விடியா ஆட்சியின் காவல்துறையை கண்டித்து பொதுமக்கள் திடீர் முற்றுகை போரட்டம்

விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு
விழுப்புரம்,
விபத்து வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் விக்கிரவாண்டி போலீசார் தொடர்ந்து அலட்சியமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி விழுப்புரத்தில் உள்ள மாவட்ட எஸ்.பி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் சோழாம்பூண்டியை சேர்ந்த முரளி மனைவி மலர் மற்றும் அவரது உறவினர்கள் நேற்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து விபத்து வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கிருந்த போலீசார் விரைந்து சென்று பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் பிறகு மலர் என்பவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் முரளி கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலைக்கு சென்றார். பின்னர் இரவு வீட்டிற்கு வருவதற்காக நடந்து வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை பார்த்தபோது விபத்தை ஏற்படுத்திய கார் எண் தெரியவந்தது. இருப்பினும் காரில் வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வழக்குப்பதிவு செய்ததோடு நிறுத்தி விட்டனர். கார் உரிமையாளரை கைது செய்யாமலும், காரை மோட்டார் வாகன ஆய்வுக்கு உட்படுத்தாமலும் போலீசார் அலட்சியமாக இருந்து வருகின்றனர்.
விபத்தை ஏற்படுத்தியவர்கள் போலீசாருக்கு கொடுக்கும் அழுத்தத்தின் காரணமாக நடவடிக்கை எடுக்காமல் ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருகின்றனர். எனவே விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, நீதி வழங்க வேண்டுமென அந்த மனுவில் கூறியிருந்தனர்.
மனுவை பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன் பிறகு அவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.