யாரை காப்பாற்ற, யாரை வீழ்த்துவதற்காக டிடிவி.தினகரனோடு ரகசியமாக உறவு-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

மதுரை
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தத்தை எதற்காக தொடங்கினார். அதற்குப்பிறகு டிடிவி தினகரனோடு ரகசியமாக உறவாடுகிறார். யாரை காப்பாற்ற, யாரை வீழ்த்துவதற்காக இது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டி உள்ளார்.
மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள கழக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எடுத்துக்கொண்ட தர்மயுத்தம் எதற்காக துவக்கப்பட்டது. தர்மயுத்தம் சசிகலாவை எதிர்த்து, ஒரு குடும்பத்தின் பிடியிலே இருக்கக்கூடாது என்று சொன்னார். கழகத்தில் சேரும் போது இரண்டு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
ஒன்று புரட்சித்தலைவி அம்மாவின் மரணத்திற்கான விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்பது. சசிகலாவை கழகத்தில் சேர்க்கக்கூடாது. அம்மா வாழ்ந்த இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவது. இந்த மூன்று நிபந்தனைகளையும் எடப்பாடியார் நிறைவேற்றி தந்தார்.
அவர்களோடு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று இவர் வைத்த நிபந்தனையில் தான் அறிவித்தாரே தவிர அவர் தனிப்பட்ட முறையில் அறிவிக்கவில்லை. இவர் தான் தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொள்வதற்கு அவர்களை நீங்கள் சேர்க்கக்கூடாது என்ற நிபந்தனையை விதித்தார். இது தான் உண்மையான நிலவரம்.
கழகத்தில் முதல் முதலாக இந்த பிளவுகளுக்கு பிள்ளையார் சுழி போட்டது, அம்மாவின் மறைவுக்குப் பிறகு ஏகமனதாக அவர் முதல்வராக தேர்வு செய்யப்பட்டதற்கு பின்பு அந்த முதலமைச்சர் பதவியை ஒப்படைத்து விட்டு பஞ்சாயத்து வைத்தது யார்?. ஒவ்வொரும் இதனை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அன்றைக்குப் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கி வைத்த பஞ்சாயத்து தான் இன்று வரை அந்த பஞ்சாயத்து நீண்டு கொண்டே இருக்கின்றதே தவிர வேறு எந்த தொண்டரும் அந்த பஞ்சாயத்தை தொடங்கி வைக்கவில்லை.
அந்த பஞ்சாயத்தில் அவர் முன் வைத்த கோரிக்கை என்ன. விசாரணை கமிஷன் வேண்டும். சசிகலா மற்றும் அவர்களின் குடும்பத்தை சேர்க்கக்கூடாது. இதற்கு நியாயம் வேண்டும். அம்மா வாழ்ந்த இல்லத்தை நினைவில்லமாக்க வேண்டும். இந்த கோரிக்கை எல்லாம் நிறைவேற்றப்பட்டது.
அதற்குப்பிறகு டிடிவி தினகரனோடு ரகசியமாக உறவாடுகிறார். எதற்கு பேசுகிறார். அவர் இல்லத்திற்கு சென்று பேசுகிறார். அவர் இல்லத்திற்கு சென்று யாரைக் காப்பாற்றுவதற்காக, யாரை வீழ்த்துவதற்காக, யாருக்கு என்ன விளைவுகளை ஏற்படுத்த என்று நீங்கள் ஊடகங்கள் கேள்வியை கேட்டீர்கள். ஒரு தலைமை என்பது எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும்.
சந்தேகமற்ற தலைமையாக இருக்க வேண்டும். அப்பழுக்கற்ற தலைமையாக இருக்க வேண்டும். மன உறுதியோடு கடைசி மூச்சு இருக்கும் வரை, ரத்தம் சிந்துகிற நிலை வந்தாலும் கூட மனதிலே எடுத்த அந்த உறுதியான நிலைப்பாடோடு இருக்க வேண்டும். ஒவ்வொருவரின் உடலிலும் ஓடுகிறது கழக ரத்தம்.
