

இவ்வாறு கழக கொள்கை பரப்பு துணை பொதுச்செயலாளர் செல்வி விந்தியா பேசினார்.