கழகத்தை வழி நடத்த எடப்பாடியாருக்கு தேனி மாவட்ட கழகத்தினர் ஆதரவு

கழக அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன் பேச்சு
மதுரை
ஒற்றை தலைமையை ஏற்று கழகத்தை எடப்பாடியார் வழி நடத்த தேனி மாவட்ட கழகத்தினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர் என்று கழக அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன் கூறி உள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த கிளை கழக நிர்வாகிகள் ஒற்றை தலைமை தான் வேண்டும். அந்த ஒற்றை தலைமையை ஏற்க எடப்பாடியார் வர வேண்டும் என்று தங்கள் ஆதரவை கழக அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து போடி, உத்தமபாளையம், சின்னமனூர் போன்ற பகுதியில் உள்ள கழக நிர்வாகிகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிகழ்வின் போது மாவட்ட பொருளாளர் சோலைராஜ், முன்னாள் கம்பம் ஒன்றிய கழக செயலாளர் இளையநம்பி, ஒன்றிய பொருளாளர் மார்க்கண்டேயன், அணைப்பட்டி காசிமாயன், கம்பம் எம்.ஆர்.ஈஸ்வரன், கோகிலாபுரம் கல்யாணசுந்தரம், ஆண்டிபட்டி பொன் முருகன், சி.ஆர்.ராஜா, எஸ்.குள்ளப்பன், செல்வராஜ், செல்வம், எஸ்.எஸ்.புரம் ரத்தினம், ஒத்தப்பட்டி ஆதீஸ்வரன், அனுப்பட்டி ராஜேந்திரன், பொம்மிநாயக்கன்பட்டி லோகநாதன் உட்பட பலர் உடனிருந்தனர்.
அவர்கள் மத்தியில் கழக அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன் பேசியதாவது:-
புரட்சித்தலைவர் இந்த இயக்கத்தை 1972ம் ஆண்டு ஆரம்பித்தார். ஆரம்பித்தது முதல் இதுவரை 11 முறை சட்டமன்ற தேர்தலை சந்தித்துள்ளோம். இதில் ஏழு முறை மிகப்பெரிய வெற்றிபெற்று ஆட்சி பொறுப்பிலிருந்து உள்ளோம். புரட்சித்தலைவர் காலத்தில் மூன்று முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 48 இடங்கள், 38 இடங்கள், 28 இடங்கள் என்ற அளவில் தான் வெற்றிபெற்றனர் என்பதை நாடு அறியும்.
அதனை தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிப்பொறுப்பு ஏற்றார். தொடர்ந்து 1991 2001, 2011, 2016 ஆகிய நான்கு முறை சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற்றது. மட்டுமல்லாதது நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற்று இந்தியாவிலேயே மூன்றாம் பெரிய இயக்கமாக இந்த இயக்கத்தை புரட்சியை அம்மா அவர்கள் உருவாக்கி தந்தார்.
ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கம் தான் இந்த இயக்கம். புரட்சித்தலைவர் காலம் தொட்டும் புரட்சிதலைவி அம்மா அவர்கள் காலம் தொட்டும் ஒற்றை தலைமையோடு மிகப்பெரிய வலிமை மிக்க கட்சியாக, ஆளுங்கட்சியாக, சில நேரம் எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்பட்டு உள்ளது இந்த இயக்கம்.
அம்மாவின் மறைவுக்கு பின் எடப்பாடியார் ஆட்சி பொறுப்பை ஏற்று நான்கரை ஆண்டு காலம் மிகச்சிறந்த ஆட்சியை தமிழகத்தில் கொடுத்தார். மக்கள் எல்லாம் போற்றுகின்ற வகையில், வாழ்த்துகின்ற வகையில் திறமையான நல்லாட்சியை நடத்தினார். ஒரேஆண்டில் 11 மருத்துவக்கல்லூரியை கொண்டு வந்தார்.
அது மட்டுமல்லாது இந்தியாவிலேயே உள்ளாட்சித்துறையில் மிக அதிகமான விருதுகளை பெற்ற மாநிலம் தமிழகம் இருந்தது மேலும் கூட்டுறவுத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, மருத்துவத்துறை, போக்குவரத்து துறை, வருவாய்த்துறை இப்படி அனைத்து துறையிலும் பல சாதனை படைத்து இந்தியாவிலேயே முதன்மையாக உருவாக்கினார்
வேளாண்மை துறையில் தொடர்ந்து பல ஆண்டுகாலம் மத்திய அரசை விருதினை பெற்று இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருந்தது எடப்பாடியார் சிறந்த முதலமைச்சர் என்ற பெயரை தமிழக மக்களிடம் பெற்றார் தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்து சட்டமன்றத்தில் சிறப்பாக பணியாற்றி வருகிறார். இந்தியாவில் எந்த கட்சிக்கும் இரட்டை தலைமை இல்லை. இரண்டு தலைமை இருந்தால் பிரச்சினைக்கு முடிவு காண்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. அந்த காலதாமதத்தை போக்க ஒற்றைத்தலைமை தான் வேண்டும்
தற்போது உள்ள சூழ்நிலையில் கழகத்தில் இரட்டை தலைமை சரியாக வராது என்று கழக அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் எண்ணுகிறார்கள். ஏன் என்று சொன்னால் கட்சி நிர்வாகத்திற்கும் இரட்டை தலைமையினால் பல நடைமுறை சிக்கல் உள்ளது. கொள்கை முடிவு எடுப்பதில் பல சமயங்களில் தாமதம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த நடைமுறை சிக்கலை போக்க இரட்டை தலைமை தேவையில்லை. ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அந்த ஒற்றைத்தலைமைக்கு எடப்பாடியாரை தேர்வு செய்ய வேண்டும் என்று தலைமை கழக நிர்வாகிகள் முதல் மாவட்ட கழக செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கழக தொண்டர்கள் என 96 சதவீதம் பேர் விரும்புகின்றனர்.
தற்போது கூட தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியத்திலும் கழக நிர்வாகிகள் நாள்தோறும் வருகை தந்து கழகத்திற்கு எடப்பாடியார் தலைமை ஏற்க வேண்டும் என்று விரும்புகின்றனர். நிச்சயம் தொண்டர்களின் தீர்ப்பை ஏற்று எடப்பாடியார் ஒற்றை தலைமையை ஏற்பார். இந்த இயக்கத்தை சிறப்பாக வழி நடத்துவார்.
இவ்வாறு கழக அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன் பேசினார்.