புரட்சித்தலைவர் தந்த சோறு. அம்மா அவர்கள் தந்த உணவு தான். இங்கு உள்ள தொண்டர்களின் கனவு. ஒரு வலிமை உள்ள தலைவர் வேண்டும் என்று கேட்பதில் என்ன தவறு. மன உறுதியோடு இருக்கின்ற நிலை தடுமாறாத, முடிவுகளை மாற்றி மாற்றி எடுத்து, சந்தேகத்துக்குரிய தலைமையாக இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட, நம்பிக்கையுள்ள தலைமையாக எங்கள் வாழ்வை நாங்கள் அர்ப்பணிக்கிறோம்
தங்களுடைய உயிரைப் பணயம் வைத்துத் தான் கழக பணி, மக்கள் பணியை அந்தத்தந்த பகுதிகளில் செய்து வருகிறார்கள். அவர்களை வழிநடத்துகின்ற தலைமை என்பது மன உறுதியோடு இருக்க வேண்டும். இதைத்தான் தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த மன உறுதியோடு இருக்க வேண்டும் என்பதற்காக, ஒரு சீர்திருத்தத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எத்தனை முறை மூத்த தலைவர்கள் அவரிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நானும் அந்த பேச்சுவார்த்தைக்கு சென்றேன். அவர் கட்சி நலனை முன்னிருத்தியிருந்தால், தொண்டர்களில் நலனை முன்னிருத்தியிருந்தால் அந்த பேச்சுவார்த்தையில் அவர் உடன்பட்டிருப்பார்.
பேச்சுவார்த்தைக்கே வர மறுக்கிறார். ஆனால் வெளியில் ஊடகங்களில் நான் பேச்சு வார்த்தைக்கு தயார் என்று ஒரு அனுதாபத்தை தேடுகின்ற நிலையை பார்க்கின்றோம். பேச்சுவார்த்தைக்கு எந்த நிபந்தனையையும் அவர் விதிக்கவில்லை. ஆனால் அவர் ஊடகத்தில் நான் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்கிறார்.
எத்தனை முறை பேச்சுவார்த்தைக்கு முயன்றிருக்கிறோம். மூத்த தலைவர்கள் வந்தார்கள் என்பதை அவர் நன்றாக அறிவார். ஆனால் அவர் பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கிறார். நானே பல முறை பேச்சுவார்த்தை சென்றேன். அங்கு இருப்பவர்களை வைத்து என்னை திட்ட வைத்தார்.
அதையும் தாண்டி கட்சி நலனுக்காக, தொண்டர்களின் நலனுக்காக, கட்சியின் எதிர்காலத்திற்காக, அம்மாவின் கனவை நனவாக்குவதற்காக அதையும் பொறுத்துக்கொண்டு தான் அத்தனை மூத்த தலைவர்களும், நான் உட்பட அவர் இல்லம் தேடிச்சென்று பேசினார்கள்.
நிர்வாக சீர்த்திருத்தம் என்பது காலத்தின் கட்டாயம். திரைப்படத்தில் எம்.ஜி.ஆரும், நம்பியாரும் நடித்திருப்பார்கள். திரையில் நம்பியாரை வில்லனாக பார்ப்பார்கள். ஆனால் உண்மையில் அவர் நல்லவர்.
சபரிமலைக்கு செல்வார். ஆனால் திரையில் புரட்சித்தலைவரை எதிர்த்தார் என்பதற்காக தங்கள் ஆயுள் முழுவதும் நம்பியாரை வில்லனாக மக்கள் அவரை பார்த்தார்கள். இன்றைக்கு அவர் (ஓ.பன்னீர்செல்வம்) நல்லவராக இருந்தாலும், தொண்டர்களின் நலனை நாடுபவராக இருக்க வேண்டும் என்பதே கோரிக்கை.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.