வழக்குபோட்டு கழகத்தை அழித்துவிடலாம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தி.மு.க. செயல்படுகிறது-முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலடி

சென்னை
வழக்கு போட்டு கழகத்ைத அழித்து விடலாம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தி.மு.க. செயல்படுகிறது. இது பூனை பகல் கனவு கண்டது போலத்தான் ஆகும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார்.
சென்னை பசுமை வழிசாலையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
தமிழகத்தில் தொடர்ச்சியாக கொலை, கொள்ளை கூட்டுப்பாலியல் பலாத்காரம், அதுபோல தனி மனிதனுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலை நிலவுகின்ற நிலை உள்ளது. அடிப்படை கட்டமைப்பு வசதி எதுவும் செய்யப்படவில்லை.
மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள். குடிநீர், சாலை, மின்சார வசதி, கழிவு நீர் செல்லக்கூடிய வசதி. அதுபோல அடிப்படை கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும். இந்த இரண்டு விஷயங்களை தான் மக்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் இந்த ஒரு வருடம் இந்த விடியா தி.மு.க அரசு கவனம் செலுத்துவது கிடையாது. இரண்டு விஷயத்தில் மட்டும் தான் அவர்கள் கவனம் முழுக்க உள்ளது. ஒன்று தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி என்ற ஒரு பேரார்வம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உண்டு.
அந்த வகையில் அவர் தினந்தோறும் ரிப்பன் கட் செய்யும் பணியைத் தான் செய்து வருகிறாரே தவிர, வேறு எந்த வேலையையும் செய்வது கிடையாது. நாங்கள் எங்கள் ஆட்சி காலத்தில் குறிப்பாக எடப்பாடியார் ஆட்சி காலத்திலே அன்றைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு துவக்கப்பட்ட திட்டங்களை எல்லாம் ரிப்பனை கட் செய்து லேபிள் ஒட்டும் வேலையைத் தான் இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறார்.
இரண்டாவது அவரின் மகனுக்கு பட்டாபிஷேகம் செய்ய வேண்டும். அந்த முனைப்பை இன்றைக்கு காட்டி வருகிறார். விளம்பரப்படுத்துவது ஒரு பக்கம். தன்னுடைய மகனுக்கு பட்டாபிஷேகம் செய்யும் அந்த எண்ணத்திலே இருக்கிறார்.
தேர்தல் நேரத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது. இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் தருவோம் என்றார்கள். இதுவரை தரவில்லை. ஒவ்வொரு முறையும் தருவோம், தருவோம் என்று சொல்கிறார்கள்.
எப்போது தருவார்கள். 2026 சட்டமன்ற தேர்தல் வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் தருவீர்களா நீங்கள். கேஸ் சிலிண்டருக்கு மானியம் தருவோம் என்று சொன்னீர்கள். அதுவும் தரவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என்று சொன்னார்கள்.
இதற்கும் எந்த பதிலும் இல்லை. நீட் வரவே வராது. ஒரு கையெழுத்தில் இதனை முடித்து விடுவோம் என்று சொன்னீர்கள். இதையும் முடிக்கவில்லை. இதுபோன்று 500 வாக்குறுதிகளை சொன்னீர்கள். மக்கள் எதிர்பார்க்கும் வாக்குறுதிகளை இந்த விடியா அரசு நிறைவேற்றவில்லை.
மக்கள் எதிர்பார்க்காத வாக்குறுதிகளை சிலவற்றை நிறைவேற்றிவிட்டு, நாங்கள் நிறைவேற்றி விட்டோம், நிறைவேற்றி விட்டோம் என்று மார்தட்டி விளம்பரப்படுத்தி அதன்மூலம் கோயபல்ஸ் பிரச்சாரத்தை செய்து வருகிறது இந்த விடியா திமுக அரசு. இவையற்றை எல்லாம் செய்து மக்களை கவனிப்பதை விட்டுவிட்டு வழக்குப் போடவேண்டும்,
அ.தி.மு.க.வை அழிக்க வேண்டும், முன்னாள் அமைச்சர் மீது பொய் வழக்குப் போடவேண்டும், கழக முன்னோடிகள் மீது பொய் வழக்கு போட வேண்டும், இதுபோன்ற பணிகளைத் தான் இந்த ஒரு வருடமாக செய்து வருகிறார்கள்.
தொடர்ச்சியாக காவல்துறையை கையில் வைத்துக்கொண்டு, லஞ்ச ஒழிப்புத்துறையை முன்னாள் அமைச்சர்கள் மீது ஏவி விட்டு, ரெய்டு என்ற போர்வையிலே முன்னாள் அமைச்சர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தலாம், அவரின் கழக பணிகளில் தொய்வை ஏற்படுத்தி,
அதன் மூலம் கழகத்தை இல்லாமல் ஆக்கி விடலாம் என்றால் பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடும் என்று நினைக்குமாம் அதுபோலத்தான் இதுவும்.
கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலத்தில் அம்மா மீது ஏகப்பட்ட வழக்குகள், அதேபோல 1972ல் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் கழகத்தை ஆரம்பிக்கும் போது எவ்வளவு அடக்குமுறைகள், தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
உதயகுமார், அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் இறந்து போனார். வத்தலகுண்டு ஆறுமுகம், பூலாவாரி சுகுமாரன் இவர்கள் அனைவரும் ரத்தம் சிந்தி வளர்த்த இயக்கம். இப்படி அடக்குமுறைகளை தாண்டி, வழக்குகளை எல்லாம் தாண்டி, நீதிமன்றத்தை சந்தித்து ஒரு புடம்போட்ட தங்கமாக அ.தி.மு.க ஜொலித்தது.
இப்படி வழக்குகள் மூலம் அழித்து விடலாம் என்று நினைத்தால் அது நடக்காது. தற்போது முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வீடுகளில் ரெய்டு நடக்கிறது. 49 இடங்களில் ரெய்டு நடக்கிறது. உறவினர் இருக்கக்கூடாதா. அவருக்கு நண்பர் இருக்கக்கூடாதா.
அவரை அசிங்கப்படுத்த வேண்டும், கொச்சைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அவருடைய வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையை விட்டு ரெய்டு நடத்தி களங்கம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது.
அ.தி.மு.க என்பது அமுக்க முடியாத ஒரு பந்து. தண்ணீரில் பந்தை அமுக்க முடியுமா. அது மேலே தான் வரும். அதுபோல எத்தனை அடக்குமுறை வந்தாலும் சரி நீதிமன்றத்தில் சந்திப்போம். வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் ஒரு மக்கள் பணி செய்தால் அவர் மீதும் ஒரு வழக்கு போடுகிறார்கள்.
ஜனநாயக கடமையை செய்ய விடாமல் தடுத்த ஒரு ரவுடியை பிடித்து அளித்ததற்கு என் மீது நான்கு வழக்கு. கிட்டதட்ட 25 பிரிவுகளின் கீழ் வழக்கு. எப்படிப்பட்ட கொடுங்கோல் அரசு இன்றைக்கு தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கின்றது. கழக முன்னோடிகள் மீது வழக்கு போட்டு கழகத்தை அழித்து விடலாம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது.
அது பூனை பகல் கனவு கண்டது போல தான் ஆகும். வரும் பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் இதற்கு சரியான தீர்ப்பை வழங்குவார்கள்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.