சிறப்பு செய்திகள்

தி.மு.க ஆட்சியில் கண்ணீர் வடிக்கும் மக்கள்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேச்சு

கோவை

தொண்டர்கள் மீது வழக்கு போட்டால் சும்மா விட மாட்டம் என்றும், தி.மு.க. ஆட்சியில் மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர் என்றும் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேசினார்.

கோவை புறநகர் தெற்கு மாவட்டம், பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றியம் கக்கடவு கிராமத்தில் கழக தேர்தல் பிரிவு செயலாளரும்,
திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பாப்பு (எ) திருஞானசம்பந்தம் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் கழக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி சிறப்புரையாற்றியதாவது:-

ஏழை, எளிய மக்களுக்காக பேரறிஞர் அண்ணா ஆரம்பித்த திமுக இன்று கருணாநிதியின் குடும்ப சொத்து ஆகி விட்டது. அண்ணா முதல்வராக புரட்சித்தலைவர் முக்கிய காரணமாக இருந்தார். அது மட்டுமல்ல கருணாநிதி கூட முதல்வராக புரட்சித்தலைவர் தான் காரணம். புரட்சித்தலைவரின் செல்வாக்கை கண்டு பயந்த கருணாநிதி கட்சியை விட்டு நீக்கினார்.

அதற்குப்பிறகு புரட்சித்தலைவர் அ.தி.மு.க.வை உருவாக்கி ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சியாகவும், பெரியார், அண்ணாவின் கொள்கைகளையும், திட்டங்களையும் செயல்படுத்தும் ஆட்சியையும் நடத்தினார்.

30 ஆண்டுகாலம் ஆளுங்கட்சியாக இருந்த ஒரே கட்சி அதிமுக மட்டுமே. புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகியோரின் வழியில் எடப்பாடியார் ஆட்சி நடத்தினார். ஒரு விவசாயி நாட்டை சிறப்பாக ஆள முடியும் என நிரூபித்தார்.இன்றைய தமிழக மக்கள் திமுகவிற்கு ஏமாந்து ஓட்டு போட்டு விட்டோம் என அழுகிறார்கள்.

கழக ஆட்சியில் எடப்பாடியார் அற்புத திட்டங்களை தந்தார். பொள்ளாச்சியில் அரசு மருத்துவமனை, அரசு கலைக்கல்லூரி என எத்தனையோ திட்டங்களை கூறலாம்.

அது மட்டுமில்லாமல் 50 ஆண்டு காலம் காணாத வளர்ச்சி திட்டங்கள் தந்தோம் என நெஞ்சை நிமிர்த்தி நாங்கள் நிறைவேற்றிய திட்டங்களை சொல்ல முடியும். திமுகவால் சொல்ல முடியுமா? இந்த 15 மாதங்களில் என்ன திட்டங்களை கொண்டு வந்தார்கள்.

ஆனைமலையாறு நல்லாறு திட்டம் குறித்து கழக ஆட்சியில் பேச்சு வார்த்தை நடத்தினோம். இன்று அது கிடப்பில் உள்ளது. ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து என்றனர் என்னவாயிற்று? ஸ்டாலின் காலையில் இரண்டு வீடியோவில் நடிப்பார்.

அது அவரது சார்ந்து டிவிகளில் வரும். மாலையில் இரண்டு நிகழ்ச்சிகளை கலந்து கொள்வார் அது செய்தியாக வெளிவரும். இதைத் தவிர அவர் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. இன்று 1 லோடு மண் வாங்க கூட லஞ்சம் தந்தால் தான் பெற முடியும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

திமுக அமைச்சர்களும் ஸ்டாலின் குடும்பத்தாரும் லஞ்சம் மூலம் பணத்தை அள்ளி குவிக்கின்றனர். இங்கு உள்ள கம்பெனிகளை மிரட்டி பணம் பறிக்கிறது திமுக கும்பல்கள். கழக ஆட்சியில் காவல்துறை நேர்மையாகவும் சுதந்திரமாகவும் இருந்தது.

இன்று ஸ்டாலின் குடும்பத்தாருக்கு அடிமையாக உள்ளது. என்னை பழிவாங்க ஸ்டாலின் முயற்சிக்கிறார். குறுக்கு வழியில் ஸ்டாலின் முதல்வராவதற்கு நாங்கள் முட்டுக்கட்டையாக இருந்தோம். எங்கள் கட்சிக்கு விசுவாசமாக இருந்தோம்.

ஆகவே என் மீது கோபம். ஸ்டாலின் நீ என்ன கடவுளா? என்ன செய்ய முடியும். எங்கள் மீது பொய் வழக்கு தானே போட முடியும். அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஆனால் எங்கள் கட்சி தொண்டர்களின் மீதும், பொதுமக்கள் மீதும் வழக்கு போட்டால் சும்மா விடமாட்டோம்.

உள்ளாட்சி தேர்தலில் ஏமாற்றி வாக்கு வாங்கி வெற்றி பெற்ற உங்களது கவுன்சிலர்கள் எங்கே? இன்று சொத்து வரியையும், மின் கட்டணத்தையும் உயர்த்தி மக்களுக்கு சுமையை ஏற்படுத்தி விட்டனர். ஆனால் வருகின்ற தேர்தல் 40 பாராளுமன்ற தேர்தலில் 40 ல் வெற்றி பெறுவோம் என்கிறார் ஸ்டாலின். 38 எம்பிக்களை வைத்துக்கொண்டு தமிழகத்திற்கு ஒன்றும் செய்யாத திமுக மக்களை ஏமாற்றும் அரசாக இருக்கிறது.

கொள்ளையடிப்பதை மட்டும் தான் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி செய்கிறது. ஆகவே மக்களுக்கான ஆட்சி நடத்திய எடப்பாடியார் தலைமையில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெறுவோம். சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையிலான கழக ஆட்சி மீண்டும் அமையும்.

இவ்வாறு கழக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி பேசினார்.

அதைத்தொடர்ந்து கழக தேர்தல் பிரிவு செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளருமான
பொள்ளாச்சி வி.ஜெயராமன், கழக கலைப்பிரிவு இணை செயலாளர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், கூடலூர் ராமமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்த பொதுக்கூட்டத்தில் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் பொள்ளாச்சி நகர கழக செயலாளருமான வி.கிருஷ்ணகுமார், பொள்ளாச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஏ.சக்திவேல், பொள்ளாச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.செந்தில்குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் டி.ஜேம்ஸ் ராஜா, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் ஓகே.முருகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் காளீஸ்வரி ஆனந்தராஜ், ஒன்றியக்குழு தலைவர்கள் விஜயராணி ரங்கசாமி, நாகராணி கனகராஜ், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.