எடப்பாடியார் ஆட்சியை யாராவது குறை சொல்ல முடியுமா?அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் கேள்வி

சென்னை
அம்மாவின் திட்டங்களை இம்மியளவும் குறைவில்லாமல் வழங்கிய எடப்பாடியார் ஆட்சியை யாராவது குறை சொல்ல முடியுமா என்று அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்டம் விரும்பாக்கம் வடக்கு பகுதி கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் தசரதபுரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு விரும்பாக்கம் வடக்கு பகுதி கழக செயலாளர் சி.கே.முருகன் தலைமை தாங்கினார்.
தென் சென்னை தெற்கு, மேற்கு மாவட்ட கழக செயலாளரும், விரும்பாக்கம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விருகை வி.என்.ரவி, ஏ.எம்.காமராஜ், எம்.சுகுமார், எஸ்.எம்.ஷேக் அலி, கோ.சாமிநாதன், என்.மச்சரேகை, சோ.கடும்பாடி, ஆர்.ஜெயப்பிரதா, என்.எஸ். மோகன், பூங்கா பி.பார்த்திபன், ஏ.ஜெகநாதன், டி.ரமேஷ், எஸ்.விநாயகமூர்த்தி, ஆர்.விஜயலட்சுமி, எஸ்.அமுதா, எஸ்.மாறன், எஸ்.குமார், எம்.உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலகண்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியதாவது:-
மின்சாரத்தை தொட்டாலே ஷாக் அடிக்கும். ஆனால் தற்போது திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. இந்த மாத மின் கட்டண பில் வரும் போது தான் பெண்கள் தி.மு.க.வை எந்த அளவுக்கு விமர்சனம் செய்யப்போகிறார்கள் என்று நாங்கள் பார்க்கத்தான் போகிறோம். அந்த அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளார்கள்.
திமுகவின் மூத்த அமைச்சர் அவர் படித்த பள்ளியில் அவரின் மலரும் நினைவுகளை சொல்ல ஆரம்பிக்கும் போது மின் வெட்டு ஏற்பட்டது. இது தான் இன்றைக்கு தமிழகத்தின் நிலைமை. அம்மாவும், எடப்பாடியாரும் போட்ட திட்டத்தின் காரணமான சென்னையில் மின்வெட்டு குறைவாக உள்ளது.
நான் நெய்வேலியில் கூட்டத்தில் பேசிக்கொண்டு இருக்கும் போது இரண்டு மணி நேரம் மின்சாரம் இல்லை. புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவரும் தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து, எப்படி தமிழகத்தை வழி நடத்தி வந்தார்களே அதுபோல அம்மாவின் மறைவுக்குப்பிறகு எடப்பாடியார் புரட்சித்தலைவரின் சத்துணவுத்திட்டமாக இருக்கட்டும்.
அம்மா கொண்டு வந்த தாலிக்குத்தங்கம், பெண்களுக்கு மகப்பேறு உதவி திட்டம், பரிசு பெட்டகம், இருசக்கர வாகனம், மடிக்கணினி, சைக்கிள் என்று கருவிலிருந்து கல்லறை வரை அனைவருக்கும் அம்மாவுடைய திட்டங்களை இம்மியளவு குறைவில்லாமல் வழங்கியவர் எடப்பாடியார்.
அவரின் ஆட்சியை யாராவது குறை சொல்ல முடியுமா. அவர் மின் கட்டணத்தை உயர்த்தினாரா. இல்லையே. தற்போது வீட்டு வரியை உயர்த்தியுள்ளார்கள். கிராமப்புற பகுதிகளில் வீட்டு வரி தொடர்பாக லஞ்சம் தாண்டவமாடுகிறது.
