கழகத்தினரை மிரட்டி பணிய வைக்க தி.மு.க. அரசு நினைப்பது நடக்காது-முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரிக்கை

சென்னை,
முன்னாள் அமைச்சரும், கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளருமான சி.வி.சண்முகம் நேற்று சென்னை கிரின்வேஸ் சாலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உள்துறையை கையில் வைத்திருக்கின்ற முதல்வர் இன்றைக்கு தமிழகத்தில் ஏற்பட்டிருக்கின்ற பல்வேறு பிரச்சினை, சட்டம் ஒழுங்கு பிரச்சினை, கொலை, கொள்ளை, பாலியல் கூட்டு பலாத்காரம், இந்தியாவின் கஞ்சா தலைநகராக மாறியுள்ள சென்னை போன்றவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல் உள்ளார்.
அதுபோல ஆன்லைன் ரம்மியால் பல்வேறு நபர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள சூழ்நிலையில் அம்மாவால் ஒழிக்கப்பட்ட லாட்டரி மீண்டும் இன்றைக்கு தலை எடுத்துள்ளது. இதற்கு ஸ்டாலின் தலைமையிலான அரசு துணை போய்க்கொண்டுள்ளதாக இன்றைக்கு சொல்லப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தி.மு.க.வின் காவல்துறை இதனை தடுக்கும் பணியை செய்யாமல், ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலம் ஆகியும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்திலே செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக முன்னாள் அமைச்சர், எங்கள் கழகத்தின் முன்னணி தலைவர் மீது பொய் வழக்குப்பதிவு செய்து, அவருடைய இல்லம் மற்றும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை செய்து விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது.
கழகத்தில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினையில், அவர் இந்த இயக்கத்திற்கு தூணாக நின்று, இந்த இயக்கத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். அவரை அச்சுறுத்த வேண்டும், அவரை பணிய வைக்க வேண்டும் என்று யாரோ சொல்லி, அவரை மீண்டும் அச்சுறுத்தல் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றார்கள்.
கோவையில் ஐஏஎஸ் படிக்கின்ற மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி முகாமை நடத்திக் கொண்டுள்ளார். அவரால் நடத்தப்படுகின்ற அந்த பயிற்சியில் இந்த ஆண்டு கூட இருவர் தேர்வு பெற்றுள்ளார்கள்.
அப்படிப்பட்ட அந்த பயிற்சி முகாமிலே தி.மு.க.வின் காவல்துறை இரண்டு மூன்று நாட்களாக அத்துமீறி நுழைந்து இந்த பயிற்சி முகாம் நடைபெறாமல் தடுத்து கொண்டிருக்கிறது.
அந்த பயிற்சி முகாமில் என்ன இருக்க போகின்றது. அப்படியே சோதனை செய்திருந்தாலும் ஒரு நாளைக்கு மேல் ஒன்றும் இல்லை. ஆனால் அவர்களின் நோக்கம் அதுவல்ல. சோதனையிட வேண்டும் என்றால் அன்றைக்கு 100 இடங்களில் சோதனை செய்த போதே இதையும் அவர்கள் சோதனை செய்திருக்கலாம்.
இப்போது அவர்கள் நோக்கம், எண்ணம் எல்லாம் எப்படியாவது எஸ்.பி.வேலுமணியை அச்சுறுத்தி, பணிய வைத்து, கழகத்தில் உள்ள பிரச்சினைகளை, யாருக்காகவே உதவ வேண்டும் என்பதற்காக இன்றைக்கு தி.மு.க.வுடன் உறவாடிக் கொண்டிருக்கின்ற, இந்த இயக்கத்திற்கு துரோகம் செய்து கொண்டிருக்கின்ற, இந்த இயக்கத்தை காட்டிக்கொடுப்பவர்களுக்கு துணையாக இருந்து ஸ்டாலின் அரசு எங்களை அச்சுறுத்த பார்க்கின்றது.
பயமுறுத்தப் பார்க்கின்றது. பணிய வைக்க பார்க்கின்றது. இது நடக்காது. கழக தொண்டர்களை மிரட்டலாம், பணிய வைக்கலாம் என்று நினைத்தால், தி.மு.க.வுக்கும் சரி, அவர்களின் உதவியை நாடி வந்தவருக்கும் சரி, இது முடியாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு காலத்தில் மட்டும் கூட்டுப்பாலியல் என்பதை தினந்தோறும் நாம் கேள்விப்பட்டு கொண்டிருக்கின்றோம். இதனை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் இந்த காவல்துறை தி.மு.க.வின் தொண்டர் படையாக செயல்பட்டு கொண்டிருக்கின்றது.
அதிலும் குறிப்பாக லஞ்ச ஒழிப்புத்துறை முழுக்க முழுக்க தி.மு.க.வினுடைய தொண்டர்களாக மாறி செயல்பட்டு கொண்டிருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.