சிறப்பு செய்திகள்

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தர்ணா போராட்டம்-மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

மதுரை

உசிலம்பட்டி, திருமங்கலம் கல்வி மாவட்டங்களை ரத்து செய்ததை கண்டித்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார். இதனை தொடர்ந்து இதற்கான மனு அளிக்கப்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சாமானிய மக்களுக்காக கல்வியில் வளர்ச்சி காணும் வகையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் கடந்த 2018ம் ஆண்டில் செந்துறை, சென்னை மேற்கு, பவானி, சத்தியமங்கலம், வேடசந்தூர், பெருந்துறை, திருவட்டார், குளித்தலை, இலுப்பூர், சீர்காழி, திருச்செங்கோடு, ஆத்தூர்,

எடப்பாடி, திருப்பத்தூர், ஒரத்தநாடு, தேனி சங்கரன்கோவில், உடுமலைப்பேட்டை, தாராபுரம், திருத்தணி, மன்னார்குடி, திருச்செந்தூர், மணப்பாறை, அரக்கோணம், ராணிப்பேட்டை வாணியம்பாடி உளுந்தூர்பேட்டை, செஞ்சி, சிவகாசி, திருமங்கலம் உள்ளிட்ட புதிய 52 கல்வி மாவட்டங்களை உருவாக்கினார்.

இந்த புதிய கல்வி மாவட்டங்கள் திறப்பதின் மூலம் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிவுடன் 14 சீருடைகள், மாணவர்களின் ஆசிரியர்கள் குறைகளை ஆகிய எளிதில் பெற்று நிர்வாக வசதி எளிமை பெறும்.

அது மட்டுமல்லாது இதுபோன்ற கல்வி மாவட்டங்களில் உருவாக்கியது மூலம் கல்வி தேர்ச்சி விகிதம் அதிகமானது. மேலும் தமிழ்நாடு முழுவதும் 80 பள்ளிகளை மாதிரி பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டன.

தற்போது தமிழக அரசின் சார்பில் 151 அரசாணை வெளியிடப்பட்டது. இதில் மதுரை மாவட்டத்தில் 10 தொகுதியில் நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளன. ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கழக சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் உள்ள திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய கல்வி மாவட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது பழிவாங்கும் செயலாகும். வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே குடிமராமத் திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம், மடிக்கண்ணி திட்டம், பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டம், அம்மா பரிசு பெட்டகம் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளது. எடப்பாடியார் 52 கல்வி மாவட்டங்களை உருவாக்கி சீர்திருத்த புரட்சி செய்த கல்வி மாவட்டங்களை ரத்து செய்துள்ளனர்.

யாரிடம் கருத்து கேட்காமல் சர்வாதிகார போக்குடன் அரசு செய்துள்ளது. ஆகவே இதை மீண்டும் செயல்படுத்திட வேண்டும். மீண்டும் உசிலம்பட்டி திருமங்கலம் கல்வி மாவட்டங்கள் செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார்.

இந்த தர்ணா போராட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன், நிர்வாகிகள் இளங்கோவன், சுதாகரன், வெற்றிவேல், ஏ.கே.பி.சிவசுப்பிரமணியன், தனராஜன், ரவிச்சந்திரன், செல்லம்பட்டி ராஜா, காசிமாயன், திருப்பதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.