சிறப்பு செய்திகள்

தேனி மாவட்ட கழக தொண்டர்களிடம் எடப்பாடியார் செல்வாக்கு அதிகரிப்பு – கழக அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையனை சந்தித்து ஆதரவு

கழகத்தின் ஒற்றை தலைமையை எடப்பாடியார் ஏற்க விருப்பம் தெரிவித்து தேனி மாவட்டத்தில் கழக தொண்டர்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் போடிநாயகனூர் தொகுதியை சேர்ந்த கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கம்பம் பகுதியில் கழக அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையனை நேரில் சந்தித்து எடப்பாடியார் தான் ஒற்றை தலைமை ஏற்க வேண்டும். அவர் கழக பொதுச்செயலாளராக பதவி ஏற்க எங்களின் ஆதரவை தெரிவிக்கிறோம் என்றனர்.

அப்போது அங்கு நடந்த கூட்டத்தில் போடி நாயக்கனூர் தொகுதியை சேர்ந்த கழக நிர்வாகிகள் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் மறைவுக்கு பின் ஓபிஎஸ், சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தினார். நாங்கள் அதை நம்பி அவர் பின்னால் சென்றோம். ஆனால் அவர் மீண்டும் கட்சியில் இணைந்த பின் அவருக்கு உறுதுணையாக இருந்த எங்களை கண்டு கொள்ளவில்லை. அது மட்டுமல்ல அது கழக தொண்டர்களை மறந்து தன் குடும்ப உறுப்பினர்கள் மீது அக்கறை செலுத்திக்கொண்டார்.

தற்போது சசிகலா, தினகரனுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார். இது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் எல்லாம் வாரிசு அரசியலை ஊக்குவித்தது கிடையாது. அதுபோல் தற்போது எடப்பாடியார் அந்த வழியை பின்பற்றி தன் குடும்பத்தார் யாரையும் வாரிசு அரசியலை ஊக்குவிக்கவில்லை. ஆனால் தற்பொழுது ஓபிஎஸ் தனது வாரிசு அரசியலை முக்கியமாக கருதுகிறார்

தி.மு.க.வை வலுவோடு எதிர்க்க வேண்டும். ஆனால் ஓபிஎஸ் தி.மு.க.வோடு மறைமுக உறவை வைத்துக்கொண்டு இணக்கமாக செயல்படுகிறார். எடப்பாடியார் தி.மு.க.வை வலிமையோடு எதிர்த்து வருகிறார்.

இந்த இயக்கத்தை சிறப்பாக வழி நடத்தவும், தொண்டர்களை வழி நடத்தவும், தி.மு.க.வை கடுமையாக எதிர்க்கவும், இரட்டை தலைமை இருந்தால் சரியாக இருக்காது. ஒற்றை தலைமை இருந்தால் தான் கட்சியும் கட்டுக்கோப்பாக இருக்கும். அந்த ஒற்றை தலைமைக்கு சரியான தகுதி படைத்த தலைவர் என்றால் எடப்பாடியார் மட்டுமே.

இந்த போடி தொகுதியில் உள்ள கழக நிர்வாகிகள் நாங்கள் அனைவரும் எடப்பாடியாரை ஒற்றை தலைமை ஏற்று இருக்கிறோம். அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். கழக அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையனிடம் எங்களின் ஆதரவை தெரிவித்து உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.