இன்றைக்கு விஞ்ஞான ரீதியில் கொள்ளை அடிக்க திமுக தயாராக உள்ளது. மக்கள் வாக்குகளை அளித்தார்கள். எங்களுக்கும் அவர்களுக்கும் வெறும் 13 லட்சம் வாக்குகள் தான் வித்தியாசம். தமிழகம் முழுவதும் 84 ஆயிரம் பூத் உள்ளது. சிறிய வித்தியாசத்தில் தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம். 10 ஆண்டு காலம் அவர்கள் ஆட்சியில் இல்லாத காரணத்தில் தற்போது வாரி சுருட்டுகிறார்கள். கடந்த 15 மாதத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சம். எதற்காக கை நீட்டுகிறார்கள் என்றே தெரியவில்லை.
இவ்வளவு லஞ்சம் அளித்தால் தான் நீங்கள் கட்டிடத்தை கட்ட முடியும் என்று நிர்ணயம் செய்கிறார்கள். இது மக்களை வஞ்சிக்கின்ற செயல். திமுக இதனை திருத்திக்கொள்ளவில்லை என்றால் மக்கள் திருத்த தயராகி விட்டார்கள். எடப்பாடியார் சொன்னது போல ஓரே நாடு, ஒரே தேர்தல் வந்து விடும். நீங்கள் இரட்டைஇலைக்கு வாக்களிக்க தயாராக இருங்கள்.
அம்மா கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் உங்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டும். அதற்கு மீண்டும் அம்மாவின் ஆட்சி மலர வேண்டும். சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டினார். எல்லோரும் எம்ஜிஆர் ஆக முடியுமா. புரட்சித்தலைவர் நிஜம்.
அவர் உண்மையாக சாதத்தை ஊட்டினார். இவர் ( ஸ்டாலின்) நிழல். வேஷம். அப்படித்தான் இருக்கும். தலைவர் குழந்தைகளுக்கு ஊட்டி விட்டார். இவர் ஊட்டி விட்டது போல நடித்து கை கழுவி விட்டார். நிஜம் எப்போதும் நிரந்தரம். நிழல் நிரந்தரம் கிடையாது. இதனை ஸ்டாலின் புரிந்துகொள்ள வேண்டும்.
அண்ணா பேசி, பேசியே திமுகவை வளர்த்தவர். நிறைய படித்தவர். நிறைய புத்தங்களை எழுதியுள்ளார். அவருக்கு பேனா வைக்க சொன்னால் பணமே இல்லாமல் திருட்டு ரயிலில் வந்த கருணாநிதிக்கு 80 கோடியில் பேனா. ஏன் உங்களிடம் பணம் இல்லையா. ஆயிரக்கணக்கான கோடி சொத்து இருக்கிறது இல்லையா. இந்த பேனாவை உங்கள் சொந்த பணத்தில் வைக்க வேண்டியது தானே.
எதற்கு மக்களுடைய வரிப்பணத்தில் கடலில் சென்று வைக்க வேண்டும். நம்மைப்பற்றி நன்றாக புரிந்து கொண்டார்கள். முதலில் சேது கால்வாய் திட்டம். 2400 கோடியில் டி.ஆர்.பாலு கொண்டு வந்தார். அந்த திட்டமும் நின்று விட்டது. அதுபோல கருணாநிதி முதல்வராக இருக்கும் போது விஞ்ஞான ரீதியில் கூவம் ஆற்றை நாங்கள் சரி செய்கிறோம் என்றார்.
அதற்கு நிதியை ஒதுக்கினார். ஆனால் திட்டத்தை நிறைவேற்றவில்லை. ஏன் என்று கேட்டால் கூவத்தில் முதலை இருக்கிறது என்றார். அதுவும் போய் விட்டது. இப்படி விஞ்ஞான முறையில் கொள்ளை அடிக்கும் கூட்டம் திமுக. கழகம் மக்கள் நலனுக்காக இயக்கக்கூடிய இயக்கம்.
இவ்வாறு அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலகண்ணன் பேசினார். முடிவில் எஸ்.பி.குமார், எம்.கதிர்வேல் ஆகியோர் நன்றி கூறினர்.