மற்றவை

நாட்டு மக்கள் மீது தி.மு.க. அரசுக்கு அக்கறை-ஈவு, இரக்கம் கிடையாது – கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு

சென்னை,

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசுக்கு நாட்டு மக்கள் மீது அக்கறை, ஈவு, இரக்கம் கிடையாது எ்னறு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“சொன்னதை செய்வோம்” என சொல்லி பல வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள தி.மு.க., சொல்லாததை செய்கின்ற அரசாக, மக்கள் விரோத செயல்களை மேற்கொள்கின்ற அரசாக, விலைவாசி உயர்விற்கு வழிவகுக்கின்ற அரசாக, மொத்தத்தில் மக்களை வாட்டி வதைக்கின்ற அரசாக விளங்கி கொண்டிருக்கின்றது.

அனைத்து தரப்பு மக்களின் நலத்தையும் கருத்தில் கொண்டு, பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று தி.மு.க. அரசு வாக்குறுதி அளித்திருந்தது. ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலையை மட்டும் லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தது.

தி.மு.க. அரசு 7-5-2021 அன்று ஆட்சி பொறுப்பை ஏற்றபோது, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 93 ரூபாய் 17 காசுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 86 ரூபாய் 65 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று பதினோறு மாதங்கள் கடந்த நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 110 ரூபாய் 95 காசுக்கும், டீசல் விலை 101 ரூபாய் 04 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதாவது, பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 ரூபாய் 78 காசும், டீசல் விலை லிட்டருக்கு 14 ரூபாய் 39 காசும் உயர்ந்துள்ளது. மத்திய அரசு 6 மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் விலையினை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலையினை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்ததாலும், தமிழ்நாடு அரசு பெட்ரோலுக்கு மட்டும் 3 ரூபாய் குறைத்ததாலும் இந்த நிலைமை.

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தாலும், இன்றைய நிலவரப்படி மதிப்பு கூட்டுவரி மூலம் மாநில அரசிற்கு வரும் வருமானம் தினசரி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதேபோல டீசல் விலையிலும் மதிப்பு கூட்டுவரி மூலம் வருமானம் கூடிக்கொண்டே போகிறது. இதுதவிர, இரட்டை டீசல் விலை கொள்கை மூலம் மேலும் கூடுதல் வருமானம் கிடைத்து கொண்டிருக்கிறது.

2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 90 ரூபாய் 18 காசு என்று இருக்கின்ற போது, டீசல் விலை லிட்டருக்கு 83 ரூபாய் 18 காசு என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்ட போது இது அனைத்து தரப்பு மக்களையும் அதிகமாக பாதிக்கிறது என்று அறிக்கை விட்ட எதிர்க்கட்சி தலைவர், முதலமைச்சரான பிறகு, வாக்குறுதி கொடுத்து விட்டோமே என்பதற்காக பெட்ரோல் விலையை மட்டும் 3 ரூபாய் குறைத்து விட்டு அதுபற்றி பேசுவதை கூட நிறுத்தி விட்டார்.

அப்போது மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியவர் இன்றைக்கு மாநில அரசு சார்பிலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்காமல், மத்திய அரசையும் வற்புறுத்தாமல் வாய்மூடி மவுனியாக இருக்கிறார்.

இரட்டை டீசல் விலையை கூட தட்டி கேட்கவில்லை. இதற்கு காரணம் என்ன? மாநில அரசுக்கு கூடுதலாக வருமானம் வந்து கொண்டிருக்கிறது என்பது தான். மாநில அரசுக்கு கூடுதல் வருமானம் வந்தால் சரி, மக்கள் எக்கேடு கெட்டு போனால் என்ற நிலையில் தி.மு.க. அரசு இருக்கிறது போலும்! அதனால் தான், மக்கள் மீது எந்தெந்த வரிகளை போடலாம், எந்தெந்த வரிகளை உயர்த்தலாம், மக்களிடமிருந்து எந்தெந்த வழியில் பணத்தை பெறலாம், எந்தெந்த மக்கள் நலத்திட்டங்களை ரத்து செய்யலாம் என்ற ஆலோசனையில் தி.மு.க. அரசு ஈடுபட்டு இருக்கிறது.

தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கை மக்கள் மீதுள்ள அக்கறையின்மையையும், ஈவு இரக்கமற்ற தன்மையையும் படம் பிடித்து காட்டுகிறது. இந்த நிலைமை நீடித்தால் வாகன கட்டணங்கள் உயர்ந்து, அதன் விளைவாக விலைவாசி உயரும் சூழ்நிலை ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படக்கூடும்.

பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் ஏறி கொண்டிருக்கின்ற நிலையில், பெட்ரோல், டீசல் மூலம் தமிழ்நாடு அரசுக்கு வருகின்ற வருவாய் தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருவதை கருத்தில் கொண்டு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பெட்ரோல் விலையை மேலும் இரண்டு ரூபாய் குறைக்கவும், டீசல் விலையை லிட்டருக்கு நான்கு ரூபாய் குறைக்கவும், மத்திய அரசின் சார்பில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தேவையான அழுத்தத்தை கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.